வீழ்கிறதா கிளிநொச்சி?-- ஜீனியர் விகடன்

ஈழத் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு தொடுத்துள்ள போரில் அது பெற்றுவரும் தற்காலிக வெற்றிகள், சிங்கள இனவெறிக்குத் தீனியாக அமைந்துள்ளன.

இப்போது பூநகரியை சிங்கள ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதை மிகப் பெரும் வெற்றியாக சிங்கள அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அங்குள்ள தேசிய சுதந்திர முன்னணி, ஒரு வார காலத்துக்கு இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு சிங்கள மக்களி டம் கூறியுள்ளது. புலிகளிடமிருந்து பிரிந்து சென்று நாடாளுமன்ற உறுப்பினராக புதுஅவதாரம் எடுத்துள்ள கருணாவும் இந்த வெற்றியை மகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார்!

பூநகரி, சிங்களப் படைகளின் வசம் சென்றுவிடும் என்பது முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான்.சுமார் பத்து நாட்களுக்கு முன்பே இதுபற்றி கர்னல் ஆர்.ஹரிஹரன் கடடுரை ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். பூநகரியிலிருந்து புலிகள் பின்வாங்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தி அப்போது வெளியாகியிருந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த தம்முடைய மூன்று பீரங்கிகளை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்ற தகவல் வெளியானபோதே, பூநகரியை அவர்கள் கைவிட முடிவு செய்துவிட்டார்கள் என்றே ராணுவ நோக்கர்கள் கருதினார்கள். சிறு அளவிலான எதிர்ப்பைக் காட்டியபடி, தம்முடைய படைப்பிரிவுகளை சிறுசிறு குழுக்களாக வேறு இடங்களை நோக்கி புலிகள் அனுப்பிவிட்டார்கள்.

தற்போது நடந்துவரும் போரில் புலிகள் பின்வாங்கிச் சென்றபோதிலும், இலங்கை ராணுவத்துக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கை நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ள தகவலின்படி கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 171 சிங்கள ராணுவ வீரர்கள்புலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1122 பேர் காயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் 106 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 662 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரியை இழந்தது புலிகளுக்குப் பெரும் சேதம்தான். இதனால் இலங்கையின் மேற்குப் பகுதியில் கடற்புலிகளின் நடமாட்டம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும். தமக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுவந்து சேர்ப்பதில் அவர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்படும். இந்தப் பின்னணியில்தான் புலிகள் விமானங்கள் மூலம் ஆயுதங்களைத் தருவிக்க முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ராணுவச் செய்திகளை வெளியிடும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வார இதழான 'ஜேன்ஸ் வீக்லி' இதுபற்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 2004-ம் ஆண்டுக்கும், 2007-ம் ஆண்டுக்கும் இடையில் சரக்கு விமானங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ற வகையில், புலிகள் இரண்டு விமான ஓடுபாதைகளை அமைத்திருப்பதாக அது கூறியுள்ளது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ஓடுபாதையின் புகைப்படம் ஒன்றையும் அது வெளியிட்டிருக்கிறது. அந்த ஓடுபாதையைப் பயன்படுத்தி மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து ஆயுதங்களைப் புலிகள் கொண்டுவருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அது கூறியிருக்கிறது. ஆக, கடல் மற்றும் நில வழிகள் அடைபட்டாலும் வான்வழி மூலமாக புலிகள் தம்மை பலப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், பூநகரியை ராணுவத்திடம் இழந்திருப்பது புலிகளின் ராஜதந்திரமான நடவடிக்கை என்று ஒருபக்கம் செய்திகள், பரவ அதனை புலிகள் தரப்பு மறுத்திருப்பதாகவும் இன்னொருபக்கம் செய்திகள் மாறிமாறி வந்தன.
பூநகரியைக் கைப்பற்றிய சிங்கள ராணுவத்தின் அடுத்த குறி ஆனையிறவாக இருக்கலாம் என்று, இப்போது யூகங்கள் எழுந்துள்ளன. சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் 'ஓயாத அலைகள்' நடவடிக்கை மூலமாக புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றினார்கள். இலங்கைப் போரில் அந்த வெற்றி முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதன்பின் அதை மீட்பதற்கு சிங்கள ராணுவம் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இப்போது ஆனையிறவு சிங்களப் படைகளின் வசம் வீழக்கூடும் என்ற கணிப்புகள் உலவிக்கொண்டிருக்கின்றன. அப்படி நிகழ்ந்தால், அது புலிகளுக்கு மேலும் ஒரு பின்னடைவாகவே இருக்கும்.

யுத்தத்தின் நிலை இப்படியிருக்கும்போது... போர் நடக்கும் பகுதிகளில் இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடும் தமிழ் மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. அவர்களிடையே நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி நிலவரப்படி, வன்னிப்பகுதியில் மொத்தம் 72,776 குடும்பங்களைச் சேர்ந்த 3,27,730 பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 39,449 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 33,327 குடும்பங்களும் அகதிகளாகி இருக்கிறார்கள் என்று அது கூறியிருக்கிறது. சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உணவு கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. மாதம் ஒன்றுக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு முதல் மூவாயிரம் டன் வரையிலான உணவுப் பொருட்கள் அவர்களுக்குத் தேவைப்படும்.

தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டால் கூட அது பத்து, இருபது நாட்களுக்குத்தான் போதுமானதாக இருக்கும். மத்திய அரசு அனுப்புவதாகச் சொன்ன 800 டன் உணவுப் பொருள் எப்போது அனுப்பப்படும் என்று தெரியவில்லை! சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏ-9 பாதை மூடப்பட்டு, ஈழத்தமிழர்கள் பட்டினியால் தவித்துக் கொண்டிருந்த போதும் இப்படித்தான் உணவுப் பொருள் அனுப்பப் போவதாக மத்திய அரசு கூறியது. ஆனால், அனுப்பவில்லை!
உணவுப் பொருட்கள் தமிழ் மக்களுக்குச் சென்று சேர்வதில் பல்வேறு தடைகள் உள்ளன. வாகனங்கள் செல்லவேண்டிய ஏ-9, மாங்குளம்-ஒட்டுசுட்டான் சாலை, கனகராயன்குளம்-ஒட்டுசுட்டான் சாலை ஆகியவை கடுமையான பீரங்கித் தாக்குதல்களுக்கு இலக்காகி இருக்கின்றன. சாலைகளும் மழையால் சேதமடைந்துள்ளன. ஓமந்தை சோதனைச் சாவடியில் சிங்களப் படையினர் சோதனை என்ற பெயரில்வாகனங்களைத் தடுத்து வைப்பதால், தேவையற்ற தாமதம் நேர்கிறது.

இடம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகளாக வாடும் தமிழ் மக்களுக்கு இப்போது உடனடியாக என்னென்ன தேவை என்பதை தமிழர் புனர்வாழ்வுக் கழக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 15,130 குடும்பங்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்களைக் கட்டுவதற்கான பொருட்கள், சுமார் ஐந்தாயிரம் தற்காலிகக் கழிவறைகளைக் கட்டுவதற்கான பொருட்கள், மூவாயிரம் குழந்தைகளுக்கான உடைகள், சுமார் மூவாயிரம் கர்ப்பிணிகளுக்கான மருந்துகள், இருபதாயிரம் குடும்பங்களுக்குத் தேவையான உணவு அல்லாத பொருட்கள், கொசுவலைகள், தண்ணீரை சுத்தம் செய்யும் மாத்திரைகள் மற்றும் வாட்டர் ஃபில்டர்கள் போன்றவை அவசரமாகத் தேவைப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றை அவர்களுக்கு எந்த அரசு வழங்கப்போகிறது என்று தெரியவில்லை! தமிழக அரசு ஒருவேளை அடுத்த தவணையில் இவற்றை நிவாரணப் பொருட்களாக அனுப்பினால், தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

கிளிநொச்சியை குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்தின் கவனத்தைத் திசைதிருப்ப, வேறு யுத்த முனைகளை புலிகள் திறக்கக்கூடும் என்ற சந்தேகம் பரவலாக இருக்கவே செய்கிறது. குறிப்பாக, சிங்களர்கள் வாழும் பகுதிகளில் புலிகள் தாக்குதல் நடத்தி, அரசின் கவனத்தைத் திருப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், கொழும்பு மற்றும் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல் இந்த அச்சத்தை அதிகரித்திருக்கிறது. அதுபோலவே கிழக்குப் பகுதியிலும் அவர்கள் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ராணுவ இலக்குகளைத் தவிர பொதுமக்களைத் தாக்குவதில்லை என்ற புலிகளின் சுயக்கட்டுப்பாடு ஒரு விதத்தில் சிங்கள அரசுக்கு சங்கடத்தையே கொடுத்து வருகிறது. புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்திரித்துத் தன்னுடைய போரை நியாயப்படுத்தி வருகிற சிங்கள அரசு, புலிகளின் இந்த யுக்தியால் தடுமாறிப்போய் உள்ளது. எப்படியாவது அவர்களைக் கோபப்படுத்தி, சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்த வைப்பது அல்லது தானே ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அந்தப் பழியைப் புலிகள் மீது போடுவது என்று அது திட்டமிடுவதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அண்மையில்கூட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருக்கும் பிள்ளையானின் உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதைப் புலிகள்தான் செய்தார்கள் என்று சிங்கள அரசு பொய்ப்பிரசாரம் செய்தது. ஆனால், அது அவர்களின் கோஷ்டி மோதலால் நடந்ததுதான் என்ற உண்மை இப்போது அம்பலமாகி இருக்கிறது!

''அடுத்த ஆண்டு மாவீரர் தின உரையை பிரபாகரன் ஆற்றமுடியாமல் செய்வோம்...'' என ராஜபக்ஷேவின் ராணுவத் தளபதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சவால் விட்டிருந்தார். அதை நிறைவேற்றும் விதமாக எப்பாடுபட்டாவது அதற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவது என்ற வெறியோடு சிங்கள ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஒருபுறம் நவம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ள மாவீரர் நாளுக்கான தயாரிப்புகளைப் புலிகள் செய்து கொண்டிருக்க, இன்னொரு புறமோ சிங்கள ராணுவம் முழுமூச்சான தாக்குதலில் இறங்கியிருக்கிறது. கிளிநொச்சியை கைப்பற்றியதும் ராணுவத்தின் வெற்றியைக் கொண்டாடும் வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளைக்கூட இலங்கை அரசு தயாரித்து வைத்திருக்கிறது. தேசிய சுதந்திர முன்னணியின் சார்பாக அவை அச்சிடப்பட்டுள்ளன.

'ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். போர்நிறுத்தம் செய்யப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்' என்று தமிழ்நாட்டில் கொடுக்கப்படுகிற அழுத்தம் காரணமாக, இந்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சத்தில் சிங்கள அரசாங்கம் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது என சிங்கள ஏடுகள் எழுதி வருகின்றன.

இந்தியத் தலையீடு நடப்பதற்கு முன்பே கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். கிழக்குப் பகுதியில் செய்ததுபோல அங்கும் ஒரு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்திவிட்டு, சீக்கிரமே பொதுத்தேர்தலை சந்திக்கலாம் என்று ராஜபக்ஷே திட்டமிடுவதாக, பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இலங்கையின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதும் அதையொட்டி பேருந்து கட்டணங்களைக்கூட குறைத்து அறிவித்திருப்பதும் இதற்கான அடையாளங்கள் என்று அவை சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், கிளிநொச்சியைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதே பெரும்பாலானோரின் கருத்து. இப்போதும்கூட புலிகளின் படையில் சுமார் பன்னிரண்டாயிரம் பேர் இருப்பதாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார்.

ஆக, தன்னுடைய தேர்தல் வெற்றிக்காகவே போரில் வெற்றியடைய ராஜபக்ஷே விரும்புகிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரியவந்துள்ளது. தமிழர்களைக் கொன்று குவிப்பதன் மூலம்தான் சிங்களவர்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்று அவர் முடிவு செய்திருக்கிறார். ஆனால், இந்திய அரசோ இதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறது.

இந்த இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டு மென்ற தமிழக மக்களின் கோரிக்கையை இந்திய அரசு இதுவரை காதில் போட்டுக்கொள்ளவில்லை! முதல்வர் கலைஞர் இதுகுறித்து, தமிழக சட்டப்பேரவையில் முன்மொழிந்த தீர்மானம் தெளிவாகவே தமிழ்நாட்டு மக்களின் உணர்வைச் சொன்னது. 'புலிகளை ஒழித்துக்கட்டுகிறேன் என்ற பெயரில் தமிழ் மக்களைத்தான் ராஜபக்ஷே வேட்டையாடிக் கொண்டிருக்கிறார். எனவே, அவருடைய வார்த்தைகளை மத்திய அரசு நம்பக்கூடாது!' என முதல்வர் வலியுறுத்தி இருந்தார்.

புலிகளின் மீது போடப்படும் குண்டு, தமிழர்களின் மீது போடப்படுகிற குண்டுதான் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் மீண்டும் அவர் வலியுறுத்தியும் மத்திய அரசு மெத்தனம் காட்டுவது, தமிழ் மக்களை அவமானப்படுத்து வதாகவே இருக்கிறது.

இவர்களும்கூட இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்கத்தான் போகிறார்கள். ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு ஆதரவாக இருந்தால், தமிழக மக்கள் தேர்தலில் என்ன பரிசைத் தருவார்கள் என்பது மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்குப் புரியவில்லையா?

அல்லது

பி.ஜே.பி-யை ஆட்சியில் அமர்த்து வதற்காக திட்டமிட்டுச் செயல்படும் சில அதிகாரிகளின் சதிக்கு அவர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நன்றி: ஜீனியர் விகடன்

Comments