சர்வதேச சமூகத்தின் குத்துக்கரணங்களும் ஏற்படப்போகும் உக்கிர மோதல்களும்

கிளிநொச்சி மற்றும் பரந்தன் சந்தி பகுதிகளை இலங்கை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலும், அனைத்துலக மட்டத்திலும் பாரிய பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தென்னிலங்கையைப் பொறுத்தவரையிலும் சமாதானம் என்ற பதத்திற்குள் ஒளிந்திருந்த சில அரசியல் ஆய்வாளர்களும், செயற்பாட்டாளர்களும்கூட போரின் பக்கம் தாவியுள்ளனர். அதற்கு அப்பால் அனைத்துலக சமூகத்தின் முக்கிய கதாபாத்திரங்களான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பிராந்திய வல்லரசாக தன்னை தக்கவைக்க முயலும் இந்தியாவும் அமைதியும் அரசியல் தீர்வும் என உதட்டளவில் பேசிய போதும் அதன் உள்ளத்தின் இருக்கைகளை தற்போது வெளிப்படுத்தியுள்ளது.சமபலம் கொண்ட நிலையில் பேசப்படும் அமைதி பேச்சுக்களே நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வைத் தரும் என பால்கன் வளைகுடா போரின் போது கொள்கைகளை வரைந்த மேற்குலகம், இலங்கை விடயத்தில் அதன் மறுதலையான கொள்கைகளைத் தான் கடைப்பிடித்து வந்துள்ளது.

எனினும் 70 மில்லியன் தமிழக மக்களின் ஆதரவும், உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் மக்களினதும் ஆதரவுகளும் ஒருமித்த குரலில் ஒன்றிணைந்து வருவது தமிழ் மக்களுக்கான தற்போதைய பலம்.இதேவேளை வடக்கு களமுனைகளை பொறுத்தவரையில் 58 ஆவது படையணியும், 57 ஆவது படையணியும் கிளிநொச்சி நகர் பகுதி மற்றும் பரந்தன் சந்திகளை கைப்பற்றிய பின்னர் தற்போது பரந்தன் சந்திக்கு கிழக்காக ஏ35 வீதியூடான ஒரு நகர்வை முனைப்புடன் 58 ஆவது படையணி மேற்கொண்டு வருகின்றது. இந்த இரு படையணிகளின் முக்கியத்துவம் கருதி தற்போது 58 ஆவது படையணியுடன் மேலும் ஒரு பிரிகேட் இணைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ35 பாதையூடாக நகர்வதன் மூலம் வன்னியின் கிழக்கு பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கும், முகமாலை களமுனைகளில் உள்ள விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கும் இடையிலான தொடர்புகளை துண்டிக்க படைத்தரப்பு முயன்று வந்தது.இதன் மூலம் இரு பெட்டி வடிவ முற்றுகைகளை மேற்கொண்டு முதலில் முகமாலை களமுனைகளில் உள்ள விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கு அதிக சேதங்களை ஏற்படுத்துவது படைத்தரப்பின் நோக்கம். இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் தொடர்கின்ற போதும், இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் பரந்தன் சந்திக்கு கிழக்காக 5 கி.மீ தொலைவில் உள்ள முரசுமோட்டை பகுதியை கைப்பற்றியுள்ளதுடன், பரந்தன் சந்திக்கு வடக்காக உள்ள குறிஞ்சாத்தீவையும் கைப்பற்றியுள்ளதாகவும் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் கிளாலி முன்னரங்கில் இருந்து நகர்ந்த 53 ஆவது படையணியின் 1 மற்றும் 5 ஆவது விஜயபா றெஜிமென்ட், 5ஆவது கெமுனுவோச் பற்றலியன் மற்றும் 1ஆவது கஜபா றெஜிமென்ட் பற்றாலியன் இராணுவத்தினர் பளை பகுதியை வியாழக்கிழமை காலை கைப்பற்றியுள்ளதாகவும், 55 ஆவது படையணியின் 6 ஆவது இலகுகாலாட்படை, 7 ஆவது மற்றும் 8 ஆவது விஜயபா றெஜிமென்ட, 4 ஆவது கெமுனுவோச் ஆகிய பற்றாலியன்கள் சோரன்பற்று பகுதியை அன்று மாலை கைப்பற்றியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சோரன்பற்று ஆனையிறவில் இருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு விடுதலைப்புலிகளின் 122 மி.மீ. பீரங்கி நிலைகள் இருந்ததாக முன்னர் படைத்தரப்பு தெரிவித்து வந்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

சோரன் பற்றுக்கு அடுத்து இயக்கச்சி அதன் பின்னர் ஆனையிறவு என்பன படையினாரின் இலக்குகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுரை அச்சிற்கு செல்லும் வேளையில் இராணுவம் ஆனையிறவிற்கும் சென்றிருக்கலாம்.ஆனால், பூநகரி மற்றும் பரந்தன் கிளிநொச்சி என படையினர் பரந்து நிற்கும் நிலையில் ஆனையிறவு யாழ்.குடாநாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. படையினரின் நிலையிடங்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது நகர்வுத் திறன் என்பவற்றை பொறுத்தே சில இடங்களின் கேந்திர முக்கியத்துவங்கள் கணிக்கப்படுவதுண்டு.

இதனிடையே இராணுவத்தின் 58 மற்றும் 57 ஆவது படையணிகள் பரந்தன் சந்தியில் இருந்து கிழக்காக முன்நகர்ந்து விடுதலைப்புலிகளின் படையணிகளை இரு பெரிய பெட்டிவடிவ முற்றுகைக்குள் கொண்டுவரும் திட்டத்துடன் நகர்வை ஆரம்பித்தபோது அதனை முறியடிக்கும் தாக்குதல்களை மேற்கொண்ட விடுதலைப்புலிகள் மறுபுறம் கிளாலி முகமாலை நாகர்கோவில் களமுனைகளில் உள்ள தமது படையணிகளையும், கனரக ஆயுத தளபாடங்களையும் பின்நோக்கி நகர்த்திவிட்டதாக படைத்தரப்பை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்குடாநாட்டில் நிலைகொண்டுள்ள 53 மற்றும் 55 ஆவது படையணிகளையும், தற்போது வன்னி களமுனையில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 56, 57, 58 டிவிசன்களையும் மற்றும் நடவடிக்கைப் படையணி 1, 2, 3, 4 மற்றும் 5 ஆகியவற்றுடன் இணைத்து ஏறத்தாழ 10 டிவிசன்களை ஒன்றாக களமிறக்கி வன்னியின் கிழக்கு பகுதியை முற்றுகையிடுவதே அவர்களின் திட்டம்.யாழ். குடாநாட்டின் பாதுகாப்புக்கு 51 மற்றும் 52 ஆவது படையணிகள் நிறுத்தப்படுவதுடன், வன்னியின் மேற்குப்புற பாதுகாப்பிற்கு 21, 22 மற்றும் 61 ஆவது படையணிகளுடன் கடற்படையினரும், ஊர்காவல் படையினரும் நிறுத்தப்படலாம்.எதிர்வரும் சமர் இது வரை நடைபெற்ற ஈழப்போர்களில் நடைபெற்ற சமர்களை விட மிகவும் உக்கிரம் வாய்ந்ததாக இருக்கப்போகின்றது.

அதாவது இந்த படையணிகளின் வியூகத்தை உடைக்கும் வலிந்த சமர் ஒன்று அவர்களுக்கு முன்னால் உள்ளது. எனினும் 1995 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 80 பற்றாலியன் இராணுவத்தினரை கொண்டு யாழ்.குடாநாட்டின் பாதுகாப்புக்களை படைத்தரப்பு பேணிவந்தது.இந்த நிலையில் 100 பற்றாலியன் இராணுவத்தினரை கொண்டு கிழக்கு வன்னி மற்றும் முல்லைத்தீவு நோக்கிய முற்றுகைச்சமருக்கு படைத்தரப்பு தயாராகி வருகின்றது. யாழ். குடாநாடு மூன்று பக்கமும் நீரினால் சூழப்பட்ட இயற்கையான பாதுகாப்புக்களை தன்னகத்தே கொண்ட பகுதி. ஆனால் தற்போது படையினர் மோதலுக்கு தயாராகும் பகுதி அவ்வாறு இயற்கையான பாதுகாப்புக்களை கொண்டதல்ல.

இருந்தபோதும் விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான பின்நகர்வுகளை அரசாங்கம் தனக்கு சாதகமான பிரச்சாரமாக பயன்படுத்தி அதில் ஒரளவு வெற்றியையும் சந்தித்துள்ளது. இப்போர் படைத்துறை ரீதியாக முற்றாக நசுக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டதாக பெரும்பாலான சிங்கள மக்களும், அனைத்துலக சமூகமும் நம்புகின்றனர்.தென்னிலங்கையில் இருந்து தம்மை பேச்சுவார்த்தைகளின் ஆர்வலர்களாக காட்டிவந்த ஒரு சிலரும் தற்போது இராணுவத்தீர்வு தொடர்பான தமது மகிழ்ச்சிகளை மெல்ல மெல்ல வெளிக்காட்டி வருகின்றனர். ஆனையிறவை வீழ்த்துவது கடினம் என 1999 களில் ஆரூடம் கூறிவந்த அனைத்துலகின் படைத்துறை ஆய்வாளர்கள் தற்போது விடுதலைப்புலிகளின் கதை முடிந்ததாக ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே கடந்த வாரம் அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ளது. அரசின் இந்த தடை விடுதலைப்புலிகளை எந்தளவு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.எனினும் பேச்சுக்களின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என கூறிவந்த அனைத்துலகத்தின் கோரமான முகத்திரையை இந்த தடை மேலும் ஒரு தடவை கிழித்து எறிந்துள்ளது. இதேவேளை, பொருளாதார சீர்கேடுகள், ஊழல்கள் என்பவற்றை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் பல தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் கடந்த வாரம் எம்.ரீ.வி. தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளதுடன், கடந்த வியாழக்கிழமை சன்டே லீடர் வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் ஊடகங்களின் சுதந்திரமான இயக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.எதிர்காலத்தில் களமுனை தகவல்களுகளுக்கு அனைத்துல சமூகங்கள்கூட புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்கும் ஊடகங்களை சார்ந்து நிற்கும் நிலை ஏற்படலாம் என்றே தற்போது கூறமுடியும்.

-வேல்ஸிலிருந்து அருஷ்-


Comments