மறுக்கப்பட்ட கனடா விசா

இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்களால் வடக்கை மீட்பதற்கான மனிதாபி மான யுத்தம் என்ற போர்வையில் தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து அயல்நாடான இந்தியா உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் இலங்கை அரசு அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே தொடரும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அயல்நாடான இந்தியாவின் தமிழகத்தில் அதிகாரத்திலுள்ள கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஜெயராஜ் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பன தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் இணைந்து இலங்கை தமிழர்களுக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றன.

இவ் வாறே ஐரோப்பிய நாடுகளிலும் புலம் பெயர்ந்த தமிழர்களும் அங்குள்ள மனித உரிமைவாதிகளும் இலங்கை அரசின் இன அழிப்பு யுத்தத்திற்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகளில் இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் பலரும் சென்று கலந்துகொண்டு வருவதும் கவனிக்கத்தக்கதொரு விடயம்.

இவ்வாறான நிலையிலேயே இலங்கைத் தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்பகாலம் தொடக்கம் தென்னிலங்கையிலிருந்து பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் குரலெழுப்பிவரும் நவசமசமாஜக் கட்சியின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணா ரட்ணவுக்கு இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நெருங்கிய ஆதரவாளர் என்ற காரணத்தினால் தமது நாட்டிற்கு செல்வதற்கான தற்காலிக விசா அனுமதியை வழங்க முடியாதென்று இலங்கைக்கான கனடியத் தூதரகம் அறிவித்துள்ளது.

கனடாவில் கடந்த செப்டெம்பர் 13,14ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான கூட்டமொன்றிற்கு அங்குள்ள ஏற்பாட்டாளர்களால் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ணவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான ஆவணங்களுடன் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயத்தில் தற்காலிக விசாவுக்கான விண்ணப்பத்தைக் கோரியிருந்தார்.

ஆனால், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கான விசா அனுமதியை மறுத்துள்ள இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் முதலாவது செயலாளர் மக்கென்ஸி அது தொடர்பாக விளக்கமளித்து கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நீங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. அதுமட்டுமன்றி மட்ற்ரி, லண்டன் ஆகிய இடங்களில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையான பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்களை வெளிப்படையாக முன்னெடுத்துவரும் நீங்கள் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்று நம்புமளவிற்கு எம்மை உட்படுத்தியுள்ளது. எனவே, உங்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாத நிலையில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திவரும் இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் இனங்களுக்கிடையேயான ஒற்றுமை, ஐக்கியம் என்பவற்றை வலியுறுத்திவரும் அரசியல் செயற்பாடுகளை பல்வேறு கசப்பான நிகழ்வுகள் நெருக்கடியான நிலைமைகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருபவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்களுக்கு எதிராக தென்னிலங்கையின் இனவாத அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கொடூரமான இன அழிப்பு யுத்தத்தின் உண்மை நிலைவரங்களை சர்வதேச சமூகத்தின் முன் வெளிக் கொண்டு வருவதில் பல்வேறு பங்களிப்புகளை வழங்கிவரும் இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டமையானது கனடிய அரசாங்கத்தின் ஒரு தலைப்பட்சமான போக்கையே வெளிக்காட்டி நிற்கின்றது.

விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தென்னிலங்கை அரசியல் சக்திகளே தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்களின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தையும் அவர் களுக்கான சுயநிர்ணய உரிமையையும் ஆரம்பகாலம் தொடக்கம் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தலை மையிலான நவசமசமாஜக்கட்சி மற்றும் சோசலிச சமத்துவக்கட்சி என்பனவே வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது, தென்னிலங்கையின் பாரம்பரிய இடதுசாரிகளான சமசமாஜ கட்சியின் தலைமைகள் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் பங்கேற்று தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட தரப்படுத்தல் உட்பட பல்வேறு அநீதிகளை அப்பட்டமாகவே விமர்சித்து வெளியேறியோராலேயே நவசமசமாஜக்கட்சி உருவாக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டிலிருந்தே கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றார். இந்த நிலைப்பாட்டை தென்னிலங்கையில் வலியுறுத்தியமைக்காக சிங்கள பௌத்த கடும்போக்கு அரசியல் தலைமைகளாலும் படிப்பறிவற்ற கிராமப்புற மக்களாலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வருபவர்.

அதுமட்டுமன்றி 1978 இல் அப்போதைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்து கண்டியில் கறுப்புக் கொடி ஊர்வலம் நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர். 1979 இல் அப்போது ஆட்சியதிகாரத்திலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையிலான அரசாங்கத்தினால் தமிழ் மக்களை சட்டரீதியாக அழித்தொழிக்க கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை கண்டித்து கொழும்பு கொம்பனித்தெருவிலிருந்து பழைய பாராளுமன்ற கட்டிட வளாகம் வரை சவப்பெட்டி ஊர்வலம் நடத்தியமைக்காக பொலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டவர்.

இதனைவிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியதிகாரத்திற்கு வந்ததிற்கு பின்னர் குறிப்பாக தலைநகர் கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல், படுகொலை போன்ற பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களை கண்டித்து கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குகொண்டவர்.

தலைநகரில் இடம்பெற்ற மிகமோசமான தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் சம்பவங்களை சர்வதேச ரீதியாக வெளிக்கொண்டு வருவதில் மக்கள் கண்காணிப்புக்குழு, காணாமல் போனோரை தேடியறியும் குழு என்பன பாரிய பங்களிப்பை செய்து வருகின்றமையை எவரும் இலகுவில் மறந்திடமுடியாது.

பாரிய நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனால் உருவாக்கப்பட்ட மக்கள் கண்காணிப்பு குழுவில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ணவும் இணைந்து செயற்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய சோசலிசகட்சியின் தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரியவும் மக்கள் கண்காணிப்பு குழுவின் செயற்பாடுகளுக்கு துணிச்சலுடன் பங்களிப்பு வழங்கிய இன்னொரு தென்னிலங்கை இடதுசாரித் தலைவராவார்.

இலங்கையில் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தென்னிலங்கை இடதுசாரிகளை முற்போக்கு சக்திகளை ஓரங்கட்ட முற்படும் மேற்குலக இராஜதந்திரிகளின் சிந்தனையானது

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் சிந்தனைகளை விட மோசமானதாக உருவெடுத்து வருவதையே இலங்கைக்கான கனடியத்தூதரகத்தின் நடவடிக்கையும் சுட்டிக்காட்டி நிற்கிறது.

-அஜாதசத்ரு-


Comments