அமெரிக்கத் தேர்தலும் வன்னிகளமுனையும்

தமிழ் மக்களுக்கு மிகவும் நெருக்கடி மிகுந்ததாக அமைந்துவிட்ட 2008ஆம் ஆண்டு விடைபெற்று செல்வதற்கு இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஓரளவேனும் ஆறுதல் தரக்கூடிய புறச்சூழல்கள் மெதுவாக மாற்றம் பெறத் தொடங்கியுள்ளன.தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி குறுகிய அரசியல் நலன்கொண்ட அரசியல் தலைவர்களின் அபிலாஷைகளில் சிக்குண்டு ஒரு உத்வேகம் குன்றிய போதும், தமிழக மக்களிடம் தோன்றியுள்ள எழுச்சியானது, தமிழ் இனம் என்ற ஒரு சக்தியாக பலம் பெற்று வருவது முக்கியமானது. அங்கு தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் அதனையே பிரதிபலிக்கின்றன.இதனிடையே உலகின் தனி வல்லரசாக உலக ஒழுங்கில் பல நெருக்கடிகளுக்கு காரணமாக இருந்த அமெரிக்காவிலும் பாரிய ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் முதற்றடவையாக கறுப்பு இன பிரஜை ஒருவர் அரச தலைவராக தெரிவாகியுள்ளார். 47 வயதான பராக் ஹுஸைசன் ஓபாமா வெள்ளை நிறத் தாயாருக்கும், கறுப்பினத் தந்தையாருக்கும் அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் பிறந்தவர். அமெரிக்காவில் ஒரு மாற்றம் வேண்டும் என அனைத்துலக சமூகம் மட்டுமல்லாது, அமெரிக்க மக்களும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஒரு மாற்றத்திற்கான அறிகுறிகள் தொன்படுவதாகவே அமெரிக்கா முதற் கொண்டு அனைத்துலக ஊடகங்களும் ஆரூடம் கூறிவருகின்றன.

நீண்டநாட்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இழுபட்டு செல்லும் போர், அமெரிக்காவில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடிகள் என்பன அங்கு ஒரு மாற்றம் வேண்டும் என அமெரிக்க மக்களைக் கூட சிந்திக்க வைத்திருந்தது.எனினும் ஒபாமாவின் வரவைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என அமெரிக்காவின் கூட்டணிநாடுகள் அச்சமடையத் தேவையில்லை என முன்னாள் இராணுவ உயர் அதிகாரியும், அரசியல் உயர் அதிகாரியுமான கொலின் பவல் தெரிவித்துள்ளார். ஒபாமாவுக்கு நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பது தெரியும், எமது எதிரிகள் யார் என்பதும் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னைய ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் கடைப்பிடித்து வந்த வெளிவிவகாரக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாகவோ அல்லது சற்று விலகியதாகவோ ஓபாமா அரசாங்கத்தின் கொள்கைகள் இருக்கலாம் என ஆசிய ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.இலங்கை இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் உலகில் இடம்பெற்றுவந்த இனப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மேற்கொண்ட நகர்வுகளை ஒத்ததாகவே ஒபாமாவின் நகர்வுகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளும் தோன்றியுள்ளன.

பில் கிளிண்டனின் கொள்கைகளுக்கு ஒபாமாவின் ஆதரவுகள் எப்போதும் உண்டு. முன்னாள் யூகோஸ்லாவியாவில் இடம்பெற்றுவந்த இன முரண்பாடுகளுக்கு தீர்வாக பொஸ்னியா, மொன்ரோநீக்குரோ, கொசோவா போன்ற சிறிய தேசங்கள் உருவாகுவதற்கான அடிப்படையை 1990களின் பிற்பகுதியில் நிறுவியவர் பில்கிளிண்டன் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.வட அயர்லாந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதிலும் பில்கிளிண்டனின் பங்கு அளப்பரியது.

வடஅயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரத்தில் உள்ள ஐரோப்பா ஆடம்பர விடுதியில் பில்கிளிண்டன் தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வந்து தங்கிச் சென்றது போரினால் சிதைவடைந்திருந்த அந்த நகரத்தின் பொருளாதாரத்தை மறுசீரமைத்திருந்தது.இலங்கையில் இடம்பெற்றுவரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் கிளிண்டன் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆழிப்பேரலை அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்படுவதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் கிளிண்டனும் ஒருவர். எனினும் அது இலங்கை அரசினால் பின்னர் தந்திரமாக சிதைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் நடைபெற்றுவரும் இன மோதல்களை தீர்ப்பதற்கு உதவியாக கிளிண்டன் மன்றம் (இடூடிணtணிண ஊணிதணஞீச்tடிணிண) என்ற ஒரு அமைப்பையும் அவர் ஏற்படுத்தியிருந்தார்.

ஒபாமா அரச தலைவராக பதவியேற்றதும், முன்னாள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான பில் கிளிண்டனின் அமைப்பு ஒபாமாவின் ஆதரவை பெறக்கூடும் எனவும் கருதப்படுகின்றது. எனவே இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பில் கிளிண்டன் விரும்பினால் அவர் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடைமுறைப்படுத்திய "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற கொள்கைக்குப் பதிலாக இனப்பிரச்சினையை தீர்க்கும் கொள்கையொன்றை அமுல்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக இராஜதந்திர அழுத்தங்களும் பயன்படுத்தப்படலாம்.இதனிடையே கடந்த ஜூலை மாதம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ ஒபாமாவை ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பும் தமிழ் மக்களிடம் ஒரு நம்பிக்கையை துளிர்விட வைத்திருந்தது. நம்பிக்கைகள் அதிகம். ஆனால் அதுவே ஆபத்தும் ஆகலாம். அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள இந்திய பொதுத்தேர்தலில் இந்திய அரசியலிலும் மாற்றங்கள் எற்படலாம் என்ற கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவியில் அமர்ந்துள்ள போதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் வழிகாட்டுத் தலைவருமான சோனியாக காந்தியின் வழிநடத்தலில்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் சென்று கொண்டிருப்பதாக எதிர்த்தரப்பினர் சுட்டிக்காட்டி வருகின்றனர். சோனியா காந்தியின் மேற்குலகம் சார்பான கொள்கைகள் இந்தியாவின் அடையாளத்தை வருங்காலத்தில் அழித்துவிடும் என்ற கருத்துக்களும் வெளியிடப்படுகின்றன.

இந்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நிலைப்பாட்டிற்கும் சோனியா காந்தியின் அழுத்தம் காரணம் என்பது எதிர்த்தரப்பின் வாதம். இதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மன்மோகன் சிங்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது 19 வாக்குகளால் அரசாங்கம் தப்பிப் பிழைத்திருந்தது. இந்த வாக்கெடுப்பில் தமிழகத்தின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு சார்பாக வாக்களித்திருந்தனர். தமிழகம் எதிர்த்து வாக்களித்திருந்தால் அன்றே அரசாங்கம் கவிழ்ந்திருக்கும்.

சோனியா காந்தியின் மேற்குலகம் சார்ந்த அரசியல் நலன்களுக்கு அப்பால் தமிழ் மக்களை பழிவாங்கும் அரசியல் ஆதங்கமும் இருக்கலாம். அதாவது இலங்கையின் இனப்பிரச்சினையில் இருந்து இந்தியா ஒதுங்கியிருப்பது போன்ற ஒரு தோற்றப்பாட்டை வெளியில் உருவாக்கிய படி தமிழ் மக்களின் விடுதலைப்போரை முற்றாக நசுக்கிவிடுவதே அவரின் உள்ளார்ந்த திட்டம் என்பது தற்போது பலருக்கும் தோன்றியுள்ள சந்தேகம். இதை அண்மையில் அவரின் புதல்வர் ராகுல் காந்தி விடுத்த அறிக்கையில் இருந்து காணக்கூடியதாக உள்ளது.

அதாவது, சோனியாவின் உத்தி மெல்ல கொல்லும் உத்தி அல்லது மறைந்திருந்து தாக்கும் உத்தி என்று கூட அதனை வரையறுத்துக் கொள்ளலாம். தற்போதைய அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து தன்னிச்சையாக விலகியபோது கருத்துக்கூற மறுத்த இந்திய மத்திய அரசு படைத்துறை உதவிகளை மிகவும் அதிகளவில் வழங்கி வருவதன் நோக்கம் அதுவே என்பதும் அரசியல் அவதானிகளின் கருத்து.இலங்கைக்கு வெளியில் உள்ள இந்த புறச்சூழல்கள் மெல்ல மெல்ல மாற்றம் பெற்றுவருகையில் படைத்துறை ரீதியாக இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுவிட முடியாது என்ற வாதமும் வலுப்பெற்று வருகின்றது.

எனினும் படைநடவடிக்கையையே தனது அரசியலின் ஆணிவேராக கொண்டுள்ள அரசாங்கம் அதற்கான முயற்சிகளையே பெருமளவில் முன்னெடுத்து வருகின்றது.தற்போது வன்னிக்களமுனைகளில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 6 டிவிசன் படையினருக்கு பக்கபலமாக 7 ஆவது டிவிசனை அரசு களமிறக்கியுள்ளது. நடவடிக்கை படையணி மூன்று (கூச்ண்டு ஊணிணூஞிஞு ஐஐஐ) அல்லது 63 ஆவது டிவிசன் எனப்படும் இரண்டு பிரிகேட்டுக்களை கொண்ட இந்த படையணியின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் ரட்னபிரியா லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னர் கவசப்படையணியில் பணியாற்றியவர்.நான்காவது ஈழப்போர் ஆரம்பித்த பின்னர் உருவாக்கப்பட்டுள்ள ஆறாவது புதிய டிவிசன் இதுவாகும். இந்த டிவிசனின் முதலாவது பிரிகேட்டின் (631) கட்டளைத் தளபதியாக 59 ஆவது படையணியின் 7ஆவது கெமுனுவோச் றெஜிமென்ட் படையினரை வழிநடத்தி வந்த லெப்.கேணல் பிரியந்த பெரேராவும், 632 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக லெப். கேணல் சுபாசனா வெலிகலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர் 57ஆவது படையணியின் 4ஆவது சிங்க றெஜிமென்ட் படைப்பிரிவை வழிநடத்தியவர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு படையணிகளில் 61ஆவது படையணியை தவிர ஏனைய படையணிகள் ஐந்தும் தாக்குதல் படையணிகளாக உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.மாங்குளம் நோக்கிய நகர்வில் இந்த படையணி ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை இராணுவத்தின் 57ஆவது படையணியினர் கிளிநொச்சிக்கு தென் மேற்காக ஒன்பது கி.மீ தூரத்தில் உள்ள அக்கராயன்குளம் பகுதியை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

57ஆவது படையணியை சேர்ந்த 3ஆவது கஜபா றெஜிமென்ட் படையினர் மேஜர் சன்ஜயா பெர்னாண்டோ தலைமையிலும், 9 ஆவது விஜயபா றெஜிமென்ட் லெப். கேணல் சிசிரா ஹேரத் தலைமையிலும், 8 ஆவது இலகுகாலாட் படையினர் லெப். கேணல் இப்சிதா திஸாநாயக்கா தலைமையிலும் அக்கராயன்குளம் பகுதி மீதான படை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததாகவும், இந்த நடவடிக்கையின் போது 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவை தெரிவித்துள்ளன.

எனினும் விடுதலைப்புலிகள் இது தொடர்பில் எதுவும் தெரிவிக்காத போதும் அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்றதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மன்னாரின் கரையோரமாக வட திசையில் முன்னகர்ந்துவரும் இராணுவத்தின் 58ஆவது படையணியினர் கடந்த வாரம் நாச்சிக்குடா பகுதியை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதற்கு முன்னர் இராணுவத்தினர் ஜெயபுரம் பகுதியை கைப்பற்றியிருந்தனர். இந்த நடவடிக்கையில் 12ஆவது கஜபா மற்றும் 10ஆவது கஜபா றெஜிமென்ட் போன்ற படையினர் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில் கடந்த வாரம் சாலியபுர பகுதியில் நடைபெற்ற கஜபா றெஜிமென்ட் படையணியினரின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேக்கா "போரில் 80 வீதம் நிறைவுபெற்று விட்டதாக' தெரிவித்துள்ளார்.

அதாவது 59 ஆவது படையணியினர் பூநகரியை அடையும் போது கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையில் நிலைகொண்டுள்ள 53 மற்றும் 55 ஆவது படையணியினர் ஆனையிறவை நோக்கி முன்நகர்வார்கள் எனவும் அப்போது போரில் பெரும்பகுதி நிறைவுபெற்றுவிடும் என்பதும், அதன் பின்னர் தற்போதுள்ள ஏறத்தாழ 100 பற்றாலியன் படையினரை பயன்படுத்தி வன்னியின் கிழக்குப்புறம் உள்ள பிரதேசங்களை கைப்பற்ற முடியும் என்பது அவரின் கணிப்பு. காகிதத்தில் வரையப்படும் இந்த உத்திகளின் அடிப்படையில் போரில் 80 வீதம் நிறைவுபெற்று விட்டதற்கான கணிப்பீடு வெளிவந்துள்ளது.

1999ஆம் ஆண்டு இராணுவம் ஒட்டுசுட்டான் பகுதியை கைப்பற்றிய போதும் அன்றைய பாதுகாப்புத்துறை பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தை பேரில் 90 வீதம் நிறைவுபெற்றுவிட்டதாக தெரிவித்திருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.ஆனால் அதன் பின்னர் தான் கடும் போர் ஆரம்பித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் நாள் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரமநாயக்கா படையினர் சில தினங்களில் கிளிநொச்சியை கைப்பற்றிவிடுவார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது மூன்று மாதங்களை அண்மிக்கும் நிலையிலும் உக்கிர மோதல்கள் அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை காணலாம்.மோதல்கள் உக்கிரமடைந்துவரும் நிலையில் விடுதலைப்புலிகள் தமது தாக்குதல் அணிகளை மீண்டும் ஒழுங்குபடுத்தி உள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியை நோக்கி நகர்வில் ஈடுபட்டுவரும் படையினருக்கு எதிரான தாக்குதல்களில் கேணல் லோறன்ஸ் மற்றும் கேணல் லக்ஸ்மன் ஆகியோருடன் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி லெப். கேணல் வேலவனும் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் ஆழ ஊடுருவும் படையணிகளின் நடவடிக்கைகளை வழிநடத்திவரும் கேணல் ஜெயம் தற்போது மணலாறு களமுனைகளில் 59 ஆவது படையணியினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்தும் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை வழிநடத்திவந்த கேணல் சொர்ணத்தை விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் அவசரமாக அழைத்துள்ளதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

முன்னணி களமுனைகளில் பணியாற்றி வந்த மூத்த தளபதிகளில் பலரை விடுதலைப்புலிகள் திடீரென உள்வாங்கிக் கொண்டது தாக்குதல் திட்டம் ஒன்றிற்கான அறிகுறியாக இருக்கலாம் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்குப் பகுதிகளிலும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது நோக்கத்தக்கது.கடந்த ஒரு வாரத்தில் கிழக்கின் பல பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் 11 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் அங்கு பல படையினரும் கொல்லப்பட்டிருந்தனர். நாயாறு பகுதியில் இருந்து திருமலைக்கு விடுதலைப்புலிகளின் சிறப்பு அணியொன்று ஊடுருவியுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.வடபகுதியில் மட்டுமல்லாது கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும் அதிகரித்து வரும் மோதல்கள் எடுத்துக்காட்டும் செய்தி என்ன என்பதே தற்போது பலரினதும் ஆர்வம். பாரிய மோதல் ஒன்று வடபோர்முனையில் ஆரம்பமாகும் போது கிழக்கிலங்கையும் ஆட்டம் காணலாம் என்பது ஊகமாக எழுந்துள்ளது.

அருஷ்

Comments