ஜனவரி 22 கண்டம்! காப்பாற்றுமா 23-- விகடன்

திருமாவளவன் உண்ணாவிரதம்... ஈழ ஆதரவாளர் களின் நெஞ்சு வெடிக்கும் குரல்கள்... அப்பாவி ஈழத் தமிழ் மக்களின் கதறல்...

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் புலிகளைப் பூண் டோடு அழிக்கப் போர் நடவடிக்கைகளில் புயல் வேகம் காட்டுகிறது சிங்கள ராணுவம். புலிகளின் நிலைப்பாடு குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் வெளியே கசியாத நிலையில்,

'இதுதான் அவர்களின் இறுதிக் கட்டமோ?' என்கிற பதைபதைப்பு இங் கிருக்கும் ஈழ ஆதரவாளர்களைக் கொதிக்க வைக் கிறது. பதைப்பைப் பன்மடங்காக்கும் விதமாக சிங்கள ராணுவமும்,

'எங்களின் போரை இனியும் பிரபாகரனால் தாக்குப்பிடிக்க முடியாது. கடல் வழியே இந்தோனேஷியாவுக்குத் தப்பிச்செல்ல அவர் முடிவெடுத்திருக்கிறார். அதனால், கடலோரக் காவலையும் தீவிரமாக்கி இருக்கிறோம். எங்களின் பிடி இறுக இறுக... பிரபாகரனின் கழுத்தில் தொங்கும் சயனைடுக்கு விரைவிலேயே வேலை வரும்!' என நக்கலாக உறுமுகிறது.

இதற்கிடையில் உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவுத் தமிழர்களோ, வருகிற


22-ம் தேதி ஊனமுற்றோர் மற்றும் அநாதைகளுக்கு அன்னதானம் வழங்க முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாது கனடா, லண்டன், அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகளில் எந்தவித முன்னறிவுப்பும் இன்றி இந்த அன்னதானத்துக்கு ஏற்பாடாகியிருக்கிறது.

இதன் பின்னணி குறித்து, தமிழகத்தில் அன்னதானம் நடத்தும் ஈழ ஆதரவாளர்களிடம் பேசினோம். ''புலிகளுக்கு இது இக்கட்டான நேரம்தான். ஆனால், இது நிரந்தரமானதல்ல. புலிகளிடம் ஆயுதங்கள் குறைந்துவிட்டதாக சிங்கள ராணுவமும் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிச் சென்று, தற்போது சிங்கள ராணுவத்துக்கு ஆலோசகராக இருக்கும் கருணாவும் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள்.

ஆனால், உலக நாடுகளையே மிரள வைக்கும்படி சில தினங்களுக்கு முன் புலிகள் டாங்கி படைகள் மூலம் சிங்கள ராணுவத்துக்கு பதிலடி கொடுத்தார்கள். இதற்கிடையே, அப்பாவித் தமிழர்கள் மீது ஏவுகணைகளையும் குண்டுவீச்சையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். அதோடு,

புலிகளிடம் இருக்கும் விமானங்களைப் பயன் படுத்த முடியாதபடி நெருக்கடிகளை உண்டாக்க ஆறு விமான ஓடுதளங் களை ராணுவம்கைப்பற்றி, அழித்துவிட்டதாக கொக் கரிப்புச் செய்தி வெளியாகிறது. உண்மையில் தங்கள் விமானங்களைப் புலிகள் எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று ரேடார் மூலம் பதைபதைப்போடு தேடிக் கொண்டிருக்கிறது இலங்கை ராணுவ உளவுப் பிரிவு.

ஆனால், விமானப்படைப் பிரிவுக்குப் பொறுப்பாளராக இருக்கும் பிரபாகரனின் மகன் சார்லஸ், ஒரு விமானத்தை குறைந்த அவகாசத்தில் பார்ட் பார்ட்டாகக் கழற்றிவிடும் சக்தி படைத்தவர். புலிகளிடம் விமானங்களின் பாகங்கள்தான் இப்போது இருக்கின்றன. தேவைப்பட்டால், அதிவிரைவாக அவற்றைப் பொருத்தி, அரை கிலோமீட்டர் தூரமே கொண்ட விமான ஓடுதளத்தை உருவாக்கி... விண்ணில் ஏறி மிகப்பெரிய அட்டாக்கை நடத்தும் சக்தி புலிகளுக்கு இருக்கிறது. இதெல்லாம் சிங்கள ராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான் ஒரு புறம் போர்... மறுபுறம் பிரபாகரனுக்கு மட்டும் பிரத்தியேகக் குறி என வியூகங்களை வகுக்கிறார்கள்.

கருணா மூலமாக பிரபாகரனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்திருக்கும் சிங்களப் பிரமுகர்கள், வரும் 22-ம் தேதியை பிரபாகரனின் பலம் குறைந்த நாளாகக் கணித்திருக்கிறார்கள். முருக பக்தரான பிரபாகரனுக்கு அன்று மிகப் பெரிய கண்டம் இருப்பதாக பிரபாகரனை நேசிப்ப வர்களும் நம்புகிறார்கள். குறை உடல்காரர்களின் மனங்களைக் குளிரவைப்பதன் மூலம் அந்தக் கண்டத் தின் பாதிப்பை கண்டிப்பாகத் தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இப்படியரு செய்தி வெளியே கசிந்த பிறகுதான் உலகளாவிய ஈழ ஆதரவாளர்கள் அன்னதானம் செய்வதென முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், இது வரை புலி களின் தரப்பிலிருந்து பிரபாகரனுக்கு கண்டம் என்கிற செய்தியை யாரும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தும், 'ஈழ விடிவுக்காக அன்னதானம் நடத்துங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். எங்களின் அன்னதானமும் பிரார்த்தனையும் கண்டிப்பாக பிரபாகரனை காப்பாற் றும்!'' என்று தழுதழுத்தனர்.

பிரபாகரனின் மனவோட்டம் அறிந்தவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். ''22-ம் தேதி ஜாதக ரீதியாகத் தம்பிக்கு சறுக்கலான நிலை என்றும் அதைக் கடந்துவிட்டால், தம்பிக்கு ராஜயோகம்தான் என்றும் ஒரு நம்பிக்கை பரவிக்கிடப்பது உண்மைதான். சமீபத்தில் ஒரு புத்தகத்துக்கான அணிந்துரையில் மூட நம்பிக்கைகளைக் கண்டித்து தம்பி காரசாரமாக எழுதி யிருந்தார். ஆனால், முருகனை மட்டும் கடவுளாகப் பார்க்காமல் தமிழ் மூதாதையாகப் பார்ப்பதுதான் அவரு டைய வழக்கம். இன்றைக்கும் நல்லூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார். 84-ம் வருடம் மதிவதனியை அவர் மணம் முடித்ததுகூட திருப் போரூரில் இருக்கும் முருகன் கோயிலில்தான்.

ஜனவரி 22-ம் தேதி தம்பிக்கு இக்கட்டு ஏதும் நேரக்கூடாது என்பதற்காக கொழும்பிலும் அன்னதானமும் பிரார்த்தனையும் நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அப்படி யாரேனும் செய்தால் அவர்களைக் கொலை செய்ய சிங்களர்கள் தயங்க மாட்டார்கள் என்பதறிந்து, புலிகளே இதற்குத் தடை போட்டுவிட்டார்கள். இன்னொரு பக்கம், புலிகளை ஒடுக்குவதற்காகவே தமிழகத்தில் உள்ள கோயில்களில்கூட சிங்களப் பிரதிநிதிகள் வந்து யாகமும் வழிபாடும் நடத்தினார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இவர்கள், தம்பியின் ஜாதகத்தை அலசிப் பார்த்துவிட்டு 22-ம் தேதி தாக்குதலைக் கடுமைப்படுத்தக் கூடும். ஆனாலும், உலகத்தின் பிரார்த்தனை, தம்பியின் ஆயுளை வலுவாக்கும்'' என்று சொல்லித் திகைக்க வைத்தார்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி-க்கள் சிலரிடமும் இது குறித்துக் கேட்டோம். ''22-ம் தேதி வரை தம்பி நேரடியான களப்போரில் ஈடுபட மாட்டார் என்று புலிகளின் தளபதிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இதையட்டித்தான் ஜாதக ரீதியான கருத்துகளும் கிளம்பியிருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் 22-ம் தேதி முடிந்து, 23-ம் தேதி பிறப்பதை புலிகள் அரசியல் ரீதியாக ஆவலோடு எதிர்பார்ப்பதை மறுக்க முடியாது. இருபதாம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஒபாமா, தன்னுடைய வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலாரி கிளின்டனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஹிலாரி பொதுவாகவே புலிகள் மீது மதிப்புக் கொண்டிருப்பவர். இந்நிலையில், பதவியேற்ற அடுத்த இரண்டு நாட்களில் ஈழ விவகாரம் குறித்துத் தக்க முடிவெடுப்பதாக ஒபாமா சொல்லியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 'புலிகள் தீவிரவாதிகள் அல்ல' என்று வெளிப்படையாகவே அறிவித்த ஹிலாரி கிளின்டனையும் புலிகள் தரப்பினர் ஏற்கெனவே சந்தித்திருக்கிறார்கள். அவர் மூலம் கிடைத்த சில தகவல்கள்தான் ஜனவரி 23-ம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்க வைத்திருக்கிறது...'' என்று கூறும் இந்த எம்.பி-க்கள்,

''சில தினங்களுக்கு முன் சிங்கள ராணுவத்தின் தாக்குதல் பெரிதானபோது ஐ.நா. உடனடியாகக் கவலை தெரிவித்தது. 'ஈழப் போராட்டம் சுதந்திரத்துக்கானது. அதைத் தீவிர வாதம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது!' என்று சொல்லி ஐ.நா-வைக் கவலை தெரிவிக்க வைத்ததன் பின்னணியில் ஒபாமாவின் செயல்பாடுகள் உண்டு என்பது புலிகளின் திடமான நம்பிக்கை. 'அமெரிக்காவின் எத்தகைய உடன்பாட்டுக்கும் உட்படத் தயார். ஆனால், தனி ஈழக் கோரிக்கையை மட்டும் தவிர்க்க முடியாது!' என்று புலிகள் தரப்பில் ஒபாமாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. உலக அமைதியைப் பெரிதும் விரும்பும் ஒபாமா, பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்தார். அவர் பதவி ஏற்பதற்கு முந்தைய தினம் இஸ்ரேல் படைகள் வாபஸ் வாங்கப்பட்டதையும் கவனிக்க வேண்டும்!'' என்றார்கள்.

22 வீழ்ச்சியா? அல்லது 23 வளர்ச்சியா? இதுதான் உலகம் முழுக்க இருக்கிற பிரபாகரன் நேசர்களின் இப்போதைய கேள்வி!

- இரா.சரவணன்

விகடன்



Comments