அஹிம்சைப் போராட்டமும் அணுவாயுத போட்டியும்

செப்டெம்பர் 26 தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் மாறுதல்களும் அம்மாறுதலிற்கான உந்து விசையாக திகழ்ந்த இரு பெரும் போராளிகள் மரணித்த தினமாகும்.
கேணல் சங்கரும், லெப் கேணல் திலீபனும் ஏற்படுத்திய அரசியல் இராணுவ புதிய பரிமாணத் தளங்கள் விடுதலையை முன்னோக்கி நகர்த்திச் öசல்லும் நெம்பு கோல்களாகப் பரிணமித்தது மறுக்க முடியாத நிஜங்களாகும்.

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பு மேற்கொண்ட தியாகி திலீபன் தற்கொடையின் உச்சத்தை தொட்டு விட்டான்.

1. தமிழ் மண்ணில் இருந்து இலங்கை இராணுவம் விலகிக் கொள்ள வேண்டும்.
2. மணலாறில் முடுக்கி விடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
3. வட, கிழக்கில் இடைக்கால ஆட்சி அமையும்வரை சகல மீளமைப்பு வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களவர்களைக் கொண்ட காவல் துறை திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
5. அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்த ஐந்து கோரிக்கைகளையும் இந்திய அரசை நோக்கி விடுத்து, இறக்கும் வரையான நீர் அருந்தா உண்ணா நோன்பினை மேற்கொண்டார் இராசையா பார்த்தீபன்.


பண நோட்டுகளில் காந்தியை அமர்த்தியிருக்கும் பாரத தேசம், திலீபனின் காந்திய வழிப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை.இந்தியாவின் பிராந்திய ஆதிக்கச் சுயநலம், அஹிம்சைப் போராட்டத்தின் உள்ளார்ந்த ஆத்ம வலிமையை உணரும் பக்குவத்தைக் களவாடிச் சென்றுள்ளது.

திலீபனின் நினைவை நெஞ்சில் இருத்தி தாயகக் கவி புதுவை இரத்தின துரை எழுதிய கவிதையொன்றில்

“”மரணம் வாழ்வின் முடிவு
உனக்கு….
மரணமே வரலாற்றின் தொடக்கம்
நீ…. ஒரு வரலாறு
சரித்திரமே உன் சாவு”

நசுக்கப்படும் இனக் கூட்டத்திலிருந்து ஆயுதமேந்திய விடுதலைப் பணியைத் தொடங்கிய திலீபன், காந்தி தேசத்திற்கு புரியும் வகையில் முன்னெடுத்த அஹிம்சா வழி தற்கொடைப் போராட்டத்தை பலவீனத்தின் வெளிப்பாடாகக் கருதியது இந்திய தேசம்.

அஹிம்சையின் அதியுச்ச போராட்ட வடிவத்தை ஏளனம் செய்த இந்தியத் தூதர் ஜே.என். டிக்சிட் , பின்னாளில் புலிகளை சுருட்டுக் கதை சொல்லி, விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினாரென்பதை தற்போது நினைவு கூர வேண்டும்.

திலீபன், தனது சாவை தானே நிர்ணயித்து சாவுக்கு முன் சொன்ன செய்தி இக்கால கட்டத்திற்கு மிகவும் சரிவரப் பொருந்துவதை அவதானிக்கலாம்.

“”நான் என் உயிரிலும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.

இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும். அனைவரும் எழுச்சி அடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது.”

இது மரண வாக்கு மூலமல்ல, போராட்டப் பாதையை அழித்திட, அமைதிப் படை ஊடாக இந்தியா விதித்த பொறியை அறுத்தெறிய, தனதுயிரை அஹிம்சையின் ஆயுதமாக்கிய போராட்டச் சித்தனின் மக்கள் புரட்சிக்கான அறை கூவல் இது.

ஆயினும் நவீன உலகின் அஹிம்சைப் போராட்ட பரிமாணத்திற்கு சாவு மணி அடித்த பெருமை, காந்தி தேசத்தைச் சாருமென்பதே மிகவும் சோகமானது.காந்தியின் போதனைகள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த குடிலும் இந்திய நூதனசாலைகளில் சமாதியாகி விட்டது.

அணு ஆயுதப் போட்டியில் களமிறங்கியுள்ள இந்தியா, தேசிய இனங்களின் மனித அவலங்கள் குறித்து கரிசனை கொள்ள வேண்டுமென கற்பிதம் கொள்வது நடைமுறை புரியாத தத்துவங்களை உருவாக்க உதவும்.

ஓர் அணு ஆயுத நாடானது, தான் தரித்து நிற்கும் பிராந்தியத்தின் ஏகபோக ஆதிக்கத்தை நிலை நாட்டி, அமெரிக்கா போன்றதொரு ஏகாதிபத்திய நிலையை அடைய வேண்டுமாயின் ஜனநாயகம், மனித உரிமைகள், மக்கள் நலன் போன்ற தேவையில்லாத விவகாரங்களை ஒருபுறம் ஒதுக்கி வைக்க வேண்டும்.

40 வீதமான மக்கள் ஏழ்மைக் கோட்டிற்கு கீழே வசித்தாலும் அணு மூலப்பொருட்களை இறக்குமதி செய்து அணுச் செறிவாக்கத்தை விரிவுபடுத்துவதையே இத்தகைய நவீன பிராந்திய ஆதிக்கவாசிகள் மேற்கொள்வார்கள்.

சீன தேசம் போன்று தானுமொரு பொருளாதார, இராணுவ வல்லாதிக்கவாதியாக வர வேண்டுமென்கிற ஆசை இந்தியாவிற்கு உண்டு.

இத்தகைய இந்திய சீன பிராந்திய முரண்பாடுகளை, மிக இலாவகமாகக் கையாளும் மேற்குலகின் அதிபதியான அமெரிக்கா, இந்தியாவை வளர்ப்பதன் மூலம், சீனாவிற்குப் போட்டியான தேசமொன்றை ஆசியாவில் கட்டி எழுப்பலாமென்று கணிப்பிடுகிறது.

மேற்குலகின் தலைவனாகத் தான் விளங்குவது போன்று, வேறொரு பிராந்தியத்தில் தன்னைப் போல் இன்னொருவன் உருவாகக் கூடாதென்பது அமெரிக்காவின் ஓருலகக் கோட்பாட்டின் ஒரு பகுதியாகும்.

அதாவது ஆசியப் பிராந்தியத்தில் பூதாகரமாக வளர்ந்துள்ள சீனாவின் பொருளாதார, இராணுவ பலத்தினை பலவீனமடையச் செய்வதற்கு அணு சக்தி ஒப்பந்தமூடாக இந்தியாவுடன் அணி சேர்ந்துள்ளது அமெரிக்கா.

மாபெரும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மூடப்பட்டு, பாரியஅரசியல், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அமெரிக்கா, எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறது.ஆகவே ஆசியப் பிராந்தியத்தில் ஒரு தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக சீன தேசம் உருவாவதை எவ்வழியிலாவது அமெரிக்கா தடுக்கவே முனையும்.

தாய்வான், திபெத், தென் கொரிய நாடுகள் ஊடாக உருவாக்கும் சேதத்தை விட பிராந்திய அணு ஆயுத சக்தியொன்றினூடாக அதாவது சீனாவிற்கான மூலப் பொருட்களைக் காவிச் செல்லும் கடற்பாதையில் அமைந்துள்ள ஒரு நாட்டுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி முரண் நிலைச் சக்தியின் வளர்ச்சியை சிதைக்கலாமென்பதே அமெரிக்காவின் ஓருலகத் தந்திரோபாயம்.ஆகவே அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்திய தேசமானது ஒரு குறுகிய கால நண்பனாக அமையப் போகிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனாவிற்கு கொண்டு செல்லப்படும் எரிசக்தி, கனிம மூலப் பொருட்களின் கடல் வணிகப் பாதையில் இலங்கைஎனும் தென்னாசியக் கேந்திர மையம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பிராந்திய ஆதிக்கப் போட்டியில் மறைமுகமான மோதல்களில் ஈடுபட்ட சகல தரப்பினரும் ஏதோவொரு வகையில் இலங்கை விவகாரத்தில் தமது சுய முகத்தை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகலாம்.நோர்வேயின் சமாதான காலத்தில் மூன்று திசைகளில் பயணித்த மேற்குலகம், இந்தியா, சீனா போன்றவை இலங்கை அரசாங்தக்தின் ஒப்பந்தக் கிழிப்பாலும் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தினாலும் இரு திசைகளில் நகர ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் பங்களிப்பானது இலங்கை விவகாரத்தில் அதிகரிப்பதோடு புதிய அமெரிக்க இந்தியக் கூட்டணியின் ஆதரவும் பெருக்கமடையலாம்.

ஆனாலும் மேற்குலக, இந்திய நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கும் சீனா, தனது காய்நகர்த்தல்களை எங்கிருந்து ஆரம்பிக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆகவே எவருடைய தயவையும் நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாதென்கிற திலீபனின் கூற்றினை ஏற்றுக் கொள்வதே சரியான நிலைப்பாடாக அமையும்.

- சி.இதயச்சந்திரன் -



Comments