தமிழ் உணர்வாளர்கள் கைது: தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டனம்

தமிழ் உணர்வாளர்களான வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன் இருவரும் அண்ணாமலை மன்றத்தில் "இலங்கையில் நடப்பதென்ன?" என்ற கருத்தரங்கில் பேசிய பேச்சின் அடிப்படையில் தேசத் துரோகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கைதுகள் தேவையற்றது என நம்புகிறோம். அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அது போலவே இராமேஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் இந்திய மத்திய அரசு மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆயுத தளபாடங்களும் ஆட்பலமும் கொடுப்பதை நிறுத்துமாறு கேட்டு நடந்த கூட்டத்தில் பேசிய தமிழீழ உணர்வாளர்களான இயக்குநர் சீமான் மற்றும் இயக்குநர் அமீர் இருவரையும் தமிழக அரசு கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டம் தனது கடமையைச் செய்யும் என தமிழக முதல்வர் கருணாநிதி தத்துவம் பேசினாலும் இந்தக் கைதுகளுக்கு உண்மையான காரணம் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் எனவும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்த அறிக்கைகளே.

சிறிலங்காவின் ஒருமைப்பாட்டைக் காக்க இந்தியா அந்த நாட்டுக்கு ஆயுத உதவி செய்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆகிவிடும் தமிழ்நாடு இந்தியாவில் பிரிய நேரிடும் என்ற பொருள்படவே இவர்களது பேச்சு அமைந்திருந்தது. இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்கும் அடிப்படைப் பேச்சுச் சுதந்திரமாகும்.

கனடாவிலும் பிரெஞ்சு பேசும் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். ஒருமுறைக்கு இருமுறை நடந்த நேரடி வாக்கெடுப்பில் தனிநாடுக்கான கோரிக்கை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனது.

ஆனால் இன்னொரு நேரடி வாக்கெடுப்பில் பெரும்பான்மை கியூபெக் மக்கள் பிரிவினைக்கு ஆதரவு அளித்தால் கனடிய மத்திய அரசு பிரிவினை பற்றி கியூபெக் மக்களது தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கியூபெக் பிரிவினை கேட்கும் புளக் கியூபெக்குவா (டீடழஉ ஞரéடிéஉழளை) என்ற கட்சி இந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளில் போட்டியிட்டு 50 தொகுதிகளில் வென்றுள்ளது.

கஷ்மீர் மாநிலத்தில இயங்கும் All Party Hurriyat Conference (APHC) கூட்டணி காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்தெடுக்க நீண்ட காலமாக போராடி வருகிறது. அங்கே சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"எனது ஆட்சிக்காலத்தில் இது போன்று பேசியவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைத்தேன்" என ஜெயலலிதா வீரம் பேசியிருக்கிறார். தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடைத்த காரணத்துக்காகவே தமிழக மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் என்பதை அவர் வசதியாக மறந்து விட்டார்.

தமிழ்த் தேசியத்தை தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கூட்டமே தீவிரமாக எதிர்க்கிறது. செல்வி ஜெயலலிதா, துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, இந்து மாலினி பார்த்தசாரதி போன்றோர் தமிழ்த் தேசியத்தை கூட்டாக ஒரே குரலில் எதிர்ப்பது ஏதோ தற்செயலான நிகழ்வு அன்று. அது அவர்கள் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டுள்ள வரலாற்றுப் பகைமையின் எதிரொலியாகும்.

தமிழகத்தில் வி.புலிகளுக்கு ஆதரவு இல்லை என்ற மாயையை தோற்றுவித்ததில் இந்து நாளேட்டுக்கு பெரும் பங்குண்டு. அதற்காக ஆசிரியர் ராமுக்கு சிறிலங்கா அரசால் லங்கா ரத்ன விருது கொடுத்து மதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய மத்திய அரசு யுத்தத்தை நிறுத்த வேண்டும் சிறிலங்காவிற்குக் கொடுக்கும் ஆயுத உதவியை நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சிக்கூட்டம் கொடுத்த கெடு 28 ஆம் நாளோடு முடிகிறது.

அதேசமயம் நாடாளுமன்றத்தில் இந்தியா சிறிலங்காவிற்கு கொடுத்து வரும் ஆயுத உதவி தொடரும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். எனவே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியைத் துறக்க அணியமாக இருக்க வேண்டும்.

தமிழ் உணர்வாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் தமிழீழ மக்களின் சிக்கல் தீராது. அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளை ஊக்குவிக்கவே வழிசெய்யும்.

எனவே வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் கருணாநிதியை பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments