சர்வதேசத்தை ஏமாற்றும் திட்டமே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல் என்ற பெயரில் சர்வதேசத்துக்கு - குறிப்பாகத் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு - கொழும்பு அரசு ‘பூச்சாண்டி’ காட்டி வருவதை புட்டுப் புட்டு விமர்சித்து அம்பலப்படுத்தியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தாம் கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது அலாவுதீனின் அற்புத விளக்கு என்ற மாதிரியும் -

அந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்கும் தீர்வு யோசனை, அலாவுதீனின் பூதம் போலக் கிளம்பிவந்து இலங்கையின் இனப்பிரச்சினையை ஒரேயடியாகத் தீர்த்து வைக்கப் போகின்றது என்பது போலவும் -

உலகுக்குப் படம் காட்டுகின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் மூலம் சாதகமான தீர்வுத்திட்டம் ஒன்று கிட்டும் என்று தாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அண்மையில் கூறியிருக்கின்றமை, இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் என்ற கயிறை சர்வதேசம் விழுங்கி, எவ்வளவு நம்பிக்கையை அதில் வைத்திருக்கின்றது என்பதற்கு நல்ல உதாரணமாகும்.

தாம் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் - இந்த மூன்று வருட காலத்தில் - இலங்கை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் இந்தியா வுக்கு விஜயம்செய்து புதுடில்லியில் அந்த நாட்டு அரசுத் தலைவர்களுடன் பேச்சு நடத்தியிருக்கின்றார். அதுபோல புதுடில்லி அரசின் உயர் மட்டத் தலைவர்கள் பல தடவைகள் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார்கள்.

இந்த ஒவ்வொரு சந்திப்பிலும் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிய விடயம் ஆராயப்பட்டே வந்திருக்கின்றது.

ஒவ்வொரு தடவையும், இந்த அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்தைக் காட்டியே தீர்வுக்கான தமது பொறுப்பை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து, காலத்தை இழுத்தடித்து வந்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி.

இதோ சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் ஒரு தீர்வுத்திட்ட யோசனை வெளிவரப் போகின்றது, அது வெளிவந்ததும் அதனையே தீர்வு யோசனையாக முன்வைத்து அமைதித் தீர்வுக்கு வழி செய்வேன் என்று இந்திய அரசுத் தலைமைக்குக் கயிறு கொடுத்தபடியே காலத்தை இழுத்தடித்து வந்திருக்கிறார் மஹிந்தர்.

ஆனால், யதார்த்தத்திலோ நொண்டி வாத்தாகத் தடுமாறித் தத்தளிக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் அர்த்தமின்றி இழுபடுகின்றது.
முதலில் அக்குழுவை ‘அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்’ என்று அழைப்பதே முழுத் தவறு.

வேண்டுமானால் ‘அரசுத் தரப்புக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம்’ என்று அதை அழைக்கலாம் என்பதே உண்மையாகும்.

அரசுத் தரப்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுக்குச் சாமரம் வீசும் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தவிர, எதிரணியில் இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே அந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருக்கின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. இந்த அனைத்துக் கட்சிகள் குழுவிலிருந்து வெளியேறிவிட்டது. அதேபோல மற்றொரு பிரதான எதிர்க்கட்சியான ஜே.வி.பியும் இந்தக் குழுவால் பயனேதுமில்லை என்று குறிப்பிட்டு அதைப் புறக்கணித்துவிட்டது.

இதைவிட, எதிரணியில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதும், சிறுபான்மையினரான தமிழர்களின் அதி உச்சப் பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கின்றதுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த அனைத்துக் கட்சிக் குழுக்கூட்டத்துக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை.

இப்படிப் பிரதான எதிர்க்கட்சிகள் எவையும் பங்குபற்றாத ஒரு கட்டமைப்பை - தனது அரசுத் தரப்புக் கட்சிகள் மட்டும் கூடும் ஒரு கூட்டத்தை - ‘அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு’ ஆகக் காட்டி, சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றது மஹிந்தரின் அரசு.
அத்தகைய சர்வகட்சிக் குழுவினால் உருவாக்கப்பட்ட ‘நிபுணத்துவ அணி’ இனப்பிரச்சினைத் தீர்வுக்கான யோசனைத் திட்டம் ஒன்றைத் தயாரித்தது. அந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த 17 துறைசார் தகைமையாளர்களில் பெரும்பான்மையினரால் - 11 நிபுணர்களால் - ஒன்றிணைந்து தயாரிக்கப்பட்ட இந்தத் தீர்வு யோசனையையே கிடாசிக் குப்பையில் தூக்கி வீசிவிட்டார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அத்தகைய நிலையில் -

இந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மூலம் நீதி, நியாயமான தீர்வு ஒன்று கிட்டும் என்று மனப்பால் குடித்து, அது தொடர்பான கொழும்பின் கயிறை விழுங்கி, காத்திருக்கும் சர்வதேச சமூகம் - குறிப்பாக இந்தியா - கடைசியில் ஏமாற வேண்டித்தான் நேரும்.
தீர்வு முயற்சி தொடர்பான கொழும்பின் முன்னைய நாடகங்களில் ஏமாந்தமை போல இம்முறையும் ‘அனைத்துக் கடசிப் பிரதிநிதிகள் கூட்டம்’ என்ற நாடகத்திலும் ‘இலவு காத்த கிளியாக’ சர்வதேசமும் ஏமாறப் போவது நிச்சயம்.



Comments