புலிகளுக்கு எதிரான கூட்டில் ஆசிய வல்லாதிக்க சக்திகள்

ஆசியப் பிராந்தியத்தில் மிக முக்கிய சிக்கல்களுள் ஒன்றாகியிருக்கும் இலங்கை இனப்பிரச்சினை, அதன் விளைவான பெரும் உள்நாட்டுப் போர் ஆகியவை தொடர்பில் ஆசிய வல்லாதிக்க சக்திகளின் ஈடுபாட்டைத் தொட்டுக்காட்டி ஆய்வுக் கட்டுரை ஒன்று நேற்றுக் கொழும்பு ஆங்கிலத் தினசரி ஒன்றில் வெளியாகியிருக்கின்றது.

அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில அம்சங்கள் சுவாரசியமானவை; கூர்ந்து சிந்திக்கத்தக்க கருத்து நிலைப்பாட்டைக் கொண்டவை.

இந்த ஆசியப் பிராந்திய விடயங்களில் தலைமைத்துவத்துக்கு பிராந்திய வல்லாதிக்கச் "சண்டித்தனத்துக்கு' போட்டியிடுகின்ற பிரதான சக்திகள் இந்தியாவும் சீனாவும் என்பது வெளிப்படையாக யாவருக்கும் தெரிந்த உண்மை.

அதேபோல, இந்திய உபகண்டப் பிரதேசத்திலே தமது செல்வாக்குக்காகத் தங்களுக்குள் முட்டி, மோதிக் கொண்டிருக்கும் பிரதான தரப்புகள் நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானுமாகும்.
1947 இல் இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனியாகப் பிரிந்து இரு வெவ்வேறு சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்குள் பரம வைரிகள் போல கீரியும் பாம்பும் போல முட்டியும் மோதியும், இழுபறிப்பட்டும் பழகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷைத் தனிநாடாகப் பிரிக்கப் பண்ணியதிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கறுவிக் கொள்ளும் அளவுக்கு மோசமடைந்திருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இரு நாடுகளுமே காலாகால எதிரிகள் போலவே பழகிக்கொண்டிருக்கின்றன என்பதும் அறிந்த விடயம்தான்.

ஒரு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுக்கும் சார்புப் போக்குக்கு மாறான போக்கையே இந்தியா எடுக்கும் என்று துணிந்தும் முற்கூட்டியே அப்பட்டமாகவும் கூறமுடியும் என்ற அளவுக்கு அவற்றுக்குள் முரண்பாடு ஆழமானவை.

இவ்வாறு தங்களுக்குள் வேறுபட்டு நிற்கும் இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய முத்தரப்புகளையுமே கொழும்பின் சட்டைப்பைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன இத்தணூண்டு சிறிய தீவான இலங்கையின் சாதுரிய அரச நிர்வாகத்தின் தந்திரோபாய அரசியல் நகர்வுகள்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசின் இராணுவ நடவடிக்கைகளில் இந்தியத்தரப்பு நேரடியாகப் பங்குபணி ஆற்றுவது பற்றிய உண்மை கடந்த வாரம் வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் அம்பலமாயிற்று என்பது தெரிந்ததே.

இதற்கு முன்னரே, புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைப் படைகளுக்கு ஆயுதத் தளபாட விநியோகம் மற்றும் இன்னோரன்ன உதவிகளைப் பாகிஸ்தானும், சீனாவும் வெளிப்படையாகவே வழங்கிவந்தன என்பது தெரிந்ததுதான்.

இப்போது இந்தியாவின் நேரடி உதவியும் இலங்கைத் தரப்புக்குக் கிட்டுவது வைகோ கூறுகின்றமைபோல "கையும் களவுமாக'ப் பிடிபட்டு, வெளிப்பட்டுவிட்டது.

ஆக இந்து சமுத்திரப் பிரதேசத்தில் தமக்குள் ஆதிக்கச் செல்வாக்குக்காகப் போட்டியிட்டு முட்டிமோதி, கன்னை பிரிந்து நிற்கும் பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளுமே இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் மட்டும் புலிகளுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் தமக்குள் கைகோத்து ஒன்றுபட்டும் நிற்கின்றன என்பது உறுதியாகியிருக்கின்றது.

அதாவது, இதுவரை தமக்குள் முரண்டுபிடித்து, முட்டிமோதி நிற்கும் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை இலங்கை தன்னுடைய தேவைக்கு புலிகளுக்கு எதிரான போரில் தனது பக்கத்தில் வரிசையாக ஒன்று சேர அணிவகுத்து நிறுத்தியிருப்பதில் வெற்றிகண்டிருக்கின்றது.

அந்தவகையில், ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளைத் தனது பின்னணியில் வரிசையாக ஒன்றுசேர நிறுத்தியிருப்பதன் மூலம், புலிகள் மீதான தனது போரை "இலங்கையின் யுத்தம்' ஆக முன்னெடுக்காமல் "ஆசியாவின் யுத்தமாக' ஒன்றுபட்டு முன்னெடுக்க வழி செய்திருக்கின்றது இலங்கை.

இதை "இலங்கையின் சட்டைப் பொக்கற்றுக்குள் இந்தியா'' என்ற தலைப்பிலான கட்டுரையில் அம்பலப்படுத்தியிருக்கின்றார் கொழும்பின் முக்கிய ஊடகவியலாளர் ஒருவர்.

ஈழத் தமிழர் தரப்பின் போராட்ட சக்தியை நசுக்குவதற்காக "கூடாத கூட்டத்தில் சேர்ந்திருக்கிறது இந்தியா!' என்பதே அக்கட்டுரையாளர் அம்பலப்படுத்தவரும் உண்மையாகும்.

""இந்தியாவே! இது நியாயமா?'' என்று புதுடில்லியைப் பார்த்துக் கேள்வி எழுப்புகின்றார்கள் தமிழர்கள்.

அதேசமயம், இப்படி முழு ஆசிய நாடுகளின் கூட்டையே ஆசியப் பிராந்திய வல்லமையையே தனித்து ஒருவராக எதிர்கொள்ளப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் எவ்வாறு இயலுகிறது என்ற அக்கட்டுரையாளரின் வியப்பும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகிறது.


Comments