வன்னிக்களமுனை பயணிக்கப்போகும் பாதை என்ன?

தற்போது கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் எதிர்பார்ப்புக்களையும், ஏக்கங்களையும் தமிழ் மக்களின் மனங்களில் விட்டுச்செல்லும் நாட்களாகவே இருக்கின்றன.வன்னிக்களமுனை ஒருபுறம் பல மாற்றங்களுடன் நகர்ந்து செல்கையில் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் பல வாதப்பிரதிவாதங்களை தென்னிலங்கையிலும், அரசியல் வட்டாரங்களிலும் தோற்றுவித்து வருகின்றது.

இலங்கை அரசை போரை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் பல எதிர்ப்புப் போராட்டங்கள் முனைப்பு பெற்றுவரும் நிலையில் அரசு மட்டும் முடிவெடுத்து போரை நிறுத்தமுடியுமா என்ற வாதத்தை தமிழ் மக்களுக்கு எதிரான சில சக்திகள் முன்வைத்திருந்தன.

எனவே விடுதலைப்புலிகளின் பக்கம் பந்தை உதைத்து விட முனைந்த இந்த சக்திகளின் ஆவலை தீர்க்கும் முகமாக கடந்த வாரம் இந்திய பொதுவுடமைக்கட்சி விடுதலைப்புலிகளிடம் போர் நிறுத்தம் செய்ய தயாரா என பகிரங்க கோரிக்கையை விடுத்திருந்தது.

இதற்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பா. நடேசன் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை தற்போதும் மதித்து வருவதாகவும், அதற்கு தாம் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே தற்போது பந்து அரசின் பக்கம் சென்று வீழ்ந்துள்ளதுடன் தமிழ் மக்களை இக்கட்டான நிலையில் மாட்டுவதன் மூலம் தமிழகத்தின் கொந்தளிப்பை திசைதிருப்ப முனைந்தவர்களின் முகத்திலும் அடித்துள்ளது.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ள நிலையில் இந்திய மத்திய அரசு அதன் கூட்டாளியான இலங்கை அரசை போர்நிறுத்தத்திற்கு இழுத்து வரவேண்டும் என்ற கடிதத்தை இந்திய பொதுவுடமைக்கட்சியின் மாநில செயலாளர் பாண்டியன் கடந்த வாரம் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ளார்.

இந்தியாவில் தற்போது தோன்றியுள்ள நிலையை தணிக்கும் நோக்கத்துடன் இலங்கை அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் அவரால் இந்திய மத்திய அரசைப் பணியவைக்க முடிந்தாலும் தமிழக மக்களை பணியவைக்க முடியுமா என்பது கேள்விக்குறியானதே.

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை மறைமுகமாக ஊக்குவித்து வந்த இந்திய மத்திய அரசுக்கு தற்போது அதன் கொல்லைப்புறத்தில் கொழுந்து விட ஆரம்பித்திருக்கும் எழுச்சிகள் அனுகூலமானது அல்ல.

அதாவது இந்தியா எறிந்த ஆயுதம் சுழன்று சென்று இந்தியாவையே தாக்கியுள்ளது. தற்போது இந்திய மத்திய அரசினால் கொம்பு சீவிவிடப்பட்ட இலங்கை அரச படைகளை அடக்குவதற்கு அவர்களினாலேயே முடியவில்லை. எனினும் தமிழக மக்களின் எழுச்சியை திசைதிருப்பும் நோக்கத்துடன் இலங்கையின் முக்கிய பிரமுகர்கள் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இது இந்திய உளவுநிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் ஒரு நாடகம் என்பது தமிழகத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவரினது கருத்து.இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் தென்னிலங்கை ஊடகங்கள் மீண்டும் ஒரு புரளியை கிளப்பி விட்டுள்ளன. தற்போதைய படை நடவடிக்கையில் இருந்து தப்பும் நோக்கத்துடன் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒன்றிற்கு முயற்சிப்பதாக தென்னிலங்கை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கருத்துக்கூற ஆரம்பித்து விட்டன.

ஆனால் நடைபெற்ற சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்தால் அதன் உண்மை நிலைமை புரியும். விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அவர்கள் தாமாக முன்வந்து போர்நிறுத்தத்தை கோரவில்லை. வன்னியில் உள்ள 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் போரின் கொடுமைகளினாலும், பொருளாதாரத் தடைகளினாலும் மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதையும், அங்கு அவர்களுக்கான உதவிகளை மேற்கொண்டு வந்த தொண்டர் நிறுவனங்களை அரசு வெளியேற்ற முற்பட்டதனால் மோசமடைந்த நிலைமைகளையும் முன்னிட்டே தமிழக மக்கள் தங்களின் உதவிக்கரங்களை நீட்டியிருந்தனர்.

எனவே வன்னியில் அல்லற்படும் மக்களின் அவலங்களை குறைப்பதற்கு ஒரு போர்நிறுத்தம் தேவை என்றால் அதற்கு இரு தரப்பினரினதும் ஆதரவுகள் தேவை. அதனையே விடுதலைப்புலிகள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் நோர்வேயின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அவர்கள் தன்னிச்சையாக முறித்துக் கொள்ளவில்லை.

அதனை இலங்கை அரசே ஒருதலைப்பட்சமாக முடிவுக்கு கொண்டுவந்திருந்தது.இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை ஆரம்பத்தில் கண்டிக்கத் தவறிய இந்திய மத்திய அரசு தற்போது விடுதலைப்புலிகளை நோக்கி அதனை திருப்ப முற்படுவது அபத்தமானது.

எனினும் இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசுகளின் இந்த கூட்டு நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வை விடுதலைப்புலிகளின் பலவீனம் என கருதுவது தவறானது.

விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் பலவீனமான நிலையில் உள்ள போது போர்நிறுத்ததிற்கு செல்வதில்லை. அது தற்கொலைக்கு சமனானது என்பது அவர்களின் கணிப்பு.எனவே அரச தரப்பு அதனை பலவீனமாக கருதுமானால் அது அதற்கு மேலும் ஒரு பின்னடைவான செய்தியைத்தான் எதிர்காலத்தில் வழங்கும்.

விடுதலைப்புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற ஒரு கருத்துருவாக்கம் தென்னிலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மன்னாரின் வடபுற கரையோரம் நகர்வில் ஈடுபட்டுவரும் 58 ஆவது படையணியினர் பூநகரியில் இருந்து ஏறத்தாழ 8 கி.மீ தொலைவில் உள்ள பாலாவிப் பகுதியை கைப்பற்றி பேய்முனையை அடைந்துள்ளனர்.

58 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட் படையினர் லெப். கேணல் சூராஜ் பன்சாயா தலைமையில் பாலாவி நோக்கிய நகர்வில் ஈடுபட, 2 ஆவது பிரிகேட் படையினர் அதற்கு வடகிழக்காக நகர்வில் ஈடுபட்டிருந்தனர். பாலாவி நோக்கிய நகர்வில் ஈடுபட்ட 11 ஆவது இலங்கை இலகுகாலாட் படையினரை வழிமறித்த விடுதலைப்புலிகள் செம்மண்குன்று பகுதியில் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த மோதல்களின் போது தமது தரப்பில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் விடுதலைப்புலிகள் இது குறித்து தகவல் எதுவும் வெளியிடவில்லை.

செம்மண்குன்று பகுதியில் நடைபெற்ற மோதல்களில் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகளில் ஒன்றான ஜெயந்தன் படையணி ஈடுபட்டதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. 58 ஆவது படையணி தனது நகர்வை விரைவாக மேற்கொண்டு வருகையில், கிளிநொச்சி நோக்கிய நகர்வில் ஈடுபட்டுவரும் 57 ஆவது படையணியின் நகர்வு ஒரு தேக்கநிலையை அடைந்துள்ளது.

57 ஆவது படையணியின் நகர்வை பொறுத்தவரையில் 571 மற்றும் 572 ஆவது படையணிகள் அக்கராயனுக்கு வட மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளினூடாக கிளிநொச்சியை நோக்கிய நகர்வில் ஈடுபட, 573 மற்றும் 574 ஆவது பிரிகேட் படையணிகள் கொக்காவில் மற்றும் முறிகண்டி நோக்கிய நகர்வில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த படையணிகள் கடந்த ஒரு வாரம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு எதிராக தாம் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதல்களில் முட்கொம்பன் மற்றும் கோணாவில் பகுதிகளில் 32 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இரு படையினரின் சடலங்களையும், ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.இந்த மோதல்களின் போது லெப்.கேணல் பிரதாப் திலகரட்ணா தலைமையில் நகர்வில் ஈடுபட்ட 573 ஆவது பிரிகேட்டை சேர்ந்த 7 மற்றும் 11 ஆவது இலங்கை இலகுகாலாட் படையணிகள் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளன. கொக்காவிலுக்கு தெற்காக நிலைகொண்டுள்ள 7 ஆவது இலங்கை இலகுகாலாட் படைப்பிரிவை லெப். கேணல் ரன்ஜித் அபயரத்தினா வழிநடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மணலாறு களமுனையில் நகர்வில் ஈடுபட்டுவரும் 59 ஆவது படையணியின் 593 ஆவது பிரிகேட் படையினர் முல்லைத்தீவில் இருந்து தென்மேற்காக 14 கி.மீ தொலைவில் உள்ள குமுழமுனையை கைப்பற்றியுள்ளதாகவும், 592 ஆவது பிரிகேட் படையினர் நெடுங்கேணியில் இருந்து தெற்காக 6 மைல் தொலைவில் உள்ள ஒதியமலை பகுதியை கைப்பற்றியுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் களமுனைகளில் இருந்து அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.களமுனைகளில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்கள் தமிழ் மக்களிடம் பாரிய கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருவது உண்மை. எனினும் அதிக படைவளம், அதிக சுடுவலு கொண்டு இந்தப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது 58 ஆவது படையணியினர் பூநகரியை அண்மித்து வருவதனால் அவர்களுக்கான ஆதரவு சூடுகளை வழங்கும் பொருட்டு யாழ்குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினர் தமது பீரங்கி நிலைகளை கல்லுண்டாய் காக்கைவெளி மற்றும் பண்ணை கரையோரம் நகர்த்தி தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக யாழ்குடாநாட்டில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பøடயினரின் இந்த நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகளின் நகர்வுகள் என்ன? என்பது தற்போது பல தரப்பிலும் இருந்து எழும் கேள்விகள். தற்போதைய சமர்களில் சில களமுனைகளில் ஒரு கொம்பனி அளவுள்ள படையணிகளையும், பல சமர்க்களங்களில் பிளட்டூன் அளவுள்ள படையணிகளையுமே அவர்கள் மோதல்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

பெருமளவான படையணிகளையும், ஆயுதவளங்களையும் அவர்கள் சேமித்து வருகின்றனர்.தமது படையணிகள் மற்றும் ஆயுத வளங்களை தக்கவைத்துவரும் விடுதலைப்புலிகள் மறுபுறத்தே புதிய படை அணிகளையும் உருவாக்கி வருகின்றனர். கடந்த வாரம் பிரிகேடியர் பால்ராஜ் படையணி மற்றும் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படையணி என்பன ஒரு முழு டிவிசன் படையணிகளின் பலத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வுகள் விடுதலைப்புலிகளின் போரியல் உத்திகள் என்ன என்பது தொடர்பாக பல குழப்பங்களை ஏற்படுத்தி வந்தாலும், கடந்த வாரம் வன்னியில் உள்ள விசுவமடு பகுதியில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனின் முதலாவது ஆண்டு நினைவுநிகழ்வின் போது விடுதலைப்புலிகளின் திரைப்பட வெளியீட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ராதா தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை.அதாவது முன்னைய காலங்களை போல இலங்கை படையினரை துரத்தி நிலங்களை மீட்பதை விடுத்து படையணிகளை முற்றாக அழித்துவிடுவது தான் புதிய போரியலின் உத்தி என தெரிவித்துள்ளார்.

அதனை சுருக்கமாக கூறினால் அரச படைகளின் போரிடும் வலுவை முற்றாக உடைத்துவிடுவது என்பது அதன் பொருள்.இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கு காரணமான ஸ்ராலின்கிராட் சமரின் தத்துவமும் அதுவே. ஜேர்மன் இராணுவத்தில் மிகவும் சிறந்த படையணி 6 ஆவது இராணுவமாகும். ரஷ்யாவின் ஆழமான பகுதிக்குள் ஊடுருவிய இந்த படையணியையும், அதற்கு உதவியாக நகர்ந்த படையணிகளையும் அவற்றின் 200 கி.மீ நீளமான விநியோக வழிகளை முடக்கி ரஷ்யா இராணுவம் தாக்கிய போது இந்த படையணிகள் ஒரு முழுமையான அழிவை சந்தித்திருந்தன.மிக முக்கிய படையணிகளின் முழுமையான அழிவு ஜேர்மன் இராணுவத்தின் போரிடும் வலுவை முற்றாக தகர்த்திருந்தது.

அதன் பின்னர் அவர்களால் தமது நாட்டின் எல்லைகளை கூட பாதுகாக்க முடியாது போய்விட்டது என்பதே அதன் சுருக்கமான வரலாறு.எனினும் 1940 களில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த படைத்துறை உத்திகள் தற்போதைய சமரில் சாத்தியமாகுமா? என்ற கேள்விகள் எழலாம். அதற்கு 1991 ஆம் ஆண்டு ஈராக் மீதான போரை மேற்கொண்ட அமெரிக்க படைகளின் பிரதம தளபதி ஜெனரல் நோர்மன் (எஞுணஞுணூச்டூ Nணிணூட்ச்ண குஞிடதீச்ணூத்டுணிணீஞூ) என்ன சொல்கின்றார்.குவைத்திற்குள் ஊடுருவியிருந்த ஈராக் இராணுவத்தினரை தாக்குவதற்கு தாம் கி.மு 216 ஆம் ஆண்டில் போரியலில் மிகவும் சிறந்த உத்திகளை கடைப்பிடித்த கானிபல் (ஏச்ணணடிஞச்டூ) படையணிகளின் உத்திகளையே பின்பற்றியதாக தெரிவித்திருந்தார்.

அதாவது குவைத்திற்குள் ஊடுருவியிருந்த ஈராக்கின் படையணிகளை அதன் பின்புறமாக தாக்கி அவர்களின் வினியோக வழிகளை தகர்த்த பின்னர் பாரிய மோதல்களை அமெரிக்கப் படைத்தரப்பு மேற்கொண்டிருந்தது.எனவே மிகவும் வேகமாக நகரும் இலங்கை படையணிகள், பொறுமை காத்து வரும் விடுதலைப்புலிகள், விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டதாக எழுந்துள்ள கருத்துருவாக்கங்கள் என்பவற்றின் பின்னால் மறைந்துள்ள உண்மை என்ன? காலம்தான் பதில் சொல்லும்.

- அருஷ்

Comments