கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனை முன்நகர்வுகளில் 2 முனை முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்


கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஊடாக மூன்று முனைகளிலும் குஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு செறிவான அட்லெறி, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக பீரங்கிகளின் கடும் சூட்டாதரவுடகளுடன் முன்நகர்வுத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 57, 58 ஆம் டிவிசன்களின் படையினர் மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வு தாக்குதல்களுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர்.

கிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது.

கிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் முறியடிக்கப்பட்டு விட்டது.

மேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமான காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் களமுனையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.



Comments