போரில் நாம் வெற்றிகளைக் குவித்தால்- உதவிகள் தருவதற்கு வெளிநாடுகள் தேடி வரும் நிலை வரும்: கேணல் பானு

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் பலத்தில் போராடுகின்றோம். எமது பலத்தை நாம் நிரூபிக்கின்ற போது என்ன உதவி வேண்டும் என்று வெளிநாடுகள் எம்மிடம் கேட்கும் நிலை வரும் என்று தளபதி கேணல் பானு தெரிவித்துள்ளார்.

மன்னார் களமுனைகளில் மிகச் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வாழ்த்தை உள்ளடக்கியதான சமர் ஆய்வுப் பிரிவின் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே கேணல் பானு இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்ததாவது:

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும்.

நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு வலிந்த தாக்குதல் போரில் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

2009 ஆம் ஆண்டை தனது "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அவரது படையினருக்கான ஆண்டை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.


[படம்: புதினம்]

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். மிக மோசமான அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இறுதி வெற்றி யாருக்கு என்பதை நாம் பார்க்கலாம்.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் எமது மக்களின் பலத்தில் நிற்கின்றோம். நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை வரும்.

நாம் எமது மக்களுக்கு எதிரி தரும் அவலங்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது. உறுதியாக நாம் வெல்லுவோம் எனவும் கேணல் பானு தெரிவித்துள்ளார்.



Comments