தங்கத் தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



காரிருள் போர்த்தி நிலம் கண்விழித்துப் பார்த்திருக்க,
கறுப்புமுகில் தான் கவிந்து காணவென்று பூத்திருக்க,
ஆழிமகள் அணைக்கவென்ற ஆர்ப்பரிப்பில் அலை எறிய.
வந்துதித்த ஆதவனே! வாழிய நீ பல்லாண்டு.


புற்றீசல் மெட்டெடுத்து புதுப்பாடல் இசைத்திருக்க,
புவி நனைத்து வர்ணமகன் பன்னீரை வார்த்திருக்க,
நறுமலர்கள் வாடாத நனிதிங்கள் கார்த்திகையில்
பிறப்பெடுத்த பெருமகனே! வாழிய நீ பல்லாண்டு.


கிழக்குமுகம் சிரிக்க எழும் ஒளியின் அடர்வே!.
செம் பொன்னள்ளி வீசிவரும் சூரியச் சுடரே!
இலக்கெடுத்துச் சுயம் ஒடுக்கும் மானிடத் திருவே!
இலங்குபுகழ் தலைமகனாய் வாழிய நீ பல்லாண்டு.



தாயகத்தை நெஞ்சிலேற்ற தலைமை வேளே!
தனித்துவப் பண்பாட்டு ஒழுக்கநெறிக் கோவே!
வாயோதும் நாமம் உறை வல்லவர் வடிவே!
வரும்பகை வென்று வாழிய நீ பல்லாண்டு.




சீர் பூத்த படை செய்யும் சிருஸ்டிப் பிரம்மனே!
சின்னச் செம்மழலைச் சிரம் காக்கும் தேவனே!
ஊழிப்பகை அழிக்கும் உக்கிரச் சிவனே!
உலகமெலாம் உமை வாழ்த்த வாழிய நீ பல்லாண்டு.


வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே!
வாழ்வெடுத்துத் தமிழ் நிமிர வழி சமைத்த வல்லமையே!
காலமகள் எமக்களித்த காவியப் பெருந்தேவே!
கவி நெய்து வாழ்த்துகிறோம் வாழிய நீ பல்லாண்டு.

-நன்றி யாழ் நேயர் வல்வைசகாரா -


Comments