தமிழீழத்தை அங்கீகரிக்கும்படி மத்திய அரசை தமிழக அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும்: இராமதாஸ் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் இராமதாஸ் அளித்த பேட்டியின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே என்று பேசினார்.

மத்திய அரசாங்கத்தை நீங்கள் நிர்ப்பந்தம் செய்து போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெப்ரவரி 15 ஆம் நாள், தி.மு.க. பொதுக்குழு கூட்டி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.

இடைப்பட்ட 3 வாரத்தில் இலங்கையில் தமிழர்கள் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாக போகிறார்களோ? ஏன் இந்த தாமதம். கலைஞர் உடனடியாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். நமது வேண்டுகோள் வேறு விதமாக இருக்க வேண்டும்.

மத்திய அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு பதிலாக ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

இது தி.மு.க.விற்கு புதிதல்ல. தனி ஈழம் தான் இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு என்று ஏற்கனவே தி.மு.க. அறிவித்து பல மாநாடுகள், பேரணிகள், நடத்தி இருக்கிறது. அந்த பழைய நிலைப்பாட்டையே தி.மு.க. மீண்டும் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கிற தீர்வு கிடைக்கும்.

இத்தகைய முடிவை தான் தி.மு.க. பொதுக்குழுவிலும் மேற்கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கையில் அந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்ட தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

ஏனெனில் இலங்கை அரசியல் சட்டத்தில் மாநிலங்களை கொண்ட கூட்டாட்சி என்பது இடம் பெறவில்லை. 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை சிங்களவர்கள் ஒருவர் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

தமிழர்களுக்கு சிறிதளவாவது அதிகாரம் வழங்கலாம் என்ற வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்ட போதெல்லாம் அடுத்து வந்த ஆட்சியாளர்களால் தூக்கி எறியப்பட்டுள்ளது.

எனவே ஒன்றுப்பட்ட இலங்கையில் அந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்குட்பட்டு தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமற்றது.

இப்படி கூறுகின்ற அமைப்புகளோடு நேருக்குநேர் விவாதிக்க தயார். இதர கட்சிகளும் இதனை உணர வேண்டும். இலங்கை ஒரு வித்தியாசமான நாடு அந்த நாட்டின் வரலாற்றை புரட்டி பார்த்தால் தனி ஈழம் கோரிக்கை நியாயமானது என்பது தெரியவரும்.

இந்தியாவில் வேறொரு இனத்தை சேர்ந்தவர்கள் அண்டை நாட்டில் பாதிக்கப்பட்டால் இந்தியா தலையிட்டு தனி நாடு உருவாக்கி தந்திருக்கும். உதாரணத்திற்கு கிழக்கு பாகிஸ்தான் பகுதியை வங்காள தேசம் என்ற நாடு உருவாக இந்திய தான் காரணம்.

எனவே அந்த நிலையை எடுக்க தமிழகத்தில் உள்ள கட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இதற்கு தமிழர்கள் முழு ஆதரவு தரவேண்டும் என்றார் அவர்.



Comments