ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

தொழில்நுட்ப ரீதியாகவும், போர்க்கள ஆற்றலிலும் வல்லமை பெற்றிருப்பதால், இந்திய இராணுவம் இத்தகைய பயிற்சியை சிறிலங்கா இராணுவத்திற்கு அளித்திருப்பதும், இந்திய அரசின் முழு ஆதரவோடும், ஒப்புதலோடும் இந்தப் பயிற்சி நடைபெற்றிருப்பதும் தெளிவாகின்றது.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்குகிறது என்றும், மிக நவீன இராணுவ ராடர் கருவிகளை வழங்கி, இந்திய இராணுவம் அந்த ராடர் கருவிகளை தந்தது என்றும் அண்மையில் பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இத்தகைய செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை.

பிரதமரின் மூத்த உதவியாளர்கள் சிலரும், இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் சிறிலங்காவுக்குச் சென்று வந்தனர் என்ற செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட்டன. அதையும் இந்திய அரசு மறுக்கவில்லை.

சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட செய்தியையும் ஊடகங்கள் திறம்பட கண்டுபிடித்து மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளன.

ஒரு நாட்டு இராணுவம் மற்றொரு நாட்டுப் படையினருக்கு பயிற்சி அளிப்பது எங்குமே நடைபெறக் கூடியது தான். ஆனால், யாருக்கு எதிராக செயற்பட சிறிலங்கா இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்பது தான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் இராணுவச் செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராகத்தான் அமைந்துள்ளன என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது மட்டும் தான் தாக்குதல் நடத்துகின்றோம் என்று சிறிலங்கா அரசு பறை சாற்றலாம்.

ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழர் பகுதிகளில் மடிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களைப் பற்றி வரும் செய்திகள், சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழப்போர் விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல, அப்பாவி தமிழ் மக்களும் தான் என்ற உண்மையை உலகுக்குச் சொல்லுகின்றனவே!

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஆயுதங்களும், பயிற்சியும் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான் இந்தச் செய்திகள் அனைத்திலும் பொதிந்திருக்கும் உண்மை.

இந்தக் கொடுமை போதாது என்று சிறிலங்கா இராணுவம் தமிழக மீனவர்களையும் சுட்டுக்கொல்கின்றது. இந்திய அரசால் சிறிலங்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு பகுதியிலேயே இந்திய மீனவர் ஒருவரை சிறிலங்கா அரசு சுட்டுக்கொன்றது என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சிறிலங்கா அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதாக இந்திய அரசு எப்போதும் தெரிவிக்கின்றதே தவிர, உருப்படியான நடவடிக்கை எதையும் இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை. இந்த வேதனையான உண்மையை என்னவென்று சொல்வது?

இத்தனைப் படுகொலைகளையும் இந்திய அரசு வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. அனைத்திற்கும் புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டும் அல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது. ஆயுதங்களையும், ராடர் கருவிகளையும், பயிற்சியையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியதன் மூலம், இந்த கோரச் சம்பவங்களின் முழு பங்குதாரராக இந்திய அரசு செயற்பட்டிருக்கின்றது.

மத்திய அமைச்சர்கள் என தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் 10 பேரைக் கொண்ட இந்திய அரசு தான் இத்தகைய பழி பாவத்தில் பங்குபெற்றிருக்கின்றது. தி.மு.க-வை மிக இன்றியமையாத உறுப்பினராகக் கொண்ட மத்திய கூட்டணி அரசு தான் இந்தக் கொடுமைகளில் கூட்டாளியாகி இருக்கின்றது.

கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று தி.மு.க. அறிவித்தால் மத்திய ஆட்சியே கவிழ்ந்து விடும். ஆனால், "தமிழினத் தலைவர்'' என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பேச்சு, மூச்சற்றுப் போவார் வாய்மூடிக் கிடப்பார்.

தங்களைப் பற்றிய அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். வரலாறு கண்டிராத விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த அவர் எதையும் செய்ய வில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கருணாநிதி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் தாசானு தாசராக உருமாறியுள்ள டொக்டர் மன்மோகன்சிங், தன் எஜமானிய நாட்டின் அதிபரிடம் இருந்து ஏதும் கற்றதாகத் தெரியவில்லை. நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுர கட்டடங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய ஒரு தாக்குதல் காரணமாக, ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடே அமெரிக்காவால் சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க தேசத்திடம் இருந்து மன்மோகன்சிங் பாடம் எதையும் படித்ததாகத் தெரியவில்லை. சிறிலங்கா மீது படையெடுத்துச் செல்லுங்கள் என்று நாம் கூறவில்லை. சிறிலங்கா பிரதமரை அழைத்து தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தையாவது தெரிவிக்கலாமே?

சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தம் தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையின் மையப்புள்ளியாகிவிட்டது. இந்தியாவை பாதிக்கும் எந்தப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கு மன்மோகன்சிங் கண்ட ஒரே மருந்து அணுசக்தி ஒப்பந்தம் தான்.

பயங்கரவாத தொடர் குண்டு வெடிப்புக்கள், விண்ணைமுட்டும் விலைவாசி, பங்குச் சந்தை வீழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும், அதற்கு அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றே தீர்வு என நினைக்கின்ற மனிதரைப் பற்றி என்ன சொல்ல இப்படி ஒரு கனவு உலகில் வாழும் மனிதர் கண்ணீரில் மிதக்கும் தமிழ் மக்களுக்காக கடமையாற்றுவார் என நினைப்பது முட்டாள்த்தனம்.

இந்த முகமூடி மனிதர்களின் உண்மை நிலை அறிந்து மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது. தங்களின் வாக்குகளால் பதவி சுகத்தை அனுபவிக்கும் இந்தப் போலி மனிதர்களை கீழிறக்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும்.

மக்கள் சக்தி என்னும் மகத்தான ஆற்றல் மீது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. மத்திய அரசை அகற்றும் முயற்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அயராது பாடுபடும். என் நேரம், நினைவு அனைத்தையும் இந்த முயற்சிக்கே அர்ப் பணிக்கின்றேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments