கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரணை கைப்பற்றும் நோக்கில் வான்படையின் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்தி மற்றும் செறிவான எறிகணை சூட்டாதரவுகளுடன் தாக்குதலை மேற்கொண்டனர்.

முன்னரணை கைப்பற்றும் நோக்கில் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதில் 20-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்தனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, வன்னிவிளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று காலை பெருமெடுப்பில் நகர்வினை மேற்கொண்டனர்.

இந்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதல் மூலம் படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு முறியடிக்கப்பட்டது.

படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

அதேநேரம், இன்று காலை வன்னேரிக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் வான்படையின் தாக்குதல் துணையுடன் முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கைக்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.

Comments