எதிரியும்கூட நம்மிடமுள்ள ஓட்டையைக் காட்டி நகையாடுவான் - ஆய்வரன்

சில நேரங்களில் எதிரியும்கூட நம்மிடமுள்ள ஓட்டையைக் காட்டி நகையாடுவது உண்டு. ‘தமிழ்நாட்டுத் தலைவர்கள் கோமாளிகள்’ என்ற சரத் பொன்சேக்காவின் கூற்று அது போன்றதேயாகும். ஈழத்தமிழர்மீது தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு உள்ள உள்ளார்ந்த தூய இனப்பாசத்தின் கொந்தளிப்பை அடக்கி மடைதிருப்ப தமிழ்நாட்டுத் தலைவர்கள் போடும் பொய்க்கால் ஆட்டங்கள் யாவும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு விளங்கின்றன.

கருணாநிதி ஒரு தெலுங்கு வடுகர். தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு தமிழரின் தலைமீது குந்திக்கொண்டுள்ள இவரை ‘உலகத் தமிழினத்தின் தலைவன் நீர்தான்’ என்று அவருடைய பரிவாரங்கள் உசுப்பேற்றிவிட்டமையால், தலைகால் தெரியாமல் வாய்ச்சிலம்பம் ஆடி வரும் வந்தேறி அவர். அதனால், இந்தச் சுரண்டல் பேர்வழியால் ஈழத்தமிழரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று மன உலைச்சல் கொள்வதில் பயனில்லை. வெற்றிலைக்கார நாயக்கன் என்ற தெலுங்குச் சாதியைச் சேர்ந்த தங்கபாலுவுக்கோ, கன்னட-தெலுங்கனான ஈ. வி. கே. எசு. இளங்கோவனுக்கோ, தெலுங்கனான சுதர்சனத்திற்கோ, காட்டுநாயக்கன் என்னும் தெலுங்குச் சாதியைச் சேர்ந்த துரைமுருகனுக்கோ ஈழத்தமிழர் படும் இன்னல்களைப்பற்றிக் கவலை இல்லை எனப் புலம்புவதாலும் பயனில்லை. ஏனெனில், தமிழர்களிடம் போலி அரசியல் நடத்திவரும் வந்தேறிகள் அவர்கள். ஆனால், தமிழனாகப் பிறந்த மருத்துவர் இராமதாசு போன்றோரின் புரட்டல்கள்தானே நம்மை நிலைகுலைய வைக்கின்றன? ஈழத்தமிழர்களுக்காக அவர் என்றோ அறிக்கைகளை விட்டாராம்! ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாராம்! இதையே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்! ஆனால், இன்று அவருடைய நிலைப்பாடு என்ன?

முப்பத்தைந்து ஆண்டுக்காலம் பொதுவுடைமை இயக்கதின்பால் இருந்தவன் நான். தேசிய இனங்களின் தனிநாட்டுரிமை (the Right of Nations to Self-Determination) என்னும் ஈடு இணையில்லாக் கோட்பாட்டை மறந்து தன் பிராமணச் சார்பு போக்கால் தமிழர் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் தொடர்ந்து வஞ்சகம் செய்து வந்த இயக்கமே தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கம். ‘ஒட்டுக்காக உலகப் புரட்சி’ என்னும் உருப்படா டிராட்சுக்கிய ஓலத்தில் மறுபிறப்பான ‘ஓரிந்தியப் புரட்சி’ என்ற ‘இந்துவிய’ மாயமானைக் காட்டித் தமிழர் இனம் ஒரு தனித் தேசிய இனம் என்னும் மெய்ம்மையையும் அதற்குத் தனிநாட்டுரிமை (the Right of Self Determination) உண்டு என்பதையும் முரட்டுத்தனமாக ஏற்க மறுத்த காரணத்தால், அந்த இயக்கத்தைவிட்டு வெளியே வந்தவன் நான்.

இந் நிலையில், வலங்கை பொதுவுடைமைக் கட்சி (CPI) ஈழத்தமிழரின்மீது சிங்களம் நடத்தும் இனவொழிப்புப் (Ethnic Cleansing) போரையும் இனப்படுகொலையையும் எதிர்த்துத் தோள்தட்டி எழுந்த நிகழ்வு ஒரு திரும்புமுனையானது. அந்தப் பொதுவுடைமைக் கட்சி உசுப்பிவிட்டதால்தான், நீறுபூத்த நெருப்பாய்த் தமிழ்நாட்டுத் தமிழரிடம் புதைந்து கிடந்த ஈழத்தமிழர் மீதான இனப்பாசம் பீறிட்டெழுந்தது.

இந்த எழுச்சியை ‘இராசீவின் சாவு’ என்ற பூச்சாண்டியைக் காட்டித் தில்லி வல்லரசு இனியும் அடக்கியொடுக்கிட முடியாது என்ற புதிய சூழலில்தான், வாக்குப்பொறுக்கி அரசியலில் காய் நகர்த்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வேண்டாத புதிய தெருக்கூத்துக்களை அரங்கேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.

ஈழத்தமிழர் இனத்தின்மீது சிங்களம் நடாத்துகின்ற போர், ‘இந்தி’யனின் உசுப்பேற்றலுடனும் உந்தலுடனும் படை உதவிகளுடனும் நடைபெற்று வருகின்ற போர் என்பது அந்தப் போலித் தலைவர்களுக்குத் தெரியாமலிருக்க காரணமில்லை. இவர்களிடம் அறிவு நாணயமும் தமிழ்த் தேசிய ஓர்மையும் இருக்குமேயாயின்,

1) தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கு!;
2) தமிழீழத் தமிழருக்குத் தனிநாட்டுரிமை (the Right of Self Determination) என்னும் பிறப்புரிமை உண்டு;
3) தமிழீழத்திற்கு ஒப்புதல் வழங்கு!

என்ற உயிர்நாடியான கோரிக்கைகளை அல்லவா அவர்கள் வைத்திருப்பர்?

அதை விடுத்து, ஈழத்தமிழர் மீதான இனவொழிப்புப் போரைப் பின்னாலிருந்து இயக்கி வருகின்ற இந்தி(ய) வல்லரசு ‘உலகநாடுகள் அவைமுன் போய், சிங்களன் ஈழத்தில் நடத்திவரும் போரை நிறுத்தச் சொல்ல வேண்டும்’ என்று பொய் வழக்காடி இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும் கோமாளித்தனங்களை அவர்கள் செய்வானேன்? மாற்றான் இதைச் சொல்லிக்காட்டி நகையாடுவதற்கு இவர்களின் கயமைகள்தானே உண்மையான காரணம்?


Comments