புலி பதுங்குவது பாய்வதற்கே!

திருமலைத் துறைமுகம் மீதும் கடற்படைத் தளம் மீதும் விடுதலைப் புலிகள் நடாத்திய வான் தாக்குதல் பற்றிய விசாரணைகளை நடாத்தி முடிப்பதற்கிடையில் வவுனியாவில் உள்ள வன்னி இராணுவத் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய ஆகாய மற்றும் தரைவழித் தாக்குதல் சிறி லங்கா அரசின் யுத்த வெற்றி என்ற பிரசாரத்தை அடியோடு அர்த்தமற்றதாக்கி உள்ளதுடன் விடுதலைப் புலிகள் பலம் பற்றிய மதிப்பீடுகளை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையையும் ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் அதிகாலை 3.05 மணிக்கு நடைபெற்ற இந்த ஈருடகத் தாக்குதலில் இருபதுக்கும் அதிகமான சிறி லங்காப் படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்ததாகவும் வெடிபொருட் களஞ்சியங்களும், தொலைத் தொடர்புக் கோபுரமும், தொலைத் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகமும், வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும் முற்றாகத் தாக்கி அழிக்கப் பட்டதாகவும் சிறி லங்காப் படையினரின் வன்னித் தலைமையகமும் சிறப்புப் படையணியின் வன்னித் தலைமையகமும் பெரும் சிதைவுக்குள்ளாகி இருப்பதாகவும் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. இது தவிர அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 விமானங்களும் சேதமானதாகவும் ஊர்ஜிதப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்று வருவதாக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தின் மத்தியில் ~அடிமடியில் கை வைப்பது| போன்று புலிகள் நடத்திய இத்தாக்குதலானது சிங்களப் படையினர் மத்தியிலும் ஆட்சியாளர்கள் மத்தியிலும் கிலியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

யுத்த களத்தில் ஆட்களும் ஆயுதங்களும் மட்டும் முக்கியமல்ல. மனோபலமும் முக்கியமானது. தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகள் பெருமளவிலான நிலப்பகுதியில் இருந்து பின்வாங்கி உள்ள நிலையில் அந்த இடங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ள சூழலில் அவர்களின் உளவுரண் உயர்வாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. அதேவேளை விடுதலைப் புலிகள் பின்னடைவைச் சந்திக்காமல் வேண்டுமென்றே பின்வாங்கியதால் அவர்களின் உளவுரணும் உயர்வாகவே இருக்கும்.

இந்நிலையில் அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் சிங்களப் படைகளின் உளவுரணைக் குலைப்பதாகவே இருக்கின்றன. திருமலைத் துறைமுகம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் போது துறைமுகத்தின் 3000 படையினரை ஏற்றிச் செல்லும் ஜெட் லைனர் என்ற கப்பல் நின்று கொண்டிருந்தது. புலிகள் வீசிய குண்டு கப்பல் மேல் விழுந்திருந்தால் என்ன கதி? என ஒவ்வொரு படைவீரனும் ஒரு கணம் சிந்திப்பானாகில் அவனது உளவுரணும் நிச்சயம் வீழ்ச்சியடைந்தே தீரும்.

அதேபோன்று தற்போது விடுதலைப் புலிகள் தெரிந்தெடுத்த இலக்கும் முக்கியமானது. இன்று வன்னியில் நடைபெறும் யுத்தத்தினை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் வவுனியாவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தத் தலைமையகமே தாக்குதலுக்கு இலக்காகும் போது எதனைக் காப்பது என்ற கேள்வி எழும்.

விமானத் தாக்குதல் நடத்துவது வேறு இங்கே ஒரு கட்டளைத் தலைமையகத்தினுள் 10 கரும்புலிகளும் உள்நுழைந்துள்ளார்கள். உள்நுழைந்தது மட்டுமல்லாமல் முகாமுக்குள் 2 மணித்தியாலங்கள் தரித்து நின்று சண்டையிட்டும் உள்ளார்கள். இது எவ்வாறு சாத்தியமானது?

கடந்த அக்டோபரில் இது போன்ற ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் அநுராதப்புரம் விமானப்படைத் தளத்தில் நடத்தியிருந்தார்கள். அப்படியிருந்தும் கூட விடுதலைப் புலிகள் வவுனியா கட்டளைத் தலைமையகத்தினுள் புக முடிந்து உள்ளதென்றால் அங்கு பாதுகாப்பு ஓட்டைகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ள அதேநேரம் சிங்களப் படையினரின் உளவுரணை அது நிச்சயம் வீழ்ச்சியடைய செய்திருக்கும் எனலாம்.

உயர்வான உளவுரணுடன் உள்ள எதிரியை களத்தில் எதிர்கொள்வதை விட உளச்சோர்வுடனான எதிரியை எதிர்கொள்வதென்பது மிகவும் இலகுவானதாக இருக்கும். ஏற்கனவே வன்னேரிக்குளத்தில் நடைபெற்ற மோதல் புலிகளின் பலத்தை சமர்க் களத்தில் நிரூபித்துள்ள நிலையில் தப்பியோடும் படையினர் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எண்ணலாம்.

பிரதி மாதமும் களமுனையில் இருந்து கொல்லப்பட்டும் காயமடைந்தும் சராசரியாக ஆயிரம் பேர் வரை அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தப்பியோடும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆயின் இராணுவம் நிச்சயம் தோல்வியையே தழுவ வேண்டியிருக்கும்.

தப்பியோடும் படையினரை சரணடையுமாறு கோரியும் பொது மன்னிப்பு வழங்கியும் பல்வேறு அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டும் கூட சுமார் 16,000 பேர்வரை இன்னமும் வெளியே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் படையில் மீண்டும் இணைய மறுத்த சுமார் 700 வரையிலானோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசம் அனுபவித்தாலும் பரவாயில்லை யுத்த களத்துக்குப் போக மாட்டேன் என அவர்கள் தெரிவிக்கும் செய்தியானது சிங்களப் படையினருக்கு உகந்ததாக இருக்கப் போவதில்லை.

சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பரப்புவது ஆபத்தானது என பல தரப்புக்களிலிருந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனைச் சட்டை செய்திராத சிங்களம் இனிமேல் தான் அதன் பலனை அனுபவிக்கப் போகின்றது.

அதற்குக் கட்டியம் கூறுவது போன்றே வவுனியா இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதல் அடைந்துள்ளது.

புலி பதுங்குவது பயத்தினால் அல்ல, பாய்வதற்கே| என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்து நிற்கிறது வவுனியா இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதல்.

நிலவரம் பத்திரிகை


Comments