எவரை எவர் வெல்லுவாரோ?

வன்னிப்போர் நிறுத்தப்படாது. அதனை நிறுத்த இலங்கை அரசு தயாரில்லையென்பதுடன் அதனை நிறுத்துமாறு கோர இந்திய அரசும் தயாரில்லை. தமிழகத்திலிருந்து வரும் பாரிய அழுத்தங்களை விட இலங்கை அரசுடன் நட்புறவைப் பேணவே இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டுவதால், வன்னிப் போரை தொடருமாறு இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆசி கூறியுள்ளது. அதை விட இலங்கைப் படையினருக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கவும் தமிழகத்திலிருந்து வரும் அழுத் தங்களால் இலங்கை அரசுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுதைத் தடுத்து நிறுத்தவும் இந்திய அரசு தயாராகிவிட்டது.

வன்னிப்போரில் மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாக்கி வருவதாக இலங்கை அரசு கூறுவதை இந்திய அரசும் கூறமுற்படுகிறது.

வன்னியில் மக்களுக்கு எதுவித இழப்புகளும் ஏற்படாதவாறு யுத்தத்தை தொடருமாறு இந்திய அரசு ஆலோசனை கூறியுள்ளது. புலிகளுக்கெதிரான போர் பயங்க ரவாதத்திற்கெதிரான போரெனச் சித்தரிக்க முயலும் இந்திய அரசுக்கு, ஈழத்தமிழர் மீதான அக்கறையையும் அதனால் தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் உணர்வலைகளையும் விட இலங்கை அரசின் நட்பை (பிடியை) இழந்து விடக் கூடாதென்பதில் அதிகளவு அக்கறையுள்ளது.

இலங்கையில் போரை நிறுத்து வதற்கு தமிழக முதலமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சிகளும் வழங்கிய இருவார கால அவகாசத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டது. இலங்கையில் புலிகளுக்கெதிரான போர் தொடர வேண்டுமென்றும் அந்த நாட்டுக்குத் தேவையான போர்த் தளபாடங்கள் தொடர்ந்தும் வழங்கப்படுமெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். அதேநேரம் இலங்கைப் படையினருக்கு இந்தியப் படையினர் நேரடியாக வழங்கும் உதவிகளை நிறுத்தவும் இந்தியா மறுத்துள்ளது.

?சார்க்? மாநாட்டுக்கு முன்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.பி.சிங் ஆகியோர் கொழும்புக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

சார்க் மாநாட்டுக்காக கொழும்புக்கு வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக் குறித்து ஆராயவே அவர்கள் இங்கு வருகை தந்ததாக வெளியில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இலங்கை வந்த இந்தக் குழுவோ, புலிகளுடனான போரில் இலங்கைக்கு எப்படி இந்தியாவால் உதவ முடியுமென்பது குறித்து ஆராயவே வந்திருந்தது.

கொழும்பில் உயர் மட்டச் சந் திப்புகளை நடத்திய இந்தக் குழு, இலங்கையின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து விவாதித்தது. புலிகளுடனான போரில் மற்ற நாடுகளின் உதவியை நாடாவிட்டால் இலங்கையின் பாது காப்புத் தேவைகளை தாங்கள் முழுமையாக நிறைவேற்றுவதாக இந்தியா உறுதியளித்தது.

ஆனால் இந்தப் போருக்கு பாகிஸ்தான், சீனா, ஈரான் போன்ற நாடுகள் மிகத் தாராளமாக இராணுவ உதவிகளை வழங்கிவந்தன. பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் வீதம் இலங்கைப் படையினருக்குத் தேவையான போர்த் தளபாடங்களை அனுப்புவதாக எது வித நிபந்தனையுமின்றி பாகிஸ்தான் உறுதியளித்தது.

அது போன்ற உறுதி மொழிகளை சீனாவும் ஈரானும் வழங் கியிருந்தன. புலிகளுக்கெதிரான போரில் தங் கள் கை நன்கு ஓங்கியிருப்பதால் இந்தப் போரில் இந்தியாவின் நிபந்தனையுடனான உதவிகளைப் பெறுவதை விட பாகிஸ்தான், சீனா, ஈரானிடமிருந்து நிபந்தனையற்ற உதவிகளைப் பெறுவதையே இலங்கை அரசு விரும்பியதுடன் இந்தியக் குழுவினரின் நிபந்தனை களை ஏற்கவும் இலங்கை அரசு மறுத்து விட்டது.

புலிகளுக்கெதிரான போரைச் சாட்டாக வைத்து பாகிஸ்தான், சீனா போன்ற நாடு கள் இலங்கையில் ஆதிக்கம் செலுத் துவதை விரும்பாத இந்தியா, இந்தப் போரை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கைக்கு ஆயுதங் களையும் வழங்கி அதன் மூலம் இலங்கையில் சீனா மற்றும் பாகிஸ் தான் போன்ற நாடுகள் செல்வாக்குச் செலுத்துவதையும் தடுத்து விடலாமென முற்பட்டது. எனினும் இந்தியாவின் இந்த எண்ணத்திற்கு இடமளிக்க இலங்கை மறுத்துவிட்டது.

இதனால் ஏமாற்றமடைந்த இந்தி யாவுக்கு தற்போதைய நிலைமை வாய்ப்பாகிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் இந்திய அரசுக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைப் அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த முற்படுகிறது. இலங்கை போரை பயன்படுத்தி அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வரமுடியாதிருந்த இந்தியாவுக்கு, தற்போது அதே போரைப் பயன் படுத்தி இலங்கை அரசை தனது பிடிக்குள் வைத்திருக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனால் இலங்கையை பகைக்காதும் இலங்கையில் நடைபெறும் போரைப் பயன்படுத்தியும் நகர்த்த இந்தியா முற்படுகிறது. ஈழப்போரில் விடுதலை புலிகளை ஆதரிக்க முடியாததொரு நிலை இந்திய அரசுக்குள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றதால், காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய அரசால் புலிகளுக்கு ஆதரவு வழங்க முடியாது. அதேநேரம் இந்தப் போர் மூலம் புலிகளை மிகவும் பலவீனப்படுத்தி அவர்களை தங்கள் காலடியில் விழவைக்க வேண்டுமென்பதும் காங்கிரசுக்கு விசுவாசமான இந்திய கொள்கை வகுப்பாளர்களது எண்ணம்.

அதுவும், இலங்கை அரசை தங்கள் பிடிக்குள் வைத்துக் கொண்டே இவற்றையெல்லாம் செய்ய வேண்டு மென்பதும் அவர்களது நீண்ட நாள் விருப்பம். ஆனாலும் புலிகள் எப்படி தங்களுக்கு பகையாளிகளோ அதுபோல் இலங்கை அரசும் தங் களை ஒரு பொருட்டாக மதிக்காது இந்தப்போரில் புலிகளைத் தோற் கடிப்பதையும் இந்திய அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

புலிகளே இன்று களத்தில் நின்று போராடுகிறார்கள். புலி களையே ஈழத்தமிழ் மக்கள் ஏகப் பிரதிநிதிகளாக்கியுள்ளனர். புலிகளுக்கு மாற்றாக ஈழத் தமி ழர்களின் ஆதரவைப் பெற்ற அமைப் புகள் எதுவுமில்லை.

இதனால் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இலங் கையில் தங்களுக்குச் சார்பான அமைப்புக்களை உருவாக்கி அதன் மூலம் ஈழத்தமிழர்களிடையே செல்வாக்குச் செலுத்தி அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் முடியாத நிலையில் இந்திய மத்திய அரசு இருக்கும் போதுதான் தற்போது ஈழத் தமிழர் விடயத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்த இந்திய அரசு முயல்கிறது.

இந்திய மத்திய அரசு விரும்பாத புலிகள் இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவதை எந்தளவுக்கு இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அந்தளவுக்கு தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத இலங்கை அரசு இந்த யுத்தத்தில் வெற்றிபெறுவதையும் இந்தியாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், புலிகள் மீது எந்தவிதத்திலும் செல்வாக்குச் செலுத்தவோ அல்லது அழுத்தம் கொடுத்து அடிபணியவோ வைக்க முடியாதென்ற நிலையில் இலங்கை அரசை ராஜதந்திர ரீதியில் அல்லது இராணுவ ரீதியில் மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து அடிபணிய வைத்துவிட்டு அதன் மூலம் புலி களைத் தோற்கடித்து மீண்டும் இலங்கை விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்த இந்திய அரசு முற்பட்டு வந்தது. இதனொரு கட்டமாகவே, இலங்கையின் பாதுகாப்புக்குத் தேவையான உதவிகளுக்கு வேறு நாடு களை நாடாவிட்டால் இலங்கையின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை வழங்கத் தாங்கள் தயாரென இந்தியா கொழும்புக்கு வந்து வற்புறுத்தியது மட்டுமல்லாது மிரட்டி விட்டும் சென்றது.

இதனால் கடும் சீற்றமும் எரிச் சலுமடைந்த இலங்கை அரசு, ?சார்க்? மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் வந்தபோது அவரது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு பாடம்படிப்பித்தது.

அவரை நீண்ட தூரம் நடக்கவைத்து தனது எதிர்ப்பை இந்த விதத்தில் காட்டிக் கொண்டது. இதனை அவர் மட்டுமல்லாது இந்திய அரசும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா அல்லது புரிந்தும் புரியாதது போலிருக்கிறார்களா எனத் தெரியாத நிலையில் , ஈழத் தமிழருக்காக தமிழகம் கொதித்தெழுந்திருப்பது இலங்கை விடயத்தில் தனது பிடியை இறுக்க இந்தியாவுக்கு மீண்டுமொரு முறை வாய்ப்பையேற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழருக்காக தமிழ கத்தில் எதிர்க்கட்சிகள் கிளர்ந் தெழுந்திருந்தால் தமிழக அரசுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி மத்திய அரசின் உதவியை நாடாது இந்தப் போராட்டத்திற்கு இலங்கை அரசால் முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் தமிழகத்தின் ஆளும் கட்சியே இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவதால் இலங்கை அரசால் தமிழக அரசுடன் தொடர்புகளைப் பேணமுடியாது போய்விட்டது.

இந்திய மத்திய அரசிடம் செல்வதை விட வேறு வழியில்லை. இதனால் இந்திய மத்திய அரசினூடாக தமிழக அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து நிலைமையை தணிக்க வேண்டிய நிலைமை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய இந்தப் பிரச்சினையால் தி.மு.க.எம்.பிக்களும் ஏனைய தமிழக எம்.பிக்களும் (காங்கிரஸ் தவிர்ந்த) ராஜிநாமா செய்து அதன் மூலம் இந்திய மத்திய அரசு கவிழ்ந்துவிடக் கூடாதென்ற அச்சமும் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஈழத்தமிழருக்காக குரல்கொடுத்து அவர்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமெனக் கோஷமெழுப்பிய அ.தி.மு.க.பொதுச் செயலர் செல்வி ஜெயலலிதாவின் மனதை சில ஆலோசகர் மாற்றிவிடவே அவர் தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாக நினைத்து ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார். இலங்கையில் இரு வாரத்திற்குள் போர் நிறுத்தப்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜிநாமா செய்து விடுவார்களென, முதல்வர் கருணாநிதி சர்வகட்சித் தீர்மானத்தை வெளியிட்ட பின்னரே ஜெயலலிதாவின் போக்கில் மாற்றமேற்பட்டது.

எப்படியாவது தமிழக எம்.பிக்கள் அனைவரும் ராஜிநாமா செய்தால் மத்திய அரசு நிச்சயம் கவிழும், அதன் மூலம் அடுத்த தேர்தலில் (2009 மார்ச்) காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்குமிடையில் கூட்டணி ஏற்படாது, இதனைப் பயன்படுத்தி காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து விடலாமென ஜெயலலிதா கணக்குப் போடுகிறார். அதேநேரம் தி.மு.க மற்றும் தமிழக எம்.பிக்கள் ராஜிநாமா செய்து அதனால் மத்திய அரசு கவிழ்ந்தால் அடுத்த தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் பிரசாரமே ஈழத்தமிழர் விவகாரமாகத்தான் இருக்கும்.

தற்போதைய நிலையில் ஈழத்தமிழர் விவகாரத்தை கருணாநிதி அரசியலுக்கு பயன்படுத்துகிறாரோ இல்லையோ தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள உணர்வலையை இனிக் கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டது. ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தெறியவும் இலங்கையில் தமிழீழம் மலர்வதுடன் இந்தியாவில் தனித் தமிழ்நாடு உருவாகுமெனக் குரல்கொடுக்கவும் சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தை தாக்கு மளவுக்கு நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தையே ஆட்டிப்படைப்பது அரசியலும் சினிமாவும் தான். இந்த இரண்டும் இன்று ஒன்றுடன் ஒன்று இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்தை உச்ச நிலைக்குக் கொண்டு சென்று விட்டதால் இனி ஈழத்தமிழர் போரா ட்டத்தை பயன்படுத்தி தமிழகத்தில் எவருமே குளிர்காய முடியாது.

இந்த நிலையில் வன்னியில் போரைத் தீவிரப்படுத்தும் இலங்கை அரசு தமிழக உணர்வலைகளை இந்திய மத்திய அரசினூடாக அடக்கிவிட முனைகிறது. அதற்காக இலங்கையிலும் தமிழ் மக்கள் மத்தியில் புலிகளுக்கெதிரான உணர்வும் ஈழப்போராட்டத்திற்கு கடும் எதிர்ப்புமிருப்பதுபோல் காண் பிக்க முற்படுகின்றது. இதனொரு கட்டமாக யாழ்.குடாநாட்டில் கடந்த வியாழக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை பெரும் பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தியாவின் முக்கிய தலைவர்களை இலங்கைக்கு அழை த்து நிலைமைகள் குறித்து சகல தரப் பினர் மூலமும் விளக்க இலங்கை அரசு பெரிதும் முற்பட்டது.

கடந்த 19ஆம் திகதி இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந் திய வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டி ருந்தார்.

இந்தியாவிலிருந்து எவரையாவது இங்கு வரவழைத்து அவருக்கு ?குழையடித்து? விடலாமென்றும் இந்தியாவுக்கு எவரையும் அனுப் பக்கூடாதெனவும் இலங்கை தரப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவோ, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையை மடக்க முனைகிறது. முதலில் உங்கள் பிரதிநிதிகளை அனுப்புங்கள். பின்னர் நாங்கள் எவரையாவது அனுப்புகிறோமெனக் கூறிவிட்டது.

தற்போதைய நிலையில் இந்திய அரசை திருப்திப் படுத்தியே காரியம் சாதிக்க வேண்டுமென்பதால் இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ தலைமையில் புதுடில்லி சென்றுள்ளது.

அங்கு இந்திய அரசு இலங்கை மீதான பிடியை இறுக்க முயலுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தமிழக நிலைமைகளைச் சமாளிப்பதற்காக இந்திய அரசை சமாளித்து விட்டு வரவே இலங்கை தரப்பும் முற்படும். கடும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா பாதகமான சில முடிவுகளை எடுத்துவிடலாமென்ற அச்சமும் இலங்கைத் தரப்பில் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி என்ன செய்யப் போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங் கையை மடக்க இந்தியாவும், தமி ழக அரசையும் இந்தியாவையும் மட க்க இலங்கை அரசும் காய்களை நகர்த்தி வருகையில் தமிழகக் கட்சிகள் விதித்த, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்ற காலக்கெடு முடியப்போகிறது.

அடுத்த ஓரிரு மாதங்களில் பொதுத் தேர்தலென்பதால் காங்கிரஸ் அரசு தனது கூட்டணிக் கட்சியின் மிரட்டலை அவ்வளவாகப் பொருட் படுத்தவில்லை. கருணாநிதி சொல் வது போல் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் இலங்கையில் போரை நிறுத்த இந்தியா முன் வரவில்லையென்பதுடன், இலங் கைப் படையினருக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் கருணாநிதி எடுக்கப்போகும் அடுத்த முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

வன்னிப் போர்

இது இவ்வாறிருக்க வன்னியில் போர் தீவிரமடைந்துள்ளது. கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முயற்சியை படையினர் தீவிரப்ப டுத்தியுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட் டுள்ள உணர்வலைகள் மூலம் இந்திய மத்திய அரசு எதாவது முடிவை எடுத்துவிட முன்னர் கிளிநொச்சியை கைப்பற்றிவிட வேண்டுமென்று இலங்கைஅரசு அவசரப்படுகிறது. ஆனால், வன்னிக் களமுனையில் புலிகளின் எதிர்த் தாக்குதலும் மோசமான காலநிலையும் அங்கு படைநகர்வைப் பெரிதும் பாதித்து வருகிறது.

வன்னியில் பெய்துவரும் கடும் மழை படையினருக்கான விநியோகங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அதே நேரம் குடாநாட்டுக்கான கடல் வழிவிநியோகத்திற்கும் புலிகளால் பலத்த அச்சுறுத்தலேற்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு தெற்கேயும் தென்மேற்கேயும் கடும் சமர் நடை பெறும் பகுதிகள் பெரும் வயல் வெளிகளென்பதால் கடும் மழையால் படையினரின் யுத்த டாங்கிகள், கவச வாகனங்கள் மட்டுமல்லாது விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் சாதாரண வாகனங்கள் கூட பயணம் செய்ய முடியாத நிலைமையேற்பட்டுள்ளது.

முன்னேற முயலும் படையினர் பதுங்குழிகளையோ, காப்பரண்க ளையோ அகழிகளையோ அமைத்து பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. அனைத்துப் பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

முன் னேற முயலும் படையினர் வயல் வெளிகளுக்குள் கால் புதைய அடு த்த அடிவைக்க முடியாது பலத்த சிர மங்களை எதிர்நோக்குகின்றனர். மன்னார் - பூநகரி வீதியில் (ஏ-32) நாச்சிக்குடா முதல் அதன் கிழக்கே ஏ -9 வீதி வரை பாரிய மண் அணைகளை அமைத்து படையினரின் பாரிய முன்னகர்வு முயற்சிகளையெல்லாம் முறியடித்து வந்த புலிகள், தற்போது அடை மழை பெய்கையில் அந்தப் பாரிய மண் அணையை குறிப்பிட்ட பகுதியில் உடைத்துக் கொண்டு முன்னேற படையினரை அனுமதித்துள்ளனர். நாச்சிக்குடாவிலிருந்து ஏ-9 வீதிப் பக்கமாக, வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்குமிடையிலுள்ள மண் அணையை உடைத்துக் கொண்டு முன்னேறிய படையினர் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னேறி மணியர்குளம் பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.

நாச்சிக்குடாவுக்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையி லேயே படையினர் இந்த மண் அணையை உடைத்துள்ளனர். இதன் மூலம் படையினர் கிளி நொச்சியிலிருந்து தென்மேற்கே 15 முதல் 20 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளனர். அதே நேரம் அக்கராயன்குளத்திற்கும் ஏ- 9 வீதியில் தெருமுறிகண்டிக்குமிடையிலான மண் அணையை புலிகள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த மண் அணையை உடைக்க படையினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மண் அணையை உடைத்தால் படையினர் கிளிநொச்சியிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்கும் குறைவான தூரத்திலேயே நிற்பர். படையினரை அடை மழைக்குள் ளும் சேறு மற்றும் சகதிக்குள்ளும் இழுத்துத் தாக்குவதே புலிகளின் திட்டமாகும். இதனால் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்தி த்து வருகின்றனர். கடந்த இருவாரத் தில் இந்த மோதல்களில் அதிக எண்ணிக்கையான படையினர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கா னோர் படுகாயமடைந்துமுள்ளனர்.

இதுதொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையமும் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது வன்னிப் போர்முனை இழப்புக்களை வெளியிடுவதை படைத்தரப்பு நிறுத் தியுள்ளது. இழப்புக்கள் குறித்து வெளியிடப்படும் தகவல்கள் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியதே இதற்குக் காரணமாகும். இதனால் தங்களுக்கேற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை மட்டு மல்லாது புலிகளுக்கேற்படும் இழப்புக்கள் குறித்த தகவல்களையும் வெளியிட முடியாதளவிற்கு, இதுவரை புலிகளின் இழப்புக்கள் குறித்து படையினர் வெளியிட்டுவந்த தகவல்கள் மிக அதிகளவில் மிகைப்படுத்தப்பட்டு வந்துள்ளது தெளிவாகிறது.

இதேநேரம் நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரை (நாச்சிக்குடா - வன்னேரி - அக்கராயன்-புத்துவெட்டுவான்) தாங்கள் நடத்திய கடும் பதில் தாக்குதலில் 47 படையினர் கொல்லப்பட்டும் 87 பேர் காயமடைந்துமுள்ளதாக புலிகள் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர். மண் அணைகளைத் தாண்டி பரந்த வயல்வெளிகளுக்குள் கொட்டும் மழையில் இரவு - பகலாக திறந்த வெளியில் நிற்கும் படையினரை புலிகள் இலகுவாக இலக்கு வைக் கும் நிலைமையேற்பட்டுள்ளது. தற் போதைய கால நிலையை பயன்படுத்தி புலிகள் எவ்வேளை யிலும் தங்கள் மீது பாரிய தாக்குதலை ஆரம்பிக்கலாம், கரும்புலிகள் பாயலாமென்ற எண்ணம் படையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மழைபெய்வதற்கு முன் மண் அணையை உடைத்துக் கொண்டும் வயல்வெளிகளைத் தாண்டியும் கிளிநொச்சிக்குச் சென் றிருக்கலாமென்று படையினர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அந்தளவிற்கு அப்போது தங்கள் வசம் சகல வசதிகளுமிருந்ததாக கருதும் படையினர், தற்போது புலிகள் அடைமழைக்குள் தங்களை முன்னேற விட்டு வலிந்து இழுத்துத் தாக்கத் தொடங்கியுள்ளதை உணர்கின்றனர்.

இதனால் அடுத்து வரும் நாட்களில் களநிலை மோசமடையப் போகிறது. மழை கொட்டுவதால், தற்போது கடும் சமர் நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள நான்கிற்கும் மேற்பட்ட பாரிய குளங்கள் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்தால் பரந்துவிரிந்த வயல்வெளிகளில் நிற்கும் படையினரால் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள முடியாது போகலாம். விரைந்து

முன்னேறிச் செல்லக்கூடிய மார்க்கமுமில்லை. முன்னேறிச் சென்றுள்ள படையினருக்கு விநியோகங்களைக்கூட மேற் கொள்ள முடியாதிருப்பதால் வன்னிக் களமுனை மிகவும் மோசமடைந்துள்ளது. கனரக ஆயு தங்களைக்கூட பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இந்தக் களமுனையில் நிறைந்த அனுபவமுள்ளதாலும் முன்னேறும் படையினரை தூர இருந்தே எதிர்கொள்வதாலும் நிலை மைக்கேற்ப தங்கள் விநியோகப் பாதைகளை அமைத்திருப்பதாலும் புலிகள் இந்தக் களமுனையில் தாக்குப்பிடிக்கின்றனர்.

வடக்கில் கடும் மழை பெய்து வருகையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் புலிகள் இரு விநி யோகக் கப்பல்கள் மீது கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர். எங்கிருந்து வந்து இந்தக் கரும்புலித் தாக்குதல் நடைபெற்றதென அறிய முடியாதநிலையேற்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் தங்கள் கட்டு ப்பாட்டுப் பகுதியிலிருந்து புலிகளின் மிதவைப் படகுகள் வந்திருந்தால் மணற்காடு பகுதியிலுள்ள கடற்படை முகாமின் ராடரில் அவை தென் பட்டிருக்கும். ஆனால், அந்த ராடரில் எதுவுமே தெரியாததால் கடற் கரும்புலிகள் வலிவடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ஊடுருவி அங்கிருந்து சிறிய படகுகளில் (கட்டுமரம் போன்றவை) வந்து இந்தத் தாக்குதலை நடத்தினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விநியோகக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதல் மூலம் புலிகள் ஒரு செய்தியைக் கூறியுள்ளதாகவே கருதப்படுகிறது.

வடக்கில் அடை மழை பெய்கையில் கடல் வழி விநியோகத்திற்கு புலிகள் பெரும் அச்சுறுத்தலாயிருப்பார்களென அஞ்சப்படுகிறது. இதனைத் தடுக்க வேண்டிய நிலை கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது. கடற்புலிகள் தங்கள் நீரடி நீச்சல் பிரிவின் நடவடிக்கைகளை அதிகரித்து வருகையில் தற்போதைய காலநிலையில் இவ்வாறான தாக்குதலை தடுக்க வேண்டிய நிலை கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது.


விதுரன்

Comments