மோசமடையும் மனிதப் பேரவலம்

ஐக்கிய நாடுகள் சபை, அரசசார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றின் திட்டங்களுக்கு அமைவாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கோதாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ள தருணம் முக்கியமானது. அதேவேளையில், இதன் பின்னணியிலுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்வதும் அவசியமானது. யுத்தத்தின் பிடிக்குள் சிக்குண்டுள்ள வன்னிப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு எவ்விதமான ஆதரவும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கருத்து உணர்த்துவதாக உள்ளது.

வன்னிப் பகுதியில் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றது. விமானக் குண்டு வீச்சு, ஆட்லறி தாக்குதல்கள் என்பவற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இதனைவிட ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலினாலும் வன்னிப் பிராந்தியத்தில் பெருந்தொகையானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதென்ற படையினரின் இலக்கு ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்திருக்கின்றது. இடம்பெயர்ந்த மக்கள் உணவுக்கும் இருப்பிடத்துக்காகவும் நாயாக அலையும் நிலையில் வன்னியில் குறைந்தபட்ச உதவிகளையாவது வழங்கக்கூடியதாக இருந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டிருக்கின்றன.

மனிதநேய அமைப்புக்களின் பணி மிகவும் அவசியம் தேவையாகவுள்ள ஒரு தருணத்தில் அவை வெளியேற்றப்பட்டிருப்பது மக்களுடைய அவல நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதுதான் மனிதநேய அமைப்புக்களின் பிரதான பணி. அத்துடன், யுத்தம் ஒன்றின்போது கடைப்பிடிக்க வேண்டிய மனிதாபிமானச் சட்டங்கள் பலவற்றையும் ஐ.நா. வரையறுத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு என்பது அதில் முக்கியமானது. அதாவது போரில் சம்பந்தப்படாத தரப்பினர் யுத்தத்தில் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இருதரப்பினருக்கும் உள்ளது. ஆனால், இங்கு இடம்பெறும் யுத்தத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்களே அதிகமாகவுள்ளது.

இவ்வாறு யுத்தம் தீவிரமடைந்துள்ள ஒரு நிலையில் மனிதநேய அமைப்புக்கள் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது ஒரு மனிதாபிமானப் பிரச்சினைகளை அப்பகுதியில் தீவிரமடையச் செய்திருப்பது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் அங்கு இடம்பெறக்கூடிய மரணங்களுக்கு சாட்சிகள் இல்லாத ஒரு நிலைமையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இது ஒரு ஆபத்தான நிலை என மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

வன்னி நிலைமைகள் இவ்விதம் மோசமடைந்து செல்லும் ஒரு பின்னணியிலேயே ஐ.நா. மற்றும் மனிதநேய அமைப்புக்களின் திட்டங்களுக்கு அமைவாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். பாதுகாப்புச் செயலாளரின் இந்த அறிவிப்பு இரண்டு விடயங்களை உணர்த்துவதாக உள்ளது. ஒன்று இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்பது இதன் மூலமாக உணர்த்தப்பட்டிருக்கின்றது. இரண்டு ஐ.நா. போன்றவற்றின் திட்டங்களுக்கு உட்பட்டு யுத்தத்தை முன்னெடுக்கப்போவதில்லை எனக் கூறியிருப்பதன் மூலம் யுத்தம் மோசமான ஒரு கட்டத்துக்குச் செல்லவிருப்பதையும் உணர்த்துகின்றது.

சர்வதேச ரீதியாக இடம்பெறும் யுத்தங்களுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் நிலைமை அவ்வளவு மோசமானதல்ல எனவும் கோதாபய ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். எந்த அடிப்படையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார் என்று தெரியவில்லை. ஆனால், உப்சலா பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, மோசமான முறையில் அதிகளவு உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் யுத்தங்களின் வரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. ஈராக் முதலாவது இடத்தையும் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ள அதேவேளையில் சோமாலியா இலங்கைக்குப் பின்னால் நான்காவது இடத்திலேயே இருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. யுத்தத்தின்போது கொல்லப்படும் போரில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே 2007 ஆம் ஆண்டுக்கான இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நிலைமை இந்தளவுக்கு மோசமாகவுள்ள போதிலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமானதாக இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. வன்னியில் தற்போது இடம்பெற்றுவரும் தாக்குதல்களும் சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதும் உப்சலா பல்கலைக்கழகம் 2008 ஆம் ஆண்டுக்காக மேற்கொள்ளும் மதிப்பீட்டில் இலங்கை முதலாவது இடத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றது. ஐ.நா. போன்றவற்றின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக யுத்தத்தை முன்னெடுக்க முடியாது என்ற கோதாபயவின் அறிவிப்பு கூட இதனை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

இலங்கையில் உருவாகியிருக்கும் இந்த ஆபத்தான நிலைமை சர்வதேச சமூகத்துக்குத் தெரியாததல்ல. சர்வதேச மனிதநேய அமைப்புக்களும் வெளியேற்றப்பட்ட ஒரு பின்னணியில் வன்னிக்கான உணவு மற்றும் மருந்துகளுக்கான அனுமதியையும் அரசாங்கம் மறுத்துள்ளது. இது ஒரு பேரவலம் அங்கு உருவாகியுள்ளமையை தெளிவாகக் காட்டுகின்றது. இந்த அவலத்தை தடுத்து நிறுத்த சர்வதேசம் எதனையும் செய்யாத நிலையில் சர்வதேச சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் தமிழர்கள் முற்றாகவே இழந்துவிடும் நிலைதான் உள்ளது.


Comments