இலங்கைத் தமிழ் மக்களுக்கான தமிழகத் தலைவர்களின் பணி

வவுனியாவில் படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த செவ்வாயன்று நடத்திய அதிரடிப் பாய்ச்சல் தாக்குதல் நடவடிக்கையின்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இந்திய விமானப்படையின் இரு சார்ஜண்டுகள் காயமடைந்த விவகாரம், எதிர்பார்த்தபடியே தமிழக அரசியலில் ஒரு பெரும் சூட்டைக் கிளப்பியே இருக்கின்றது.

இந்தியா, இலங்கைக்கு வழங்கிய "இந்திரா' ரக "ராடர்' களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இப்படிக் காயமடைந்தவர்கள் என்று இந்தியத் தூதரகம் சமாளிக்க முற்பட்டாலும் கூட

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இந்தியப் படைகளின் நேரடிப் பங்களிப்புப் பிரசன்னத்தை இச்சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கின்றது என்றே தமிழகக் கட்சிகள் கருதுகின்றன.

இதுபற்றிய குட்டு அம்பலமானமையை அடுத்துத் தமிழகக் கட்சிகள் தம்பாட்டுக்கு சீறத் தொடங்கியிருக்கின்றன.

தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான ஆளும் தி.மு.கவும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் இவ்விடயத்தில் தொடர்ந்து அதீத மௌனம் பேணி, பேசாமல் இருந்து வருகின்றமையும் தமிழகத்தில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

""இந்திய அரசு தனது இராணுவத் தரப்பினரையே இந்த யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைத்திருக்கின்றது என்றால் இந்திய அரசும் சேர்ந்து குற்றவாளியாகியுள்ளது என்பது அம்பலமாகிவிட்டது. இப்படி மறைமுகமாக இலங்கை அரசுக்கு உதவியுள்ள இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.'' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் த.பாண்டியன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் தற்போதைய காங்கிரஸ் அரசு மத்தியில் நிலைகொண்டிருப்பதற்குக் கடந்த மாதம் வரை முண்டுகொடுத்து உதவி வந்த இடதுசாரிக் கட்சிகளுள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிரதானமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு நேரடியாக இராணுவ ரீதியான ஆளணி உதவிகளை வழங்கியதன் மூலம் இந்திய அரசு புரிந்திருக்கும் "குள்ளநரித்தன' செயற்பாடு குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும், நியாயம் கேட்கப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கோடி காட்டியிருக்கின்றார்.

அதேநேரம் இந்தியாவில் மாற்று அரசு அமைக்கக்கூடிய வலுவுடைய பிரதான கட்சி என்று கருதப்படும் பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் இல.கணேசன் இன்னும் சற்று சூடாக நியாயம் உரைத்திருக்கின்றார்.

""இலங்கையில் ஈழத் தமிழர்கள் தமது வாழ்வுரிமைகளை இழந்து, சம உரிமைகளுக்காக நியாயம் கேட்டு போராடி வருகின்றார்கள். இந்நிலையில் இந்தியா ஒன்றில், தமிழர்களுக்கு நேரடியாக உதவ முன்வரவேண்டும்; இப்பிரச்சினை பக்கத்து நாட்டில், பண்பாட்டு ரீதியாகத் தொப்புள் கொடி உறவுகொண்ட ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இந்தியா இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு அங்கு தமிழர்களுக்கு நியாயமான சமத்துவ உரிமை கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

அல்லது, இரு தரப்புகளுக்கும் ஆதரவளிக்காமல் அது நடுநிலையாகச் செயற்படவேண்டும்.

ஆனால் இந்திய அரசு அப்படி நடக்கவில்லை.


இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்களே இப்போது இலங்கையில் காயப்பட்டிருக்கின்றார்கள் என்றால், இந்தியா இலங்கைக்கு இரகசியமாக உதவுகின்றது என்பதே அம்பலமாகியிருக்கிறது. இது நல்லதல்ல.'' இப்படி பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் இல. கணேசன் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஏனைய பல இடதுசாரித் தலைவர்களும் மற்றும் வழமைபோல விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன், மறுமலர்ச்சி தி.மு.கவின் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் இராமதாஸ், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், புதிய தமிழகக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற பலரும் இவ்விடயத்தை ஒட்டி சீற்றத்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.

தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் தத்தமது கட்சிகளின் சார்பில் இவ்விகாரத்தை ஒட்டி தனித்தனியாக ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், வழிமறிப்புப் போராட்டங்கள், உண்ணாவிரத நிகழ்வுகள் என்று பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றார்கள்.

உண்மையில் இவ்விடயத்தில் ஈழத்தமிழர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதுதான் அவர்களின் இலக்கும்,நோக்கமுமாக இருக்குமானால்

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை வைத்துத் தமது சொந்த அரசியலை நடத்துவதும் குறுகிய அரசியல் லாபங்களைத் தேடிக்கொள்வதும் அவர்களது எத்தனமாக இல்லாது இருக்குமானால்

இவ்விடயத்திலாவது ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுபட்டுக் குரல் எழுப்பி, ஒரே நோக்கில் ஐக்கியப்பட்டுப் போராடி ஏதேனும் பயனுள்ளதைச் சாதிக்க அவர்கள் முன்வரவேண்டும்.


செய்வார்களா தமிழக அரசியல் தலைவர்கள்?

ஈழத்தமிழர்கள் ஆவலோடு அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதைத்தான்!

Comments