ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயக வழிகளில் உதவிகள் செய்பவர் கலைஞர்: பா.நடேசன்


ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எவ்விதமான நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்" என்று கலைஞர் அறிவித்த நேரம் மீண்டும் தமிழர்கள் மீதான குண்டு வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது

இலங்கை இராணுவம். உண்மை நிலவரம் அறிய புலிகளின் செய்தித் தொடர்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டோம்.-(குமுதம்)

இலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்?

"எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறான தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம். காலநேரம் வரும்போது சரியான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.''

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு, இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சு குறைந்திருக்கிறதா?

"மாறாக நேற்றும் இன்றும்கூட கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள குடிமனைகள் மீது சரமாரியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏராளமான வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளன. ஒரு குடும்பத்தில் தந்தையும் தனயனும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.''

இந்த சூழலில் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

"இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எம்மை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.''

ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்ததைப் போன்ற ஓர் ஆதரவு நிலை இப்பொழுது மீண்டும் தமிழகத்தில் உருவாகியுள்ளதா?

"தமிழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே குடும்பத்தவர்கள். தொப்புள்கொடி உறவுகள் போன்றவர்கள். எமக்கொன்றென்றால் தமிழகம் கொதித்தெழும். இன உணர்வு தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகின்றது. இன்று ஈழத்தில் சிறீலங்காவின் அரசபடைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப்போரை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதுவே யதார்த்தம்.''

தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த ஆதரவு நிலை ஈழப்போராட்டத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?

"தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முழு இந்திய மக்களும் அரசியல் தலைமைகளும் புரிந்துகொண்டு எமக்கு ஆதரவாக வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.''

வைகோ, அமீர், சீமான் ஆகியோர் உங்களை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் களே. ஈழ ஆதரவு நிலைப்பாடு தமிழக கூட்டணி அரசியலில் மாற்றங்களை உருவாக்கும் போலிருக்கிறதே?

"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே அணியின் கீழ் அணி திரள்வதையே நாம் விரும்புகின்றோம். தமிழக உள்ளூர் அரசியலுக்குள் தலையிடாமல் இருப்பதே எமது கொள்கையாகும். தமிழர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் அரவணைத்துச் செல்வதையே நாம் விரும்புகின்றோம்.''

மூத்த தமிழ் அரசியல்வாதியாகவும் தமிழக முதல்வராகவும் ஈழப்போராட்டத்தில் கலைஞரின் செயல்பாடுகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

"கலைஞர் எமக்கு தந்தை போன்றவர். இன உணர்வு மிக்கவர். தமிழர்கள் எல்லோரும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர். ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் செய்துவருகிறார்.''

நீங்கள் ஜெயலலிதாவை கொலை செய்யக் குறி வைத்திருப்பதாகவும், அதனால்தான் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறாரே?

"இவ்வாறான கருத்துகளும் பிரசாரங்களும் எமக்கெதிரான சக்திகளால், தமிழக அரசியல் தலைமைகளை எமக்கெதிராக திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இவ்வாறான புனைகதைகளை கேட்கும்பொழுது எமக்கு மிகவும் வேதனையாகவும், துன்பமாகவும் இருக்கின்றது. இவ்வாறான புனைகதைகளை உருவாக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.''.

-தளவாய் சுந்தரம்

Comments