வன்னி மக்களை அச்சுறுத்தும் புதிய குண்டுகள்

வன்னி மீது இலங்கை விமானப்படையினர் நடத்திவரும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களின் போது பயன்படுத்தப்படும் புதிய வகை குண்டுகளினால் அப்பகுதி மக்கள் நடு நடுங்கிப் போயுள்ளதுடன் தமது உயிர் பாதுகாப்புத் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாத நிலையில் குழம்பியும் போயுள்ளனர்.

வன்னி மீதான இராணுவ முற்றுகை கிளிநொச்சியை அண்மித்துவிட்ட நிலையில் இராணுவமும் விமானப்படையும் தனது சகல வளங்களையும் பயன்படுத்தி கிளிநொச்சி நகரை துவம்சம் செய்யத் தொடங்கிவிட்டன.

ஒருநாளைக்கு 3,4 தடவை என்ற ரீதியில் விமானத் தாக்குதல்களும் ஆயிரக்கணக்கான ஷெல் மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களும் கிளிநொச்சி மீது நடத்தப்பட்டுக் கொண்டிக்கின்றன. வன்னியிலிருந்து சகல சர்வதேச தொண்டர் அமைப்புகளும் வெளியேறிவிட்ட நிலையிலும் வன்னியினுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் இராணுவமும் விமானப்படையும் மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான, இலக்குகளற்ற கொடூர தாக்குதல்களினால் பொதுமக்களுக்கு பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் அவை வெளியே தெரிய வருவதில்லை.

இவ்வாறான நிலையை பயன்படுத்தியே வன்னி மீது புதிய வகைக் குண்டுத் தாக்குதல்களை இலங்கை விமானப்படை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சில ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்டுள்ள செய்திகளும் புகைப்படங்களும் இத் தகவல்களை உறுதிப்படுத்துவதாகவேயுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வீசப்பட்ட விமானக் குண்டுகளினால் எட்டுப்பேர் பலத்த எரிகாயங்களுக்குள்ளாகினர்.

விமானக் குண்டுகளினால் உயிரிழப்புகள், இரத்தக் காயங்கள் ஏற்படுவதே வழமை. ஆனால் தற்போது வீசப்படும் குண்டுகளினால் எரிகாயங்களே அதிகளவில் ஏற்படுவதுடன் உயிரிழப்போரின் உடல்களும் கருகிப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே வன்னி போர் முனைகளில் விமானப் படையினர் புதிய வகை எரிகுண்டுகளையும் அமுக்க குண்டுகளையும் பயன்படுத்தும் விடயம் வெளிவந்துள்ளது.

இத்தகைய குண்டுகளே அண்மையில் கிளிநொச்சி மற்றும் அக்கராயன் களமுனைகளில் வீசப்பட்டுள்ளன. ஆனால் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லை. கிளிநொச்சியில் வீசப்பட்ட இவ் வகைக்குண்டுகளினால் இரு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் பலத்த எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விமானத்திலிருந்து வீசப்படும் இவ்வகையான குண்டுகள் தரையில் மோதி வெடித்ததும் பாரிய நெருப்புக் கோளங்களை உருவாக்குவதுடன் குண்டு வீழ்ந்து வெடிக்கும் சுற்றாடலில் இருந்து ஒட்சிசன் வாயுவை அகற்றும் தன்மை கொண்டவை. இக்குண்டுகள் வெடிக்கும் போது ஒருவர் காயமடையாது விட்டாலும் மூச்சுத்திணறி உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படும். பதுங்கு குழிகளின் வாயில் பகுதியில் இக் குண்டு வீழ்ந்து வெடித்தால் கூட பதுங்கு குழிக்குள் இருப்பவர்களின் சுவாசப்பையினுள் இருக்கும் ஒட்சிசனைக் கூட வெளியேற்றி விடும்.

இதனால் இக்குண்டு வெடிக்கும் போது பதுங்கு குழிக்குள் இருந்தால் கூட உயிர் தப்ப முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதுடன் இதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் முறையும் விளங்காதுள்ளது. நான்காவது ஈழப் போரில் இலங்கை விமானப்படை முதலில் பதுங்கு குழிகளைத் தகர்க்கும் 500 கிலோ கிராமுக்கும் அதிக நிறை கொண்ட இராட்சத குண்டுகளையே பயன்படுத்தியது.

ஆனால் விடுதலைப்புலிகளின் கொங்கிறீட்டுகளினாலான பதுங்கு குழிகளை இக்குண்டுகளினால் பெரியளவில் அழிக்க முடியவில்லை என்பதாலேயே தற்போது இந்த வகையான குண்டுகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. குண்டு சிதறல்களுக்கு ஒருவரால் பாதுகாப்புத் தேடிக் கொள்ள முடியும். ஆனால் இந்தவகை எரிகுண்டுகளினால் ஏற்படும் நெருப்புக் கோளங்களுக்கோ, ஒட்சிசனை உறிஞ்சும் தன்மைக்கோ எவராலும் பாதுகாப்பை தேட முடியாது. இதேவேளை விடுதலைப் புலிகளும் இராணுவமும் நெருங்கி நின்று மோதும் இடங்களில் இவ்வகை குண்டுகளை பயன்படுத்த முடியாத நிலையுமுள்ளது.

இக் குண்டுகளின் தாக்கம் 300 மீற்றர் சுற்றளவு வரை பாதிப்பை ஏற்படுத்தும். புலிகளும் இராணுவமும், நெருங்கி நிற்கும் இடங்களில் இக் குண்டுகளை வீசும் போது இலக்குத் தவறிவிட்டால் அது இராணுவத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இதனால் போர் முனையில் எதிரி அரங்கின் பின் தளங்களை அண்டிய பகுதிகளிலேயே இக் குண்டுகளை விமானப்படை வீசி வருகின்றது. அத்துடன் பொதுமக்களை இலக்கு வைத்தும் இக்குண்டுகள் வீசப்படுகின்றன. பொதுமக்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரவைக்கும் ஒரு நோக்கமும் இத் தாக்குதல்களின் பின்னணியில் உண்டு.
இதனாலேயே வன்னிப் பகுதியிலுள்ள சர்வதேச தொண்டர் அமைப்புகளை அரசு பலவந்தமாக வெளியேற்றியது. சர்வதேச விதிகளுக்கு முரணான இவ்வகைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகவே, படையினர் மீது அக்கராயனில் வைத்து விடுதலைப் புலிகள் இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக பெருமெடுப்பில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகங்கள் எழுந்த நிலையிலேயே தற்போது வன்னியில் விமானப்படையினர் இப்புதிய வகை குண்டுகளை வீசத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி அக்கராயன் பகுதியில் படையினர் மீது புலிகள் ஒருவகை இரசாயன வாயுத்தாக்குதலை நடத்தியதாகவும் இதனால் 16 படையினர் பாதிக்கப்பட்டதாகவும் புலிகளால் ஏவப்பட்ட இரசாயன குண்டுகள் வீழ்ந்து வெடித்ததுடன் வெண்புகை எழுந்ததாகவும் இதனால் படையினர் கடுமையான கண் எரிவு, மயக்கம், சோர்வு, வாந்தி, ரத்தவாந்தி எடுத்ததுடன் மயக்க நிலை அடைந்ததாகவும் படையினர் வெளியிட்ட செய்திகளால் தென்னிலங்கையில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டது.

புலிகள் படையினர் மீது இரசாயன குண்டுத் தாக்குதலை நடத்த தயாராவதாகவும் இவ்வகைக் குண்டுகளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனியே தயாரித்துள்ளதாகவும் இராணுவ உளவுப் பிரிவினர் தகவல்கள் வெளியிட்டதாக ஊடகங்கள் பெருமெடுப்பில் செய்திகளை வெளியிட்டிருந்தன. இதனை பிரதமரும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருமான இரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால், இத்தகவல்களை மறுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தகவல்களில் உண்மையில்லையெனவும் இவ்வாறான தகவல்களை வெளியிடுவதன் மூலம் படையினரின் மனவலிமை பாதிக்கப்படுவதுடன் படையிலிருந்து தப்பிச்செல்வோரின் எண்ணிக்கை உயர்வடையும் எனவும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே அக்கராயனில் புலிகள் இரசாயன குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பரபரப்பு சேய்திகள் வெளியிடப்பட்டன. இதேவேளை, இச்செய்திகள் தொடர்பில் படையினருக்கு ஏற்படக்கூடிய மனோ ரீதியான பிரச்சினைகளை உணர்ந்த இராணுவத் தரப்பு, புலிகள் சீ.எஸ்.எனப்படும் சாதாரண வாயுத் தாக்குதலையே நடத்தியதாகவும் இது பணயக் கைதிகளை மீட்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் போதே பெருமளவில் பாவிக்கப்படுவதாகவும் கூறியதுடன் அவ்வாறு ஏதாவது பாரதூரமான வாயுத் தாக்குதல்கள் இடம்பெற்றால் கூட படையினரைப் பாதுகாக்கவென முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.

இந்த வாயுத் தாக்குதல் தொடர்பான அறிவிப்பு தென்னிலங்கையிலும் இராணுவ மட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழர் தரப்பிடமும் சில பாதுகாப்பு சம்பந்தமான நிபுணர்களிடமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. வன்னியில் புலிகள் இரசாயனக் குண்டுத்தாக்குதல் நடத்தியதாக கூறிவிட்டு இராணுவம்தான் வன்னியில் இரசாயனக் குண்டுத் தாக்குதலை நடத்தப் போகின்றதென்றே பரவலாக பேசப்பட்டது.

இதனை நிரூபிப்பது போன்றே தற்போது வன்னியில் இலங்கை விமானப்படை புதிய வகையிலான குண்டுகளை வீசத் தொடங்கியுள்ளது. அண்மையில் இவ்வாறு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் சிக்கிய பச்சிளம் குழந்தையொன்று தனது உடலின் ஒரு பகுதி எரிந்த நிலையில் கதறியழும் புகைப்படமொன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்ததுடன் கண்கலங்கவும் வைத்தது. ஒரு நாடு இன்னொரு நாடு மீது போர் தொடுக்கும் போதே இவ்வாறான கொடூர குண்டுகள் சிலவேளைகளில் பாவிக்கப்படும்.

ஆனால், இலங்கை அரசு தனது சொந்த குடிமக்கள் மீதே இவ்வாறான கொடூர குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டு வன்னி மீது தான் மனிதாபிமான இராணுவ நடவடிக்கையே மேற்கொண்டு வருவதாக சர்வதேச நாடுகளின் காதுகளில் பூச்சுற்றுகின்றது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் தடைசெய்யப்பட்ட ?கிளஸ்டர்?வகை குண்டுகளை பொதுமக்கள் மீது பாவிப்பதாக ஏற்கனவே இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையிலேயே தற்போது இந்த வகைக் குண்டுகளை வன்னியில் தினமும் இலங்கை விமானப்படை வீசி வருகின்றது.

இதனைவிட எல்லையோர யுத்தங்களுக்குப் பயன்படுத்தப்படும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களாலும் வன்னிப் பகுதியை இராணுவம் சிதைத்து வருகின்றது. சகல வழித்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதி மீது அரசின் முப்படைகளும் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகள் அதிகமென்ற போதிலும் அது தொடர்பான எந்தவித தகவல்களோ, செய்திகளோ வெளியுலகை எட்டவில்லை.

வன்னிப் போர் தொடர்பான உண்மைச் செய்திகளை ஊடகங்களினாலும் கூட வெளியிட முடியவில்லை. அரசின் கடும்போக்கான அணுகுமுறையே இதற்குக் காரணமாகும்.

வன்னியில் இலங்கையின் முப்படைகளினாலும் பெரும் மனிதப் பேரவலம் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவை தொடர்பில் எந்தவொரு நாடும் கரிசனை காட்டவில்லையென்பதே பெரும் வேதனைக்குரிய விடயமாகும். கொழும்பில் சில விஷமிகளால் ?திட்டமிட்டு? நடத்தப்படும் 75 கிராம், 100 கிராம் குண்டு வெடிப்புகளுக்கு கூட விழுந்தடித்துக் கொண்டு கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள் வன்னியில் தினமும் வெடிக்கும் பல்லாயிரக்கணக்கான தொன் நிறை கொண்ட குண்டுகள் தொடர்பில் மட்டும் கண்ணையும் வாயையும் காதையும் பொத்திக் கொண்டிருப்பது ஏனென்பதே தமிழ் மக்களின் கேள்வியாகும்.

கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுகள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், ஆட்லறித் தாக்குதல்கள் என அனைத்து இரா ணுவ வளங்களும் கிளிநொச்சியை நோக்கித் திருப்பிவிடப்பட்டுள்ளதால் சமாதான பேச்சுகளுக்கு தலைமை தாங்கிய அழகிய நகரான கிளிநொச்சி தற்போது சுடுகாடாக மாறிவருகின்றது.

அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் போது அவற்றுக்கு உயிர்ப்பூட்டியவர்களில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் கிளிநொச்சியும் அளப்பரிய பங்காற்றியவர்கள். தமிழ்ச்செல்வனையும் கிளிநொச்சி நகரையும் தெரியாதவர்கள், அறியாதவர்கள் இல்லையென்றே சொல்ல முடியும். அவ்வாறான நிலையில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தி விடவேண்டுமென்பதற்காக அயராது துடிப்புடன் செயற்பட்ட தமிழ்ச்செல்வனை முதலில் பலியெடுத்து சமாதான பேச்சுகளை குழப்பியடித்த இலங்கையரசு தற்போது சமாதான நகராகத் திகழ்ந்த கிளிநொச்சியை துவம்சம் செய்து சுடுகாடாகிக் கொண்டிருக்கின்றது.

பொது இடங்கள், பாடசாலைகள், கோவில்கள், தொண்டர் நிலையங்கள் என எந்தவித வேறுபாடுமின்றி அழித்துக் கொண்டு வருகின்றது. வன்னியிலிருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் தோல்வியடைந்து விட்டதாக அரசே ஒத்துக் கொண்டுள்ள நிலையில் அப்பகுதி மீதான தாக்குதல்களையும் மிகத் தீவிரப்படுத்தியுள்ளது.

பல இடங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் வன்னியிலுள்ள சுமார் 4 இலட்சம் வரையான மக்களும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். இவ்வாறான நிலையில் இராணுவம் மற்றும் விமானப் படையினரின் இலக்குகளற்ற தாக்குதல்களால் பொதுமக்களே பேரழிவுகளை சந்தித்து வருகின்றனர்.

தற்போது கிளிநொச்சி நகர் மீதான இறுதி யுத்தத்தை ஆரம்பித்து விட்டதாக அரசு கூறியுள்ள நிலையில் இனிவரும் நாட்கள் பொதுமக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தப்போகும் நாட்களாகவே அமையப் போகின்றன. தமிழ் மக்கள் மீது இனப்போரை கட்டவிழ்த்துவிட்டு பேரழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் ஏற்படுத்தி அழிச்சாட்டியம் புரியும் இலங்கையரசும் அதற்குத் துணை போகும் சிங்கள மக்களும் "ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்குமாயின் அந்த இனமும் சுதந்திரமாக இருக்க முடியாது" என்று கார்ள் மார்க்ஸ் கூறியதை மறந்துவிடக்கூடாது.

-தாயகன் -



Comments