பூநகரிக்கு அடுத்தது என்ன?

வன்னிப் போரை தொடர இலங்கை அரசுக்கு இந்தியாவின் அங்கீகாரம் கிடைத்து விட்டது. தனது சகோதரர் பசில் ராஜபக்ஷவை தனது விஷேட தூதராக டில்லிக்கு அனுப்பி இலங்கையில் போர் நிறுத்தக் கோரிக்கையை நிராகரிக்கச் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ தற்போது தானே டில்லிக்கு நேரில் சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து வன்னிப் போரைத் தொடர்வதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஈழத்தமிழர் விடயத்தில் தலையிடும் தார்மீக உரிமையையும் இந்தியா இழந்துவிட்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதுதான் இந்தியாவின் நோக்கமுமாகும்.

இதனால் தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு என்ன யோசனையை இலங்கை அரசு முன் வைக்கவுள்ளது என்பதைக் கூட கேட்காது பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரானுடன் போட்டி போட்டு இலங்கை படைகளுக்கு இந்தியாவும் இராணுவ உதவிகளை வழங்குகிறது.

வடக்கே நடைபெறும் போரை மனிதாபிமான நடவடிக்கையென இலங்கை அரசு கூறிவருவது போல், இலங்கையில் வெளிநாடுகளின் தலையீடுகளைத் தடுப்பதற் காகவே தாங்கள் போர்த் தளபாடங்களை வழங்குவதாக இந்தியாவும் கூறிவருகிறது. ஈழத் தமிழருக்குகெதிரான போரைத் தொடர இவ்விருதரப்பும் தந்திரமான வார்த்தை ஜாலங்கள் மூலம் முழு உலகையும் ஏமாற்றுகின்றன.

வன்னிப் போரை முன்னெடுக்க இலங்கை அரசு கங்கணம் கட்டி நிற்கையில் அதனைத் தொடர இந்திய அரசும் அங்கீகாரமளித்ததானது, இலங்கையில் இனிமேல் ஏற்படப் போகும் அனர்த்தங்களுக்கு இவ்விரு தரப்புமே முழுப்பொறுப்பாகும். புலிகள் பலமாயிருக்கும் வரை இலங்கையில் தமிழீழம் உருவாகுமென்பதை இரு நாடுகளும் நன்குணரும்.

புலிகளை பலமிழக்கச் செய்து பலவீனமாக்குவதன் மூலம் தமிழர்களின் தனிநாட்டுக் கொள்கையைத் தோற்கடிப்பதுடன் அவர்களின் பிரச்சினைக்கு அரைகுறைத் தீர்வை திணித்துவிடலாமென்பது இலங்கையின் நீண்டகால எண்ணம். இதற்கு அவ்வப்போது இந்தியாவும் உரமூட்டி வந்ததால் தற்போது இலங்கையில் போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கைப் பிரச்சினையில் தலையிடாக் கொள்கையை கடைப்பிடிப்பதாக இந்தியா நீண்ட காலமாகக் கூறிவந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையை தொடர்ந்தே இந்திய அரசு இவ்வாறானதொரு கொள்கையை எடுத்த போதும் பின்னர் அது இலங்கை அரசுக்கு சார்பான கொள்கையை கடைப்பிடித்து இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கத் தொடங்கியது. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடாக் கொள்கையில் இருந்த போது ஈழப் போரில் புலிகளின் கை ஓங்கியிருந்தது.

ஒரு கட்டத்தில் யாழ்.குடாநாட்டைக் கூட புலிகள் கைப்பற்றி விடுவார்களென்ற நிலையில் அதனை இந்தியா தடுத்தது. அதன் மூலம், இப்பிரச்சினையில் இலங்கை சார்பாக தனது கொள்கை உள்ளதை நிரூபித்தது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திய இலங்கை அரசுகள் தந்திரமாக காய்களை நகர்த்தி இலங்கை பிரச்சினைக்குள் இந்தியாவை மீண்டும் தலையிட வைத்தன. இந்தியாவின் பரம விரோதிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து இலங்கைப் படைகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததால் இலங்கை விடயத்தில் இவ்விரு நாடுகளதும் தலையீடுகள் அதிகரிக்கவே, இவ்விரு நாடுகளும் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பதற்காக, இவ்விரு நாடுகளிடமிருந்தும் இலங்கை பெறும் இராணுவ உதவிகளை தானே வழங்கி அவற்றை இந்தப் பிரச்சினையிலிருந்து அப்பால் வைக்க இந்தியா முற்பட்டது.

இதன் மூலம் தனது நலனை முன்னிலைப்படுத்தி இலங்கை அரசை திருப்திப்படுத்த முற்பட்டதே தவிர ஈழத் தமிழருக்கு எதிராக தான் செயற்படத் தொடங்கியுள்ளது பற்றி கவலைப்படவில்லை.

இந்தப் பிரச்சினைக்குள் இந்தியாவை தந்திரமாகச் சிக்க வைத்த இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெற்றதுடன் ஈழத் தமிழருக்கெதிராகவும் இந்தியாவை திசை திருப்பிவிட்டது. இதன் தொடர்ச்சியே, இன்று வன்னிப் போரைத் தொடர இந்தியா அளித்துள்ள அங்கீகாரமாகும். இதன் மூலம் இந்தியா மீண்டும் தவறிழைத்துள்ளது.

தற்போதைய நிலைமையை வாய்ப்பாகப் பயன்படுத்தி இலங்கை அரசின் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் அழுத்தங்களை பிரயோகித்து இரு தரப்பையும் தனது பிடிக்குள் வைத்திருக்கக் கூடியதொரு வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருந்தது. ஆனால் அதனை இந்தியா நழுவவிட்டுவிட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசுக்கு வழங்கும் ஆதரவை ஒரு போதும் வாபஸ் பெறப்போவதில்லையென காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு வழங்கிய உறுதிமொழியை அடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எவ்வித ஆபத்துமில்லையென்பதை உணர்ந்துள்ள இந்திய அரசு தமிழகமே கொந்தளித்தெழுந்த போதும் வன்னிப் போரைத் தொடர இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இதனை இலங்கை அரசு வாய்ப்பாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

எனினும், இதன் மூலம் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் தனது பிடிக்குள் கொண்டு வந்து இலங்கைப் பிரச்சினையில் தனது செல்வாக்கைச் செலுத்தி இந்தப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வொன்றை காணக் கூடிய வாய்ப்பை உருவாக்கி இந்தப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்க முடியும். ஆனால் காலாகாலமாக இலங்கைப் பிரச்சினையில் தவறிழைத்தது போல் இம்முறையும் வாய்ப்பை நழுவவிட்டு தவறிழைக்கிறது. இதனால், தற்போதைய போரில் இலங்கை அரசு வெற்றிபெற்றாலும் சரி, வன்னிப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றாலும் சரி எந்தத் தரப்புமே இந்தியாவை மதிக்கக் கூடிய நிலை ஏற்படமாட்டாதென்பது நிச்சயம். அத்துடன் ஈழத்தமிழரை கைவிட்டதன் மூலம் இனி வரும் காலங்களில் கூட இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் தார்மீக ரீதியாகத் தலையிடும் உரிமையையும் இந்தியா இழந்து விட்டது.

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெறுங்கையுடனேயே சென்றிருந்தார். ஈழத் தமிழர் பிரச்சினைக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் மூலம் தயாரிக்கப்பட்ட யோசனையை இந்தியப் பிரதமரிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளதாக இலங்கை அரசு, ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களை செய்து வந்தது. ஆனால் ஜனாதிபதி மகிந்தவோ எந்தவித தீர்வுத் திட்டத்தையும் அங்கு கொண்டு செல்லவில்லை.

புலிகள் கோரும் தமிழ் ஈழமா, இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலமான இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண சபையா அல்லது அதற்கும் குறைவான தீர்வா எனக் கூட இந்தியப் பிரதமர் கேட்கவில்லை. இது ஜனாதிபதி மகிந்தவுக்கு மிகவும் வாய்ப்பாகிவிட்டது.

பயங்கரவாதத்தை அழித்தொழிக்க ஒத்துழைப்புத் தாருங்களென ஜனாதிபதி மகிந்த கேட்ட போது, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண என்ன வைத்திருக்கிறீர்களென்றாவது இந்தியப் பிரதமர் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழர்கள் எனது மக்கள், எங்கள் நாட்டவர்கள், அவர்களை நாங்கள் பாதுகாப்போமென உணர்ச்சிகரமான வசனங்களை பேசிவிட்டு அந்த மக்களுக் கெதிரான போருக்கான அங்கீகாரத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமரிடம் பெற்று வந்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 2000 மெற்றிக் தொன் உணவை அனுப்பிவைப்பதன் மூலம் தீர்வு கண்டுவிட முடியுமென இந்தியா எண்ணிவிட்டது போல் தெரிகிறது.

இதனால் தான், ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மத்திய அரசை கவிழ்க்க மாட்டேனென தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமருக்கு உறுதியளிக்க, புலிகளுக்கெதிரான போரை முன்னெடுப்பதற்கு இந்தியா தடையாக இருக்காதென இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் இனிமேல் ஏற்படப் போகும் நிலைமைகளுக்கு இலங்கை அரசுடன் இந்தியாவும் பங்காளியாகி விட்டது. வன்னிப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

வன்னிக்குள் பல முனைகளிலும் படையினர் முன்நகர்ந்து வருகின்றனர். பூநகரியை படையினர் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி நோக்கிய நகர்வு முயற்சியையும் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பூநகரியை கைப்பற்றி யாழ்.குடாநாட்டுக்கு, மன்னார் - பூநகரி வீதியூடாக தரைவழிப் பாதையை திறக்க படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். பூநகரியைக் கைப்பற்றினாலும் பூநகரி - பரந்தன் வீதியை முழுமையாக கைப்பற்றி ஏ- 9 வீதியிலுள்ள பரந்தன் சந்திக்குச் சென்றால் மட்டுமே சங்குப்பிட்டி - கேரதீவு ஊடாக படையினரால் தரை வழிப் பாதையைத் திறக்க முடியும். இல்லையேல் ஆனையிறவுக்கு மேற்கேயுள்ள சங்குப் பிட்டி - கேரதீவு கடற்பாதை புலிகளின் தாக்குதலுக்குள்ளாகலாம்.

ஆனையிறவுக்கு மேற்கே குடாக்கடலுடன் இணைந்தே சங்குப்பிட்டி - கேரதீவு கடற்பாதை உள்ளதால் இந்தப் பாதைக்கு புலிகளால் அச்சுறுத்தல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டிய அவசர தேவை படையினருக்குள்ளது. பூநகரியை படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளனர்.

அதேநேரம் மன்னார் - பூநகரி வீதிக்கு (ஏ௩2) சமாந்தரமாக இந்த வீதிக்கு கிழக்கே முன்நகரும் படையினர் பூநகரி - பரந்தன் வீதியை எவ்வேளையிலும் கைப்பற்றி விடுவரென படைத்தரப்பு கூறியது. வியாழக்கிழமை, இந்த வீதிக்கு தெற்கே சுமார் 500 மீற்றர் தூரத்தில் படையினர் நிலைகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வீதியை நோக்கி முன்நகர்ந்த படையினர் புலிகளின் மிகக் கடும் தாக்குதலுக்கிலக்கானார்கள். பூநகரி நோக்கி முன்நகர்ந்த படையினரை விட பூநகரி - பரந்தன் வீதியை நோக்கி நகர்ந்த படையினரையே புலிகள் இலக்கு வைத்தனர். இந்த வீதியைக் கைப்பற்றி இந்த வீதியூடாக கிழக்கு நோக்கி முன்நகர்ந்து ? ஏ 9? வீதியிலுள்ள பரந்தன் சந்தியைக் கைப்பற்றுவதே படையினரின் அடுத்த முக்கிய இலக்காகும். தற்போது கிளிநொச்சியை நோக்கி படையினர் பாரிய முன்நகர்வை மேற்கொண்டாலும் புலிகள் கடும் எதிர்ப்புக்காட்டுவதால் படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

இங்கு ஒவ்வொரு முனையிலும் படையினர் பலத்த இழப்புகளைச் சந்திக்கின்றனர். கொல்லப்படுவோர், காயமடைவோரின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், இழப்புகள் குறித்த விபரம் தற்போது வெளியிடப்படுவதில்லையென்பதால் அது படையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. புலிகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்ற போதும் அவர்கள் நிலைமைக்கேற்ப தந்திரமாக பின்நகர்ந்து தங்களின் இழப்புகளை குறைத்தவாறு படையினருக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். பலத்த இழப்புகளுக்கு மத்தியிலும் பூநகரி-பரந்தன் வீதி, கிளிநொச்சியை கைப்பற்றிவிட படையினர் தீவிர கவனம் செலுத்துகின்றனர். இந்த இரு இலக்கையும் அல்லது பூநகரி மற்றும் பூநகரி-பரந்தன் வீதியைக் கைப்பற்றினாலே பின்னர் பரந்தன் சந்திக்குச் சென்று அங்கிருந்து ஏ௯ வீதியில் தெற்குப் பக்கமாக நகர்ந்து கிளிநொச்சிக்குச் சென்று விடலாமென படையினர் கருதினர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வன்னியில் கடும் மழை பெய்ததால் படை நடவடிக்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், தற்போது அங்கு மழை பெய்யாதது படை நடவடிக்கைக்குச் சாதகமாயுள்ளது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திய படையினர் பூநகரி நோக்கிய நகர்வை துரிதப்படுத்தினர். இதனால், பூநகரி எவ்வேளையிலும் படையினர் வசமாகுமென்பதை உணர்ந்த புலிகள் பூநகரிப் பகுதியிலிருந்து தங்கள் வளங்கள் அனைத்தையும் பூநகரி-பரந்தன் வீதியூடாக இடமாற்றினர். பூநகரியிலிருந்த நீண்டதூர ஆட்லறியையும் அவர்கள் அங்கிருந்து ஏ9 வீதிக்கு கிழக்கே மாற்றியிருந்தனர்.

இதனால் பூநகரி நோக்கி முன்னேறிய படையினருக்கு கடந்த சில தினங்களாக பாரிய எதிர்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. பூநகரி-பரந்தன் வீதியை நோக்கியும் படை யினர் முன்நகர்ந்து வந்ததால் கடைசிவரை காத்திராது புலிகள் பூநகரியிலிருந்து தங்கள் வளங்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலையேற்பட்டது.

இல்லையேல் பூநகரி-பரந்தன் வீதியை படையினர் கைப்பற்றிவிட்டால் பூநகரியில் நிலைகொண் டுள்ள புலிகள் பொறிக்குள் சிக்குவதுடன் கனரக ஆயுதங்கள் மற்றும் வளங்களும் இழக்கப்பட்டிருக்கும். இதனால் படையி னரின் இந்த முன்நகர்வுகளின்போது படையினருக்கெதிரான தாக்குதல்களை மேற்கொள்வதுடன் தங்கள் வளங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக பின்நகர்த்த வேண்டிய நிலையும் புலிகளுக்கேற்பட்டிருந்தது.

இதனாலேயே வன்னிக்குள் படையினர் இந்தளவு தூரம் நகர்ந்தபோதும் புலிகளது வளங்கள் எதனையும் அவர்களால் கைப்பற்ற முடியாது போனது. அடுத்து வரும் நகர்வுகளின்போது கூட புலிகள் தங்கள் வளங்களை இழக்காதே போரிடுவதுடன் அவற்றை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்த முற்படுவர்.

தற்போது பூநகரியும் படையினர் வசமாகிவிட்டதால் நாட்டின் மேற்குக் கரையோரம் முழுவதும் படையினரின் வசமாகிவிட்டது. மேற்குக் கரையிலிருந்த கடற்புலிகளின் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. தமிழகத்துடனான புலிகளின் கடல்வழித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

Comments