இது பதிவு நடவடிக்கையே அல்லவாம்! வெறும் புள்ளி விவரத் திரட்டல் தானாம்!

வடமாகாணத்திலிருந்து வந்து கொழும்பில் தங்கியிருக்கும் தமிழர்கள் கட்டாயம் பொலிஸுக்குச் சென்று தங்களைப் பதிவு செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டு பொலிஸ் தரப்பில் ஆரவாரமாக விடுக்கப்பட்ட கடும் தொனியிலான பணிப்புரை தொடர்பாக இலங்கையின் உயர்நீதிமன்றத்திடம் அதிக நியாயத்தை எதிர்பார்த்த தமிழர்கள் ஓரளவுக்கு ஏமாந்துதான் போனார்கள்.

இந்தப் பொலிஸ் பதிவு, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையே அல்ல, அந்தந்தப் பகுதியில் உள்ள பிரஜைகள் குழுக்களின் ஏற்பாட்டில், அந்தந்தப் பகுதி பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வெறும் புள்ளிவிவரத் திரட்டல் செயற்பாடு மட்டுமே இது என நீதிமன்றில் கூறப்பட்ட விளக்கமும்

அதை நீதிமன்றம் "கப்' எனப் பிடித்துக்கொண்டு, அந்த விடயத்தை விவகாரமாக்காமல் புறந்தள்ளி விட்டமையும் தமிழர்கள் தரப்பில் எதிர்பாராத அதிர்ச்சிகள்.

இந்தப் பதிவுகள் குறித்து முற்கூட்டியே விடுக்கப்பட்ட அறிவித்தல்களும், பிரகடனங்களும் கடும் தொனியில், கட்டாயப்படுத்தும் பணிப்புரை போன்றே அமைந்திருந்தன. புள்ளி விவரங்களைப் பெறுவதற்கான வெறும் தகவல் திரட்டும் நடவடிக்கைதான் இது என்று ஆரம்பத்தில் கோடிகூடக் காட்டப்படவில்லை

பிரஜைகள் குழுக்களின் ஏற்பாட்டிலான செயற்பாடு இது என்றும் நீதிமன்றம் ஏற்கும் வகையில் பின்னர் கருத்துக்கூறப்பட்டது.

எந்தப் பிரஜைகள் குழுவும் இந்நடவடிக்கையில் சம்பந்தப்படுவது குறித்த எந்த அறிவிப்பும் முற்கூட்டியே வெளியாகவுமில்லை. பின்னர் நீதிமன்றத்தில் முதல் தடவையாக அதுபற்றிப் பிரஸ்தாபித்ததைத் தவிர.

சரி. பதிவு நடைபெற்ற சமயத்தில் கூட அத்தகைய பிரஜைகள் குழு ஏதும் அதில் சம்பந்தப்பட்டதாகப் பதியச் சென்ற தமிழர்களுக்கோ, அதைப் பார்வையிடச் சென்ற தமிழ்ப் பிரமுகர்களுக்கோ அறியவரவில்லை.

எனினும், அரசுத் தரப்பில் பொலிஸ் தரப்பில் இப்போது நீதிமன்றைச் சமாளிக்கும் விதத்தில் "சளாப்பல்' கருத்தாக முன்வைக்கப்படும் விடயத்தை இது, வெறும் புள்ளி விவரம் திரட்டும் நடவடிக்கைதான் என்ற விளக்கத்தை ஒரு பேச்சுக்கு அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

வடமாகாணத்திலிருந்து கடந்த ஐந்து வருடத்துக்குள் வந்த அனைவரையும் பதிவு மையத்துக்கு பொலிஸ் நிலையத்துக்கு வரவேண்டும் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர்.
நேற்றுப் பிறந்த குழந்தையானாலும் சரி, நாளை சாகக்கிடக்கும் வயோதிபரானாலும் சரி, முழுவரையுமே பதிவு மையத்துக்குக் கட்டாயம் கூட்டி வந்துதானாகவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

புள்ளிவிவரம் திரட்டுவது என்றால் இப்படித்தான் திரட்டுவதா? கணக்கெடுப்புக்கு, சம்பந்தப்பட்ட குடும்பம் ஒவ்வொன்றின் சார்பில் ஒவ்வொருவர் குறிப்பாகக் குடும்பத் தலைவர் வந்தால் போதுமானதே. அவர் மூலம் சகல விடயங்களையும் பதிந்து, புள்ளிவிவரங்களைத் திரட்ட முடியுமே.

அதைவிடுத்து குடும்பத்தவர்கள் அனைவரையும் நேரில் பதிவு செய்வதற்கு அழைத்து வரவேண்டும் என்று கடும் உத்தரவுத் தொனியில் அறிவித்தல் விட்டுவிட்டு, அதை இப்போது புள்ளி விவரத் திரட்டு முயற்சி எனக் குறிப்பிட்டு ,

"முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைக்கும்' நடவடிக்கை எடுக்கப்படுவதும், அந்தச் சாக்கில் இந்த அதிகார மீறலை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் எத்தனங்களுக்கு எல்லாத் தரப்பிலும் ஒத்துழைப்புக் கிடைப்பதும் தமிழர்களை அதிர்ச்சிக்குள் ஆழத்தியிருக்கின்றது. அழுவதா, சிரிப்பதா என்று தெரியாத இக்கட்டில் தடுமாறுகிறார்கள் தமிழர்கள்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தென்னிலங்கையின் சிந்தனை இப்போது ஒரே பக்கமாகத் திரும்பிவிட்டது.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அழித்தொழித்து, இல்லாமல் செய்து விடலாம் என்ற முழு நம்பிக்கை தென்னிலங்கையின் முழுமையையும் ஆக்கிரமித்து ஆகர்ஷித்து நிற்கின்றது.

இந்த நம்பிக்கைச் சிந்தனைப் போக்கின் அடிப்படையில் தென்னிலங்கையின் சகல அலகுகளுமே சில தீர்மானங்களை எடுத்து நிற்கின்றன.

ஒன்று புலிகளை அழித்ததும், தெற்குப் போடும் "தீர்வுப் பிச்சையை' எந்த எதிர்ப்பும் காட்டாமல் அப்படியே ஏற்று அடங்கிப் போவதைத் தவிர தமிழர் தரப்புக்கு மாற்று மார்க்கம் வழி ஏதும் இல்லை.

ஆகவே, அதுவே நல்லது. அதுவே நடக்கட்டும் என்ற முடிவு.
அடுத்தது அப்படிப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் தரப்புகளுக்கு எந்த நீதி, நியாயத்தின் அடிப்படையிலும் எத்தகைய இடைஞ்சலையும் ஏற்படுத்தி விடக்கூடாது.

இதுதான் சிங்களத்தின் மூளையத்தின் இன்றைய ஏக சிந்தனைப் போக்காகும்.
அமைதிப் பேச்சுக்கு முயலுங்கள், சமாதானத் தீர்வு காணுங்கள், அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடுங்கள் என்றெல்லாம் தென்னிலங்கையில் இதுவரை கூறிவந்த தரப்புகள் கூட இப்போது அடங்கி மௌனித்துப் போய்விட்டதன் பின்னணி இதுதான்!

இராணுவ ரீதியில் தமிழர்களை அடக்கி, அரசு தான் விரும்பியதைச் சாதிக்கப் போகின்றது என்ற நம்பிக்கையில் அந்த முயற்சிக்குக் குந்தகம் ஏற்படாமல் நடந்துகொள்வதைத் தெற்கின் சகல தரப்புகளும் உறுதிப்படுத்திக் கொள்கின்றன.

நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்லவே.....!


Comments