திருமாவளவன் உண்ணாநிலை போராட்டம்: தமிழகத்தில் மீண்டும் பெரும் பரபரப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக திடீரென வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழகம் எங்கும் பெரும் எழுச்சி அலையைத் தோற்றுவித்திருப்பதாக சென்னையிருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கிளிநொச்சியை ஆக்கிரமித்து முல்லைத்தீவின் மீது பெரும் போரை ஏவி இருக்கும் சிங்கள இராணுவத்திற்கு எதிராக தமிழகம் கொந்தளித்தாலும் மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து மௌனம் காத்தே வருகின்றன.

மத்திய அரசில் பங்கேற்றிருக்கும் பா.ம.க., தி.மு.க போன்ற கட்சிகள் சோனியா அம்மையாருக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் மூலமும் நேரிலும் போர் நிறுத்தம் தொடர்பாக வைத்த கோரிக்கைகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக போராடுகின்றவர்களை கடுமையான சட்டத்தின் மூலம் ஒடுக்கியது மாநில அரசு.

இன்னொரு பக்கம் போருக்கு எதிராக பேசுவதே புலிகளுக்கு ஆதரவாக பேசுவது என்றூ காங்கிரஸ் கட்சியினர் தமிழகத் தமிழர்களின் உணர்வுகளை தங்களின் அரசியல் அற்பத்தனத்துக்கு பயன்படுத்தினர்.

இந்நிலையில் முல்லைத்தீவில் "அழிவின் விளிம்பில்" சிக்கியிருக்கும் தமது சொந்தக் குடிகளை காக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தமிழக கட்சிகளிடம் எழுந்துள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க தவிர்த்த ஏனைய கட்சிகள் மீண்டும் ஈழ மக்களுக்காகப் போராடத் தொடங்கியுள்ளன.

பெரியார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரத்துவர் இராமதாஸ் ஆகியோருடன் ஈழம் தொடர்பாக ஆலோசனை செய்து முதல்வரைச் சந்தித்த தொல். திருமாவளவன் ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி தான் சாகும் வரை உண்ணாநிலை இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரில்
நாளை புதன்கிழமை தொல். திருமாவளவன் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்குகின்றார்.

"அழிவின் விளிம்பில் ஐந்து லட்சம் தமிழர்கள். இனவெறிப் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்து." என்ற கோரிக்கையை முன்வைத்து தொல். திருமாவளவன் சாகும்வரை உண்ணாநிலை இருப்பதால் தமிழகம் எங்கும் மீண்டும் பரபரப்பாக இருக்கின்றது.



Comments