முல்லை கடற்பரப்பில் சீருடை அணியாத இந்திய கடற்படையினர்! திருமாவளவன்

முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம் என விடுதலைத் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலைக்கு இந்திய அரசே பொறுப்பு. முப்படைகளும் நேரடியாக இறங்கி, விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள்.

6.5 கோடி தமிழ் மக்களின் தலைவரான முதல்வர் கருணாநிதி இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இந்தியப் பிரதமரை நேரில் போய் சந்தித்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையிலும் மத்திய அரசு அதைப் பொருட்படுத்தாமல் உள்ளது

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை இது ஒரு பின்வாங்கலே தவிர பின்னடைவு அல்ல. ஏற்கனவே பலமுறை இப்படி நடந்துள்ளது. பின்னர் விடுதலைப் புலிகள் கொரில்லா போர் முறை மூலம் தாக்குதல் நடத்தி சிங்கள படைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள்.அதே போல் கிளிநொச்சியை மீண்டும் கைப்பற்றுவார்கள்.

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது வெறும் பகல் கனவு. அவரை உயிருடன் பிடிக்க முடியாது. தப்பித்து ஓடவும் மாட்டார். எதிரியிடம் மண்டியிடாமல் தமிழ் மக்களுக்காக இறுதிவரை போராடி உயிரை விடுவேன் என்று பிரபாகரனே கூறி இருக்கிறார். எனவே அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வீரப்ப மொய்லியின் அற்ப ஆசை நிறைவேறாது.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தேர்தல் அரசியலை மறந்து தமிழ் உணர்வு உள்ள அனைத்து கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டும் முயற்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட இருக்கிறது. இதற்காக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழ் தேசிய இயக்க தலைவர் நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுக ஏற்கனவே பல தியாகங்கள் செய்திருக்கிறது மேலும் ஆழ்ந்து சிந்தித்து தமிழ் இனத்தை பாதுகாக்க இந்த நெருக்கடியான சூழ்நிலையில் துணிச்சலான முடிவெடுக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



Comments