வன்னியில் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம், தேவிபுரம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்து அடைக்கலமடைந்து மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

பொதுமக்கள் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்ற சுதந்திரபுரம், தேவிபுரம், உடையார்கட்டுப் பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 12:30 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் திட்டமிட்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் தேவிபுரத்தில் 2 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இலக்கம் 7 பழைய கொலனி, மாங்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வாழ்ந்து வந்த வே.கிருபாகரன் (வயது 40)

மட்டுவிலில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த நந்தகுமார் (வயது 30)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.



க.சந்திரசேகரன் (வயது 38)

அ.சரஸ்வதி (வயது 59)

வேகானந்தன் (வயது 35)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரத்தில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில்

சுடரவன் (வயது 04)

கனிமொழி (வயது 08)

சிந்துஜா (வயது 07)

இ.துரைராசா (வயது 75)

மா.சிவகாமி (வயது 55)

பொன்னம்பலம் (வயது 74)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

உடையார்கட்டுப் பகுதியில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில்

செல்வறஞ்சனி (வயது 21) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3:00 மணிக்கும் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதேவேளை, விசுவமடு பகுதிகளில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் கொல்லப்பட்ட 3 பொதுமக்களின் உடலங்கள் விசுவமடுவில் உள்ள கிளிநொச்சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சிறீ பத்மாநாதன் சுபாகரன்,

இலக்கம் 64 டி10 உருத்திரபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் கணபதிப்பிள்ளை (வயது 72)

ஆகியோரின் உடலங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடலமும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வன்னிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறிலங்கா படையினரின் தாக்குதல்களின் போது இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

எறிகணைத் தாக்குதலில் காயமடைந்த 3 பேர் மன்னார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்போது ஜெசிந்தா (வயது 17) எனும் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மற்றையவரான கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த டெனிசியா என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கந்தபுரத்தைச் சேர்ந்த சர்வானந்தன் (வயது 27) என்பவர் மன்னார் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மன்னார் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.



Comments