கிளஸ்டர் குண்டு பாவனைக்கு எதிரான நோர்வே கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு அணி திரள்வோம்


கிளஸ்டர் (Cluster) குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 100-க்கும் அதிகமான உலக நாடுகள் கைச்சாத்திடவுள்ள மாநாடு நாளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கடந்த சனிக்கிழமை இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு சிறுவா்கள் உள்ளிட்ட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக கிளஸ்டர் குண்டு உள்ளது எனும் பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன.


அந்த வகையில், உலக நாடுகளின் இந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு ஆதரவாகவும்
அதேவேளை, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இந்த வகை பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றமையை உலகின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாகவும்

சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறு உலக நாடுகளைக் கோரியும்

கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நாளை புதன்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நோர்வே நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்ள வருமாறு அனைத்து தமிழர்களையும் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் கேட்டுள்ளது.

Comments