ஒபாமா நிருவாகத்தின் கீழ் இலங்கை தொடர்பான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றம் வருமா?

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இன, மத, நிற ரீதியிலான பெரும்பான்மை சிறுபான்மை பாகுபாட்டு சிந்தனை அமெரிக்காவில் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் பராக் ஒபாமா ஆபிரிக்க அமெரிக்கராயிருந்த போதும், அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் சனத்தொகை 13% மட்டுமாயிருந்த போதும், அவர் ஈட்டியுள்ள மகத்தான வெற்றி ஏறத்தாழ உலகம் முழுவதிலுமே கொண்டாடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படப்போகின்றதென்று யாரும் எண்ணுவதற்கில்லை. அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் இருக்காது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெபேட் பிளேத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் கூறியுள்ளதை யாரும் அறிவர். எவ்வாறாயினும் ஒபாமாவின் வெற்றி குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

ஜனநாயக கட்சிக்குள் ஜனாதிபதி அபேட்சகர் தெரிவுக்கான ஆரம்ப கட்ட தேர்தல்கள் முடுக்கி விடப்பட்டபோது, அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியாகிய ஹிலாரி றொதாம் கிளின்ரன் அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியாகப் போகின்றார் என்பது முடிந்த முடிவாக எண்ணப்பட்டது. ஆனால் ஒபாமா அபரிமிதமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்டு, சூறாவளிப்பிரசாரம் செய்து ஹிலாரியைத் தோற்கடித்து விட்டார்.

மக்கெயினின் வியட்நாம் யுத்த சான்றிதழ்

அடுத்த, ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெயின் வியட்நாம் யுத்த வீரர் என்ற சான்றிதழைப் பிரதானமாகக் கொண்டு வெற்றியீட்டிவிட முடியுமென்றெண்ணி களமிறங்கியவர், ஒபாமா அனுபவமோ முதிர்ச்சியோ அற்றவர், முப்படைகளின் பிரதம தளபதியாகப் பணியாற்றுவதற்குப் பொருத்தமற்றவர் என்றெல்லாம் மக்கெயின் ஓயாது பிரசாரம் செய்தவர். அது மட்டுமல்லாமல் ஒபாமா பயங்கரவாதிகளுக்குச் சார்பானவர் என்று கூட அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த வகையில் ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சாதகமாய் அமைந்து விடுமா என்ற அங்கலாய்ப்பு இலங்கையில் சில வட்டாரங்களில் கூடகாணப்பட்டது.

ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் முன்னெடுத்து வந்ததாகிய "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' எனும் நிகழ்ச்சித்திட்டத்துடன் தொடர்புபட்டதாகவே விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இலங்கை ஆட்சியாளரால் சித்திரிக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு உள்நாட்டு யுத்தம், அங்கே ஒரேமாதிரியானவர்களாகக் காணப்படும் இரு பிரிவினருக்கிடையிலான யுத்தமாகவே மோதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன என்று ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டிருந்தார். "அடுத்தவர் பிரச்சினை' ஏனோ தானோ என்று நோக்கப்பட வேண்டியதல்ல என்ற கருத்துப்படவும் அவர் கருத்துக் கூறிவைத்தவர்.

இன்னும் சொன்னால் ஹிலாரி கூட, பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எல்லோரையும் ஒரே தராசில் எடைபோடவேண்டும் என்பதற்கில்லை. அதாவது, அல்ஹைடா வேறு, இலங்கையில் விடுதலைப்புலிகள் வேறு, அவர்களுடைய முலோபாயங்கள் வெவ்வேறானவை என்று கூறியிருந்தார். இத்தகைய ஒட்டுமொத்தமான நிலைப்பாட்டினையிட்டு இலங்கையில் சில சிங்கள புத்திஜீவிகள் மட்டங்களில் கூட கலக்கம் காணப்பட்டது. ஜோர்ஜ் புஷ் விரைவில் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறப்போவது இலங்கையைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானதாகும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின் முன்னாள் பிரதம ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்பு "சண்டே லீடர்' பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்ததை எனது வாராந்தக் கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

8 வருடகாலமாகப் பதவி வகித்து வரும் ஜோர்ஜ் புஷ் அமெரிக்கா கண்ட படுமோசமான ஜனாதிபதி என்பதை முன்னாள் ஜனாதிபதியாகிய ஜிம்மி காட்டர் போன்றோர் கூறியுள்ளது மட்டுமல்ல அதிகப்பெரும்பான்மையான அமெரிக்க மக்களும், குறிப்பாக அமெரிக்க இளைஞர்களும் அசைக்க முடியாத முடிவு எடுத்து விட்டனர். சதாம் ஹுசெயின் வசம் பேரழிவு ஆயுதங்கள் உண்டு என்று பொய் பொய்யாய்ச் சொல்லியே புஷ் ஈராக் மீது யுத்தம் தொடுத்தவர். அதற்காக ஏறத்தாழ 600 பில்லியன் டொலர் பணத்தைப் புதைத்து 4000 பேர் வரையிலான அமெரிக்க இராணுவத்தினரையும், 1 1/2 இலட்சம் ஈராக்கிய பொது மக்களையும் பலியெடுத்தவர்.

எனவே புஷ் தன்னைத்தானே பேரழிவு ஆயுதமாக்கி விட்டார் என்பதே உண்மை. இவ்வாறாக, புஷ் ஆட்சி ஒரு இரண்ட யுகமாகிய நிலையில் குடியரசுக்கட்சி அபேட்சகர் மக்கெயின் புஷ்ஷை விட பெரிதும் வேறுபட்டவர் அல்ல என்ற நிலையில் ஒபாமாவுக்கு மகத்தான வெற்றி கிட்டியமை ஒருவகையில் ஆச்சரியத்திற்குரியதல்ல. உண்மையில் தேர்தல் பிரசாரத்தின் போதும் தொலைக்காட்சி விவாதத்தின் போதும் மக்கெயின் புஷ் நிர்வாகத்தின் மூன்றாவது தவணையென்ற பாணியிலேயே வெள்ளை மாளிகைக்குள் நுழையப்பாடுபடுகிறார் என்று ஒபாமா வெளிப்படையாகச் சாடியிருந்ததையும் யாரும் அறிவர் எதுவாயினும் ஒபாமாவைப் பொறுத்தவரை நம்ப முடியாதளவுக்குத் திறமையாக ஒழுங்கமைக்கப்பட்டு மக்களை ஈர்க்கும் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டு வெகுவெற்றிகரமாக நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரமாய் அமைந்துள்ளதென சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பிக்க ரணவக்கவின் மந்த புத்தி

இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஒபாமாவின் வெற்றி தொடர்பாக சுவாரஸ்யமான சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். ரணவக்க ஒபாமாவைப் புகழ்ந்து பாராட்டிய தனது அறிக்கையில் "நூற்றாண்டுக் கணக்காக நிலவி வந்த வெள்ளை மேலாதிக்க விலங்குகளை உடைத்தெறிய வேண்டியது அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கருமங்களில் ஒன்றாகும். உலகில் நடத்தப்பட்ட வேறு எந்தத் தேர்தல்களையும் விட மிகத் திறமையாக முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசாரம் ஒபாமாதான் இன்றைய மட்டுமல்ல இந்த தசாப்தத்திற்கான, ஏன் இந்த நூற்றாண்டிற்கான கதாநாயகன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிங்கள பௌத்த மக்களுக்குச் சொந்தமானது எனவும் இலங்கையில் தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கிய மக்கள் "விருந்தினர்கள்' எனவும் குறிப்பிட்டு இனவெறிக் கூத்தாடி வரும் சம்பிக்க ரணவக்க சிறுபான்மை கறுப்பு இனத்தவரான ஒபாமாவை வானளாவப் புகழ்ந்து தனது அசிங்கமான அறிவிலித்தனத்தையும் மந்த புத்தியையும் மூடி மறைக்க முயல்கிறார். "அமெரிக்க வெள்ளை மேலாதிக்க விலங்குகள்' என அவர் குறிப்பிட்ட அவலட்சணத்துக்கு சமனாகவே இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது என்பதை உணராதளவுக்கு அவரின் மந்த புத்தியின் ஆழம் எவ்வளவு என்பது தெரிகிறது.

ரோஹித்த போகொல்லாகமவின் ஒப்பாரி

மற்றும் ஒபாமாவுக்கு வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியைப் பார்ப்போம். "ஒபாமாவின் வெற்றியானது அமெரிக்க அரசியல் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ளதாகிய பாரிய மாற்றத்தினைப் பிரதிபலிக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தினைத் தோற்கடிப்பதற்கு அவர் எமக்கு உதவ வேண்டுமென வேண்டி நிற்கின்றோம். ஏனென்றால், எமது நாடும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கொண்டது. இது ஒரு ஜனநாயக நாடு. அவரின் வெற்றி எங்கள் எல்லோருக்கும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை நாம் அறிவோம்' என்றெல்லாம் கூறியுள்ளார். "மாற்றம் வேண்டும்' என்பது தான் ஒபாமாவின் தாரக மந்திரமாக வெளிப்படுத்தப்பட்டிருந்ததை யாரும் அறிவர்.

ஆம் இலங்கையிலும் மாற்றம் வேண்டும். இலங்கைக்குச் சமாதானம் வேண்டும். சுபிட்சம் வேண்டும். இலங்கை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். இவற்றை எட்டுவதற்குப் பயங்கரவாதம் தடையாயிருக்கின்றது என்று ஒபாமாவுக்குச் சொல்வதில் அர்த்தமில்லை. அடுத்தவரை எதிரி என்று பார்த்து அவரைத் தோற்கடிக்க வேண்டும். அல்லது தொலைத்துக் கட்ட வேண்டும் என்பதை விடுத்து பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு மூலம் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டுமென ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டதையும் இலங்கையின் சிவில் யுத்தம் பற்றி அவர் ஏலவே கூறிவைத்ததையும் போகொல்லாமக மற்றும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒபாமா எதிர்நோக்கும் சவால்கள்

தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது ஒன்று அவற்றை நிறைவேற்றுவது இன்னொன்று. ஒபாமா பதவியேற்பதற்கு முன்னதாகவே 1930 களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி அமெரிக்காவின் வாசற்படிக்கு வந்து விட்டது. அவை திடீரென வந்தவையுமல்ல. புஷ் நிர்வாகத்தின் பல்வேறு பித்தலாட்ட யுத்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியான விரயங்கள் காரணமாக அவை படிப்படியாக வந்து கொண்டிருந்தன. லேமன். கோல்டின் சச் போன்ற பெரிய வங்கிகளும் பொறிந்து விட்டன. இந்த நிலையிலேயே ஒபாமா அமெரிக்காவைப் பொறுப்பேற்கிறார். கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை விட நிதி நெருக்கடிப் பிரச்சினைக்கே தான் முன்னுரிமை வழங்கப் போவதாக சீ.என்.என். பேட்டியாளர் வூல்வ் பிளிற்சருக்கு வழங்கிய செவ்வியில் ஒபாமா கூறியுள்ளார்.

மற்றும் சியோனிச வாதிகளாகிய யூதர் குழாம் தன்னை ஆட்டிப்படைக்க விடாமல் ஒபாமா செயற்பட்டாலேயே அவர் ஓரளவேனும் முன்னேறிச் செல்ல முடியும். உதாரணமாக ஈரானுடன் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என யூதர் குழாம் வற்புறுத்தியுள்ளது. அதேநேரத்தில் ஒபாமா இஸ்ரேலுக்கு விரோதமான நிலைப்பாடு கொண்டவர் அல்லர். மாறாக, இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும், அதற்காக 30 பில்லியன் டொலர் பணத்தை ஒதுக்கச் சித்தமாயிருப்பதாக ஒபாமா ஏலவே அறிவித்துள்ளார். பயணம் கஷ்டங்கள் நிறைந்ததாயினும், இலக்கை எட்டுவது 1 வருடத்திலோ அல்லது ஒரு பதவிக்காலத்திலோ முடியாமலும் போகலாம். ஆனால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்து விட முடியும் என ஒபாமா தனது வெற்றி உரையில் குறிப்பிட்டிருந்தார். ஒபாமாவின் வெற்றி உலகளாவிய ரீதியில் சில சாதகமான மனமாற்றங்களுக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு இல்லாமல் இல்லை. இலங்கையிலும் பேரினவாத இருள் அகன்று, அழிவு யுத்தம் கடந்த கால விடயமாகிவிட்டால்தான் இலங்கை உலகத்தில் ஒரு பொருட்டாக எண்ணப்படும்.

- வ.திருநாவுக்கரசு

நன்றி: தினக்குரல்

Comments