ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி புதிய நீதிக் கட்சி தொடர் தொடருந்து மறியல் போராட்டம்

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தொடராக தொடருந்து மறியல் போராட்டங்களை நடத்தவிருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதிய நீதி கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது செயலாளர் கு.பா.பழனியப்பன், பொருளாளர் ஏ.வெள்ளைச்சாமி, இணை பொதுச் செயலாளர் ஆர்.சுப்பையா, அமைப்பு செயலாளர் சேதுராமன், தலைமை நிலைய செயலாளர் ஏ.ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக்கோரியும், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு ஈழத்தமிழர்களை பாதுகாத்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் ஏ.சி.சண்முகம் தலைமையில் தொடருந்து மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இன்று புதன்கிழமை வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொடருந்து மறியல் போராட்டமும்

எதிர்வரும் 3 ஆம் நாள் சென்னையில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டமும்

8 ஆம் நாள் புதுச்சேரி மாநிலத்திலும்

9 ஆம் நாள் சேலம் மாவட்டத்திலும்

10 ஆம் நாள் ஈரோடு மாவட்டத்திலும்

23 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலும்

26 ஆம் நாள் கோவை மாவட்டத்திலும்

28 ஆம் நாள் திருச்சி மாவட்டத்திலும் தொடருந்து மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.


Comments