அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் இராணுவத் தாக்குதல்கள் வேதனை அளிக்கிறது - தலாய் லாமா

சிறிலங்காவில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் இராணுவத் தாக்குதல்கள் வேதனை அளிக்கிறது என திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணப்பட வேண்டும். இலங்கைக்கு என்னால் செல்லமுடியாது. நோபல் பரிசு பெற்றவர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கும் மாநாட்டில் என் சார்பில் ஒரு பிரதிநிதி சென்று இப்பிரச்சினை குறித்து விவாதிப்பார்.

வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், இலங்கை சென்று வந்துள்ளார். டில்லி சென்றவுடன் அவரை சந்தித்து இலங்கைப் பிரச்சினை குறித்து பேச உள்ளேன். எங்களுடைய போராட்டம் திபெத்தை தனியாகப் பிரிப்பது கிடையாது. அங்கு வசிக்கும் மக்களுக்கு பூரணமான சுயாட்சி வேண்டும். நிச்சயமாக என்றாவது ஒருநாள் திபெத் சுயாட்சி பெற்ற நாடாக மாறும் எனத் தெரிவித்தார்.



Comments