ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: வைகோ

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட வைகோ, நேற்று முன்நாள் விடுதலை செய்யப்பட்டார். அவரை, இயக்குநர்களான சீமான், அமீர் ஆகியோர் நேற்று காலை சந்தித்து உரையாடினர்.

சந்திப்பின் பின்னர் வைகோ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஈழத்தமிழர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட படைப்பாளிகள் அமீர், சீமான் ஆகியோர் தமிழினத்தின் உரிமை போராளிகள். அவர்களின் சேவை வருங்காலத்தில் அளப்பரியதாக இருக்கும். அவர்களை கைது செய்தது மிகப்பெரிய தவறு. அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவர்களின் நிபந்தனை பிணையை தளர்த்த வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்து வருகிறது. சிங்கள அரசுக்கு தேவையான கதுவீ கருவிகளையும், கோடிக்கணக்கான பணத்தையும் கொடுத்து அங்கு நடக்கும் போரை இந்திய அரசு பின்னால் இருந்து இயக்குகிறது. அங்குள்ள வானூர்தி தளத்தையும் இந்திய அரசு புதுப்பித்து தருகிறது.

ஈழத்தமிழர் படுகொலைக்கு மன்மோகன்சிங் அரசு தான் முழு காரணம். அந்த அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசுக்கும், அதில் முழுப்பொறுப்பு உள்ளது.

எனவே மத்திய அரசை கண்டித்து வரும் 12 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை ஏற்கனவே திட்டமிட்டபடி ம.தி.மு.க. சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும். மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு செய்யும் துரோகத்தை மக்கள் மன்றத்தில் எடுத்துக்கூறுவோம். தமிழக மக்களும் இந்த துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள் என்றார் அவர்.


Comments