சிறிலங்காவின் கொடூர இனப்படுகொலையின் சில சாட்சிகள்


கடந்த 29ம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது அதிகாலை 1.45 மணியளவில், மக்கள் தூக்கத்தில் இருக்கும் போது சிறிலங்கா வான்படை நடத்திய கொடூரத் தாக்குதலின் சில சாட்சிப் பதிவுகள் இவை.

சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட கொத்தணி (கிளஸ்ரர்) குண்டுகள் மூலம் சிறிலங்கா வான் படையினர் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலில் சிறுவன் ஒருவன் மூளை சிதறிப் பலியானதுடன் மேலும் வயோதிபர் ஒருவர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஒரே குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். படுகாயமடைந்தவர்களில் பத்து வயதுக்கு உட்பட்ட ஏழு சிறார்களும், ஏழு பெண்களும் அடங்குவர். படுகாயமடைந்த அனைவரும் தருமபுரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதர்சன் சிவகுமார் (5), முதியவரான இராமன் இராமசாமி (81) ஆகியோர் மருத்துவமனையில் உயிரிழந்துள்னர். இன்னொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அவரது விபரம் கிடைக்கப்பெறவில்லை.






தாக்குதலுக்கு உள்ளாகிய இந்த இடம்பெயர்ந்தோர் முகாம், அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் "பதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் அமைந்திருக்கின்றது என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும். போரிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவதற்காக, இந்தப் பிரதேசத்தில் போய் தங்கியிருக்குமாறு அண்மையில் வன்னி வாழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் ந.செல்வராஜா (36)

மு.இராஜேந்திரம் (55)

தவச்செல்வி (16)

க.அமராவதி (40)

அ.சித்திரா (09)

இ.யசிந்தன் (10)

அ.மாலாதேவி (38)

ந.புஸ்பவல்லி (28)

ந.யசிந்தன் (10)

மு.ருக்குமணிதேவி (35)

சபவித்திரன் (05)

எஸ்.சங்கரப்பிள்ளை (55)

அ.வேலவன் (18)

இ.இராஜகுமாரி (28)

பழனியம்மா (60)

எம்.இராஜேந்திரன் (38)

அ.தேவர் (50)

செல்வம் (15)

ஈ.லோஜினி (07)

மதியழகன் (6)

ஜெயராணி ஆகியோர் காயமடைந்தவர்களில் அடங்கியுள்ளனர்.

கொத்தணி (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500, 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் அண்மையில் இஸ்ரேல், லெபனான் மீதான தாக்குதலின் போது பாவித்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை இந்த இணையவலையில் சென்று கேட்கலாம். http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27633


Comments