சிறிலங்கா அரசின் மன்னிப்பினை ஏற்றுக் கொள்ள மாட்டோம்; மகிந்த- சரத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: வைகோ



சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அந்நாட்டின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்; இல்லை எனில் இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரை வெளியேற்ற வேண்டும்; இல்லை எனில் எமது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அருகே உள்ள காட்டேக் ஆர்ட் எம்போரியம் எதிரே இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையேற்று உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:




கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.12.08) வெளிவந்த சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ ஏடான 'சண்டே ஒப்சேர்வர்' ஆங்கில நாளேட்டுக்கு சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா அளித்த நேர்காணலில், தமிழக அரசியல் தலைவர்கள் அரசியல் கோமாளிகள் என விமர்சித்திருக்கின்றார்.

இது குறித்து இணையத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்டு கொதித்துள்ளனர். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் போன்ற தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து நேற்று இந்திய அரசிடம் சிறிலங்கா அரசு இது குறித்து மன்னிப்பு கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இது ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

இச்செய்தி குறித்து அந்நாளேடு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அப்படி எனில் சரத் பொன்சேகா பேசியது உண்மை என்பது தெரியவருகிறது. இது குறித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா இருவரும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை எனில் இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இதுவரை பாகிஸ்தான் மீது இந்தியா நான்கு தடவை போர் தொடுத்துள்ளது. அதேபோன்று, 1962 இல் சீனா மீது இந்தியா போர் தொடுத்தது. அந்நாட்டுப் போர் படைத் தளபதிகள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சித்ததே கிடையாது. ஆனால் சிறிலங்கா தரைப்படைத் தளபதி விமர்சித்திருப்பது இந்தியாவின் பலவீனத்தையே காட்டுகின்றது.

மேலும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அண்மையில் இந்தியா வந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மதிக்காமல் ஊடகவியலாளர்களிடம் போரை நிறுத்த முடியாது என்று பகிரங்கமாக பேசியுள்ளார்.இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சரத் பொன்சேகா நா தடித்த அளவில் தமிழகத் தலைவா்களைப் பேசியது குறித்து தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழு கோடி மக்கள் பெரும் கொந்தளிப்பை அடைந்துள்ளனர். எனவே இந்திய அரசு இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வைகோ.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா பேசியிருப்பது தமிழகத்தில் உள்ள தலைவர்களையும், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள தலைவர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். இதனை இந்திய அரசு மகிந்த ராஜபக்சவிடம் கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இந்தியாவில் ஈழப் படுகொலை குறித்து பரப்புரையில் ஈடுபடுவதால் அவரை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அவர் இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்குச் சென்ற அடுத்த நிமிடமே அவர் உயிர் பறிக்கப்படும் என்பதால் அவர், தாய் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவர் சிறிலங்காவுக்குச் சென்றவுடன் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்தான் பொறுப்பேற்ற வேண்டும் என்றார் நெடுமாறன்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, பொருளாளர் மாசிலா மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments