தேசியத் தலைவரின் நோக்கத்தினை நிறைவேற்றும் மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி: தளபதி ஜெரி

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நோக்கத்தினை லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி நிறைவேற்றி வருகின்றது என்று வடபோர்முனை தளபதி ஜெரி தெரிவித்துள்ளார்.
களத்தில் சிறப்பாக செயற்பட்ட லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வில் கருத்துரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணியை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கினாரோ அந்த நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது.

எதிரிகளை குறிபார்த்து அதிலும் களத்தில் உயரதிகாரிகள் உள்ளிட்டவர்களை வீழ்த்தி களத்தில் பெரும் மாற்றங்களைக்கொண்டு வருவதில் சிறப்பு பதுங்கிச் சூட்டணியினரின் பங்களிப்பு முதன்மையானதாக இருக்கின்றது.

படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகளில் பதுங்கிச் சூட்டணியினர் தமது பங்களிப்பை சிறப்பாக வழங்குகின்றனர் என்றார் ஜெரி.

லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணியில் சிறப்புறச் செயற்பட்ட போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு களமுனைப் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடரை வடபோர்முனைத் தளபதி முகுந்தன் ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஏற்றினார்.

ஈகைச்சுடரை லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி சிறப்பு பொறுப்பாளர் இரும்பொறை ஏற்றினார்.

மாவீரர் திருவுருவுப்படத்துக்கான மலர்மாலையை தளபதி ஜெரி சூட்டினார்.

பதுங்கிச் சூட்டணியில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

மதிப்பளிப்பு நிகழ்வில் சிறப்புரையை நா.தமிழன்பன் நிகழ்த்தினார். கருத்துரையை தளபதி ஜெரி நிகழ்த்தினார். பரிசில்களை தளபதிகளான முகுந்தன், ஜெரி உள்ளிட்டவர்கள் வழங்கினர்.


Comments