வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, கூகர் படகு மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்; 20 படையினர் பலி


யாழ். வடமராட்சி கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகும் கூகர் படகும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நீருந்து விசைப்படகு கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகள் சேதமாகியுள்ளன. 20 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகள் அணியை சிறிலங்கா கடற்படையின் கூகர்-நீருந்து விசைப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் வழிமறித்து தாக்குதலை நடத்தின.

சுமார் 15 நிமிட நேரம் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றது.

கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர்.

இதன் பின்னர், இன்று அதிகாலை 5:20 நிமிடமளவில் கடற்புலிகளின் படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறா பீரங்கிப் படகுகள், நீருந்து விசைப்படகுகள், கடற்படையின் கொமாண்டோக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கூகர் படகு உள்ளிட்ட 20 படகுகளுடன் கடற்புலிகளினதும் கடற் கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்து காத்திருந்தனர்.

இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனர்.

இதில் டோறா பீரங்கிப்படகு ஒன்றும் கூகர் கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

அத்துடன் கரையோர நீருந்து விசைப்படகு ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டது. ஏனைய பல படகுகள் சேதங்களுக்குள்ளாகின.

அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் வெடிகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினர்.

கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினர்.

இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்திய இம்மோதலில் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.

கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன்

கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி

கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன்

கடற்கரும்புலி மேஜர் செந்தூரன்

கடற்கரும்புலி மேஜர் கலைமதி

கடற்கரும்புலி கப்டன் கொள்கைக்கோன்

கடற்கரும்புலி கப்டன் அகச்சேரன்

ஆகிய கரும்புலிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்தி வீரவரலாறாகினர்.

இம்மாவீரர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.






Comments