ஜனவரி 30 இல் கனடிய தமிழ்ச் சமூகத்தால் மாபெரும் மனித சங்கிலி

வன்னிப் பேரவலத்தை அம்பலப்படுத்த நாளை கனடிய தமிழ்ச் சமூகத்தினரால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக கனடிய தமிழ்ச் சமூகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா கொடூர அரசு வன்னியில் எங்கள் மக்களை அகதிகளாக்கி வகை தொகையின்றிக் கொண்டு குவித்து வருகின்றது.

அகதிகளுக்கான பாதுகாப்பு வலயம் என்ற மகிந்த அரசின் மக்கள் தங்கிடங்கள், அவர்களின் கொலைக்களமாக ஆக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் எழுத்துக்களால் விபரிக்க முடியாத மனிதப் பேரவலத்துள் எமது உறவுகள் சுமார் நான்கு இலட்சம் பேர் சிக்கியுள்ளனர்.

இவர்களின் அவல நிலையை வெளிக்கொணரவும் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க அனைத்துலகத்தை நிர்ப்பந்திக்கவும் கனடிய தமிழர் சமூகத்தினால் மாபெரும் மனிதச் சங்கிலிப் பேரெழுச்சி நாளை வெள்ளிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கனடிய தமிழர்கள் பல்லாயிரமாகவும் இலட்சமாகவும் கூடி எமது பலத்தைக் காட்டவேண்டிய காலம் இது.

எனவே அனைத்து தமிழ் வியாபார நிலையங்களையும் அன்றைய நாள் மூடுவதோடு மாணவர்களும், தொழிலக பணியாளர்கள் மற்றும் சகல அலுவலர்களும் அன்று விடுப்பு எடுத்து எல்லோரும் ஒன்றாக திரண்டெழுவோம்!

எமது வியாபார நிலையங்களிலும் வாகனங்களிலும் கறுப்புக்கொடிகளைப் பறக்க விடுவோம்!

ரொறன்ரோவில் மனித சங்கிலி நடைபெறும் இடம்:

ரொறன்ரோ நகரின் மத்தியில் உள்ள யூனியன் சப்வேயை மைப்படுத்தி

சென்.ஜோர்ஜ் சப்வே வரை செல்லும் மஞ்சள் நிற சப்வே வீதிகள்.

நேரம்: பிற்பகல் 12:00 மணியில் இருந்து பிற்பகல் 6:00 மணி வரை

ஜனவரி 30 "நாம் தமிழர்! நாளாகட்டும்!"

புலத்தின் பலமே களத்தின் வளம்! என்று கனடிய தமிழ்ச் சமூகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments