தமிழன் என்றால் கொழும்பும் புது டில்லியும் ஒன்றுதான் !

இந்த ஆய்வுக் கட்டுரையைப் பார்க்கும் எவருக்கும் அதிர்ச்சியும் சிலருக்கு என் மீது வெறுப்பும் வரலாம். ஆனால் உண்மைகள் எப்போதும் ஒரு சிலருக்காயினும் கசப்பானதாகவே இருக்கும். பலரின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக ஒரு கருத்து வெளிபடுத்தப்பட்டால் கணக்கற்றோரின் கண்டனத்துக்கு அந்தக் கருத்தும் கருத்துக்கு உரியவரும் தண்டைனைக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகளையும் மனித வரலாறு கண்டுள்ளது. அப்படித் தண்டனைக்கு உள்ளானவருள் சாரள்ஸ் டார்வினும் அவரது உயிர்களின் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் இன்றும் மதவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பது பலரும் இத்தனை நூறு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கண் கூடாகக் காணும் உண்மைகளாகும்.
இந்தியா டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி , கருணா, பிள்ளையான் போன்ற
செல்லாக்காசுகளை வைத்து வியாபாரம் நடத்த முயலுகிறது

இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் அடைந்த காலம் ஒன்றாகவும் இரு நாடுகளும் ஆங்கிலேயரின்ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் சில பொதுவான காரணிகள் இருப்பதை காணலாம். அடிப்படையில் இருநாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தில் விடுபட நினைத்தனவே அல்லது இரண்டு நாடுகளுமே ஜனநாயக ஆட்சி முறையில் ஆழமான நம்பிக்கையோ ஈடுபாட்டோ ஏற்படும் மனப்பான்மையோ கொண்டிருக்கவில்லை என்பதை இருநாடுகளிலும் உள்நாட்டு விவகாரங்கள் கையாளப்பட்ட விதத்திலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

இருநாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னால் ஆட்சித் தலைமையைப் பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்த வகுப்பினரே பொறுப்பு ஏற்றனர். இவர்கள் ஆங்கிலக் கல்வியும் கலாச்சாரமும் கொண்ட கனவான்களாகவே இருந்துள்ளனர். அதனால் இவர்களுக்குத் தமது இனமும் வகுப்புமே உயர்வானவை என்ற நினைப்பும் தம்மை முடிசூடா மன்னர்களாக பாவனை செய்யும் மனப்பான்மையும் மிகுந்து இருப்பதைக் காணலாம். இந்தியா என்றால் இந்தி மொழியும் பிராமணியம் என்ற ஆரிய சிந்தனைப் போக்கும் மேலோங்கிய நிலையால் மகாத்மா காந்தியே விரக்தி கொண்டு விலகும் அளவுக்கு நேருவின் மேலாதிக்கம் இருந்துள்ளது. முகம்மது அலி ஜின்னாவின் மதவழி நாடு பிரிக்கப்படவும் நேருவே காரணம் என்பதை வராலாறே பதிவு செய்துள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அம்பேத்கார் கூட மதச் சார்பின்மை என்று கூறிக் கொண்டே தமது மத நம்பிக்கை சார்ந்த புத்தமதச் சின்னமான தர்மச் சக்கரத்தையும் அசோகச் சக்கரவர்த்தியின் மூன்று சிங்கங்களையும் தேசியச் சின்னங்களாக்கிக் கொண்டார். இது பற்றிய தெரிவுக்குப் பரந்த அளவிலான விவாதமோ கருத்துப் பரிமாற்றமோ இடம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. தேசிய கீதம் கூட அந்நிய ஆட்சியாளரை புகழுவதாகவும் வங்க மொழியில் உள்ளது என்றும் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன.

இலங்கையிலும் இது போன்ற நிகழ்வுகள்தான் இடம் பெற்றுள்ளன. இலங்கையின் அரசமைப்புக்கு எதிரான தமிழரின் பலத்த எதிர்ப்புகளை குறுக்கு வழியில் பதவிகளை இலஞ்சமாகக் கொடுத்து இரு தமிழ் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று பிரித்தானிய குடியேற்ற அலுவலகம் வரை எடுத்துச் செல்லப்பட்ட 50க்கு 50 என்ற கோரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே டி.எஸ்.சேனநாயக்கா சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.சிங்கள இன மேலாதிக்க நிகழ்ச்சித் திட்டமாக அடுத்து இந்திய வம்சாவழித் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது நேருவின் தலைமையில் இந்திய மத்திய அரசு எதனையும் செய்யாது நழுவிக் கொண்டது. பின்னர் நாடற்றவர்களாக்கப்பட்ட பல இலட்சம் தமிழரை ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியா மீள் குடியேற்றத்துக்கு இணக்கம் தெரிவித்து ஏற்றுக் கொண்டது. அந்தத் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு வழங்கிய மீள் வாழ்க்கை என்ன? அவர்களின் இன்றைய நிலை என்ன? அவர்கள் பற்றிய அக்கறை எவருக்குமே இல்லை. குறைந்த பட்சம் திபெத் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்காயினும் அவர்களுக்கு வசதிகள் கிடைத்துள்ளனவா?

(இந்தியாவில் சுமார் 75000க்கும் அதிகமான ஈழத் தமிழ் ஏதிலிகள் உள்ளனர். அவர்களுக்கு 103 முகாம்கள் உள்ளன. அவர்களின் வாழ்வு இப்படியான அவலத்தில் கிடக்கிறது)

இலங்கையில் சிங்களத்தின் இனஒதுக்கல் அரசியலுக்கு இந்தியா ஆரம்பகாலத்தில் இருந்தே முழு ஆதரவும் வழங்கியே வந்துள்ளது. அதன் தலையிடாக் கொள்கை என்பது இலங்கையின் இனவெறிக் கொள்கைக்கு பக்க பலமாக இருந்து வந்துள்ளது. சுயநலம் சார்ந்த ஒரு முன்னெச்சரிக்கையை அடிப்படையில் கொண்டதாகவே இந்தியாவின் இக்கொள்கையை கருதவேண்டியுள்ளது. இதற்கு இந்தியாவின் காஷ்மீரப் பிரச்சினை முக்கிய காரணமாக இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே தெரிகிறது. நேருவும் அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளரும் காஷ்மீரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்ககு வெளியாரின் தலையீட்டை தவிர்த்து வருவதைக் காணலாம். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் விட்டுக் கொடாத மனப்பான்மையும் ஜனநாயக பாரம்பரிய வழி முறைகளை ஏற்காத தன்மையுமே என்பதை ஐ.நா.தீர்மானத்தை அமுலாக்க இணங்காமை காட்டுகிறது.

இந்தியாவும் பாக்கிஸ்தானும் காஷ்மீர் மீது உரிமை கொண்டாட முனைவதே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமையும் போர்களும் நிலவக் காரணமாக உள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவர நினைத்த ஐ.நா. காஷ்மீர மக்களின் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் தீர்வு காணப்படவேண்டும் எனத் தீர்மானம் எடுத்தது.இத்தகைய தீர்மானம் காஷ்மீர் மக்களை பாக்கிஸ்தானுடன் இணையவோ அல்லது தனியான சுதந்திர நாடாகவோ தீர்மானித்து விடலாம் என்ற அச்சம் என்றுமே இந்தியாவுக்கு உள்ளது. எனவேதான் இந்தியா இன்று வரை ஐ.நா. தீர்மானத்தை மிக ஆக்குரோசமாக எதிர்த்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ நல்ல பிள்ளைபோல் காஷ்மீரப் பிரச்சனை ஐ.நா. தீர்மானத்துக்கு அமையத் தீர்க்கப்படவேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் முதுகில் காஷ்மீரப் பிரச்சனை தீராத புற்று நோயாகச் சீழ்வடிந்து கொண்டிருக்கிறது.

இதுவே இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எதுவும் செய்ய முடியாத இக்கட்டில் மாட்டி விட்டுள்ளது. சிங்கள அரசு எந்த வகையிலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக நடந்து கொண்டு வருகிறது. இந்தியா இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வைத் தமிழர் தலையில் சுமத்திவிடப் பல முறை முயன்று தோற்றுக் கொண்டேயிருக்கிறது. இதே கண்ணோட்டத்தில் இந்தியா, ஈழத் தமிழர் விடயத்தில் சிங்களத்துக்கு இசைவாகவே நடந்து கொள்ள முற்படுகிறது. கொல்லப்படும் தமிழர் ஈழத்தவரோ இந்தியரோ என்ற பேதம் இந்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக மீனவராயினும் ஈழத் தமிழராயினும் சிங்களத்தின் கொலை வெறிக்குப் பலிகொடுக்க இந்திய மத்திய அரசு தயாராகவே இருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசில் தமிழகக் கட்சிகளின் கூட்டும் ஆதரவும் அவசியமாக உள்ளது. ஆனால் தமிழகத் தமிழரிடையே கொழுந்து விட்டு எரியும் ஈழத் தமிழர் பிரச்சினையால் எழுந்த உணர்வுகள் கட்டு மீறிப்போகும் நிலை தெரிகிறது. இதற்கு அணைபோடும் முயற்சியில் இந்திய மத்திய அரசு தமிழக காங்கிரஸ் கட்சியை பயன்படுத்தியும் சிறை செய்தும் கட்டுப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க முயலுகிறது.

இந்திய மத்திய அரசின் இந்தக் கொள்கையானது இலங்கை அரசுக்கு மிக வசதியாக அமைந்துவிட்டது. இலஞ்சம் ஊழல் முலமும் பிரச்சார தந்திரங்களாலும் இந்தியாவை பயன்படுத்தியும் முன்னிறுத்தியும் உலக அளவில் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வைத்தும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்தும் கணிசமான சாதனைகளைப் படைத்து விட்டது உண்மையே. ஆயினும் தமிழர் தரப்பு ஏற்கும் விதத்தில் ஒரு அரசியல் தீர்வை என்றுமே வைக்கும் நிலையில் சிங்களம் இல்லை என்பதே யதார்த்தம். இதுவே இந்தியாவுக்கும் பெரிய தலையிடியாக உள்ளது.

தனது பொம்மைகளாக நடக்கக் கூடிய டக்லஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி , கருணா, பிள்ளையான் போன்ற செல்லாக் காசுகளை வைத்து வியாபாரம் நடத்த முயலுகிறது.இந்தப் பேரத்துக்குத் தடையாக இருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது படை வலுவும்தான். எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைத்ததன் மூலம் புலிகளை அழித்து விட தவணை முறையில் தடை செய்து ஒழித்துக் கட்டிவிட இரண்டு இரண்டு வருடங்களுக்கு தடைசெய்து முயன்று வருகிறது.

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் எனப் பலர் பார்த்துக் கொண்டிருக்கையில் புலிகள் இயக்கம் தனக்காகவும் தனது மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழரைப் பொறுத்த வரைக்கும் கொழும்பும் புது டில்லியும் ஒன்றுதான் என்பதை ஈழத் தமிழ் அகதிகளுக்கும் திபெத்திய அகதிகளுக்கும் இந்திய அரசு செய்து கொடுத்துள்ள சலுகைகள் வசதிகளை வைத்து எடை போடலாம்.

சுமார் 5232 திபெத்திய ஏதிலிகள் 22 பகுதிகளைக் கொண்ட ஒரு முகாம் உள்ளது. தாம் விரும்பியது போன்று வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் அவர்களது கலாசாரப்படி ஓட்டு வீடுகளைக் கட்டிக் கொள்ளவும் அனுமதி உண்டு. இன்னும் பலப்பல வசதிகள் வழங்கப் படுகின்றன.கீழே படங்கள் அவர்களின் கதையைச் சொல்லும் சொல்ப்படாத சலுகைகள் இன்னும் பல உள. பட்டியலிட்டால் பொறாமை உணர்வாகக் கொள்ளப்படலாம் என்பதால் அவை இங்கு தரப்படவில்லை.

ஈழப்பிரியன்


Comments