மகிந்தவின் மனிதாபிமானப் போரும் கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்களும்

கிளஸ்டர் குண்டுகளை பாவிப்பதைத் தடை செய்யும் சர்வதேச உடன்பாடு ஒஸ்லோவில் கைச்சாத்திடப் படுவதற்கு 5 நாட்கள் முன்னதாக வன்னியில் இலங்கை விமானப்படை நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டு 21 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

அதிகாலை 1.30 மணியளவில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் ரஷ்யத் தயாரிப்பான OFAB-500 ரகத்தைச் சேர்ந்த கிளஸ்டர் குண்டுகளை விமானப்படை பயன்படுத்தியிருந்தது.

மிக் -27 விமானங்களின் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தருமபுரத்துக்கு அண்மையில் உள்ள உழவனூரில் அமைந்திருந்த இடம்பெயர்ந்தோர் குடியிருப்புகள் நாசமாகின.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்த அனைவருமே இடம்பெயர்ந்தோராவர். தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவர் 5 வயதுச் சிறுமி. காயமுற்றோரில் 10 வயதுக்குட்பட்ட 7 சிறார்களும் 10 பெண்களும் அடங்கியிருந்தனர்.

உலகில் கிளஸ்டர் குண்டுகளைத் தயாரிப்பதையும், விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தடை செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப் படுவதற்கு சில நாட்கள் முன்னதாக இலங்கை அரசு இத்தகைய குண்டுகளின் மூலம் அப்பாவி மக்களைத் தாக்கியிருக்கிறது.

இலங்கை அரசின் இந்தச் செயலை சர்வதேசம் கண்டிக்கவோ பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து கவலைப்படவோ இல்லை.

சிறார் படைச் சேர்ப்புத் தொடர்பாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற யுனிசெப் போன்ற சர்வதேச தொண்டர் நிறுவனங்களோ – ஐ.நாவோ சிறார்கள் கிளஸ்டர் குண்டுகள் மூலம் கொல்லப்பட்டபோதோ, படுகாயமுற்றபோதோ வாய்திறந்து கண்டிக்கவோ கவலைப்படவோ இல்லை.

வன்னியில் வாழும் மக்களை புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு அப்பாவி மக்களின் மீது தாக்குதல்கள் நடத்தபடுகின்றன.

இந்தச் சம்பவம் நடந்த ஒரு சில தினங்களில் வட்;டக்கச்சியில் பள்ளிக்குச் சென்று திரும்பிய 7 வயதுச் சிறுமி நடுவீதியில் படையினரின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மனிதாபிமானப் போரின் கொடூரம் உலகின் கண்களில் இருந்து மறைந்து போயிருக்கறது.

ஆனால், வன்னியில் அப்பாவி மக்களின் மீதான ஆயுத வெறியாட்டம் தொடர்ந்து அரசங்கேறிக் கொண்டே செல்கிறது.

இந்தியாவோ வன்னியில் உள்ள மக்களுக்கு உணவு கொடுத்தால் போதும் என்பது போல கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி அனுப்பிவிட்டு மகிந்த அரசை தட்டிக் கொடுத்திருக்கிறது.

வெளியுலக நாடுகளோ இலங்கை அரசின் இனப்படுகொலைகளைக் கண்டும் காணாதது போன்று பாசாங்கு செய்கின்றன.

இந்த நிலையை சாகதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசு தமிழின அழிப்பை மிகவும் வேகமாக அரங்கேற்றி வருகிறது.

உலகில் 120 நாடுகள் கிளஸ்டர் குண்டுகளை உற்பத்தி செய்வது, பயன்படுத்துவது, ஏற்றுமதி செய்வதை தடைசெய்கின்ற உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கின்ற நிலையில் இலங்கை அரசோ அந்த 120 நாடுகளின் கருத்துக்களை - நிலைப்பாட்டை நிராகரிக்கின்ற வகையில் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

பொதுவாக இந்த வகைக் குண்டுகளை ரஷ்யா உற்பத்தி செய்ததன் நோக்கமே கண்ணிவெடி வயல்களை அழிப்பதற்குத் தான்.
நெருக்கமாக விதைக்கப் பட்டிருக்கின்ற கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்வதற்கு உருவாக்கப்பட்ட இந்த கிளஸ்டர் குண்டுகள் இப்போது இலங்கை விமானப்படையால் தமிழ் மக்களின் உயிர்களை அழிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

இந்தக் குண்டுவீச்சு தொடர்பாக ஆதாரங்களுடன் கூடிய தகவல்கள் வெளியான போதும் - இலங்கை அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை.

கிளஸ்டர் குண்டுகளைக் கொண்டு மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை அதன் அடிப்படை நோக்கில் - அதாவது இனஅழிப்பு என்ற விடயத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால் வரும் நாட்களில் இலங்கை அரசாங்கம் தான் கிளஸ்டர் குண்டுகளை தமது விமானப்படை பாவிக்கவில்லை என்று மறுத்தாலும் ஆச்சரியம் கிடையாது.

ஏற்கனவே உலகளவில் தடைசெய்யப்பட்ட நேபாம் குண்டுகளை இலங்கை விமானப்படை தமிழர்; வாழும் பிரதேசங்களில் வீசியிருந்தது.

இப்போது அது கிளஸ்டர் குண்டு என்ற அபாயகரமான குண்டுகளை வீசத் தொடங்கியிருக்கிறது.

உலகில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழ் மக்களின் சுதந்திர எழுச்சியை அடக்கி விடவேண்டும், தமிழினத்தை அழித்து விடவேண்டும் என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக்கிறது.

ஆனால், வெளியுலகுக்கு புலிகளின் பிடியில் இருந்து வன்னியில் வாழும் மக்களை விடுவிக்கின்ற மனிதாபிமான இராணுவ நடவலடிக்கையே மேற்கொள்ளப்படுவதாக மகிந்த ராஜபக்ஸ பிரசாரம் செய்து வருகிறார்.

மகிந்தவின் இந்தப் பிரசாரப் போருக்கு வெளியுலகம் பலியாகி விட்டதென்றே சொல்லலாம்.

இல்லையென்றால் இலங்கை அரசின் மீதான மோசமான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் மத்தியிலும் இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்ரி பிளஸ் வரிச்சலுகை கிடைத்திருக்காது.

தமிழ் மக்களின் மீதான இந்தப் போரை புனிதப் போராகக் காட்டுவதற்கு மகிந்த அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகள் நீண்டகாலத்துக்கு நிலைக்க முடியாது.
அண்மையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒட்டசுட்டானில் நடந்த மோதல் ஒன்றில் தமது ஆழ ஊடுருவும் அணியின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் லலித் ஜெயசிங்க என்ற இராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இவர் கொல்லப்பட்டதாக அரச தரப்பு உறுதி செய்திருக்கிறது.

முன்னர் ஆழ ஊடுருவும் படையணி என்ற ஒன்றே இல்லை என்று நிராகரித்தது இலங்கை அரசு.

பாலம்பிட்டியில் பொதுமக்களும், ஐயங்கன்குளத்தில் பாடசாலை மாணவர்களும், மாங்குளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் மற்றும் கருணாரத்தினம் அடிகளாரும் கிளைமோர் தாக்குதல்களில் கொல்லப்பட்டபோது ஆழ ஊடுருவும் அணியே செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு தாக்குதல் நடந்த பகுதிகள் இராணுவ முன்னரங்க நிலையில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது. அங்கு சென்று தாக்குதல் நடத்த படையினரால் முடியாது என்று நிராகரித்த படைத்தரப்பு தான் இன்று 30 கி.மீ ஊடுருவித் தாக்கியதை ஒப்புக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று ஒரு நாள் இலங்கை அரசே தாம் தமிழ் மக்கள் மீது கிளஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொள்கின்ற நிலை வரலாம்.
வன்னிக்குள் கிளைமோர்கள், கிளஸ்டர் குண்டுகள் மூலம் பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதை சர்வதேசம் கண்டும் காணாமல் இருக்கின்ற போக்கு நீடிக்கின்ற வரையில் இலங்கை அரசின் இத்தகைய தாக்குதல்கள் நீளவோ போகின்றன.

போர்முனையில் பயன்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை குறைந்த பட்சம் பொதுமக்களின் வாழ்விடங்களின் மீது வீசுவததையாவது தடுக்க சர்வதேசம் முன்வரவேண்டும். அதற்கு கிளஸ்டர் பாவனை ஒழிப்பு உடன்பாட்டில் கைச்சாத்திட்ட நாடுகளின் அழுத்தங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இன்போ தமிழுக்காக மாதுமை


Comments