இலங்கை அரசின் புலிகள் இயக்கத்தின் மீதான தடை சொல்லும் சேதி என்ன ?

ஈழத் தமிழர் தமது அரசியல் கோரிக்கைகளை எப்போது உரத்துக் குரலை எழுப்பினாலும் சிங்களம் தடை போட்டு பொலிஸ், இராணுவ பலத்தைப் பயன்படுத்தி அடக்கி விடுவது வழமையான செயற்பாடாகும். 1961ல் தமிழ் மக்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சட்ட மறுப்பு, சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். 50 நாட்கள் தொடர்ந்து இரவு பகல் இடம் பெற்ற தமிழ் மக்களின் சத்தியாக்கிரகத்தை அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ அவசரகாலத் தடைச் சட்டத்தைப் போட்டு, தமிழரசுக் கட்சியைத் தடை செய்து தலைவர்கள் தொண்டர்கள் உட்பட 74 பேரைச் சிறைசெய்து விமான மூலம் எடுத்துப் போய் பனாகொடை இராணுவ முகமில் சிறை வைத்தார்.

1978 முதல் இன்று வரை பல்வேறு சிங்கள ஆட்சியாளர் 3 முறை தடை செய்திருந்தனர். இப்போது 4வது தடவையாக தடை செய்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஷ. சென்ற வருடமே தடை போட்டு விட ஆசைப்பட்டு அதற்கான கோரிக்கையை அமைச்சரவையிலும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப் பட்சமாக விலகிய சூட்டோடு தடை செய்தால் சர்வதேசக் கண்டனங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என ஆலோசனை கூறப்பட்டதால், அதனை இப்போது 2009ல் செய்துள்ளார். அரசுகளின் தடைகள் இதுவரை ஏற்படுத்திய சாதக பாதகம் என்ன என எவருமே நினைத்துப் பார்ப்பது கிடையாது. தலைவலிக்குத் தலையணையை மாற்றுவதுதான் வைத்தியம் என நினைக்கும் மனப் பான்மையின் வெளிப்பாடு என்றே கருதவேண்டியுள்ளது.

இலங்கையில் இதனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருக்குப் பலவித நெருக்கடிகளை நிச்சயம் ஏற்படுத்தும். ஏற்கனவே பல ஆவேசக் குரல்கள் அவரகளின் கடவுச் சீட்டு, குடியுரிமை பறித்தல் போன்ற மிரட்டிக் கொண்டிருக்கின்றன. அடுத்த தேர்தல் நெருங்கும் காலம் என்பதால் பலரின் பதவிக்காலம் அறுதியாக முடிவுபெறும் சாத்தியம் உள்ளது.

எனவே மிகச் சில மாதங்களே இவர்களுக்கு இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தக் குறுகிய காலத்தில் தமிழ் மக்களுக்கு மிக அதிகப் பயன் தரக் கூடிய நடவடிக்கையில் இறங்குவது காலத்தின் கட்டாயம் ஆகிறது. இலங்கையின் ஜனநாயக நடைமுறைகள் இனிமேலும் தமிழருக்கு எதுவித பயனும் தராது. எனவே இவர்கள் ஒட்டு மொத்தமாக இந்தியா தவிர்ந்த வெளிநாட்டுத் தூதர்களின் தயவைத் தேடிப் பெற்றுத் தஞ்சம் பெற வேண்டும். பின்னர் வெளிநாடுகளில் தமிழருக்கான ஒரு நிழல் அரசைப் பிரகடனப் படுத்தி ஐ.நா. ஆதரவுடன் கிழக்குத் தீமோரில் நடந்தது போன்ற ஒரு மக்கள் வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தனியரசை நிறுவ வேண்டும். இந்த ஒரு முறையில்தான் அநியாயமாகச் சாகடிக்கப் படும் எமது மக்களை நாம் காப்பாற்ற முடியும். இந்த வாக்கெடுப்பில் புலம் பெயர்ந்த மக்களும் வடக்கு கிழக்குத் தமிழரும் மட்டுமே வாக்களிப்பதாக இருத்தல் வேண்டும்.

இனி இந்தத் தடையால் தமிழர் தரப்புக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை கவனிப்பதும் அவசியமாகிறது. இன்று ஆளுக்கு ஆள் போர்

நிறுத்தம் பற்றிப் பேசியவர்கள், இனி அந்தப் பேச்சை எந்தக் கொம்பனும் எடுக்க முடியாதவாறு இந்தத் தடை வழி செய்து விட்டது. இந்த யுக்தி இந்தியாவுக்குச் சொந்தமானது. ராஜீவ் காந்தியின் கொலை விசாரணைகளில் பல மோசடிகள் நிகழ்திருப்பதை அண்மைக் காலச் செய்திகளும் உறுதி செய்கின்றன. கடைசியாக இந்த வழக்கின் 26வது குற்றவாளி ஆக்கப்பட்டு சிறையிலிருந்து மீண்டவரான பெங்களுர் ரங்கநாத்தின் கூற்றுக்களில் ராஜீவ் காந்தி கொலையில் புலிகள் இயக்கம் வேண்டும் என்றே தொடர்பு படுத்தப்பட்டிருப்பது உறுதிபடத் தெரிகிறது.

ராஜீவ் கொலை விசாரணைகள் தொடங்கும் முன்னரே புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுவிட்டது. அதனால் அவர்களோ அல்லது அவர்கள் சார்பில் எந்த ஒரு சட்டவாதியோ எதிர்வாதம் தொடுக்க முடியாதபடி நீதி விசாரணை முடமாக்கப்பட்டுவிட்டது. தொடர்ச்சியாக 2 வருடத்துக்கு ஒரு முறையாக புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடித்து வரப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அரசு தரப்புச் சாட்சியங்கள் மறுப்புக்கு உள்ளாகாத நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை பற்றிய விசாரணை இன்றியே அவை உண்மை என ஏற்றுக் கொள்ளப்பட்டு புலிகளைத் தடைசெய்யும் தீர்ப்புகள் கடந்த 17 வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு தடை செய்யப்பட்ட அமைப்புடன் பேச முடியாது என்ற காரணம்காட்டி புலிகளை இந்திய அரசு ஒதுக்குவதற்கு வேறு காரணங்களும் உள்ளன. அதில் ஒன்று சிங்கள அரசுகளுக்குச் சாமரம் வீசிச் சலுகை பெறுவது.

தமிழ் மக்களின்; சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய நிரந்தரமான அரசியல், மற்றும் பூர்வீக தாயகம் போன்ற திம்புப் பேச்சு வார்த்தைகளில் எல்லாத் தமிழ் அமைப்புகளாலும் முன்வைக்கப் பட்ட கோரிக்கைகளில் எள்ளளவும் விட்டுக் கொடுக்க புலிகள் இயக்கம் ஒருபோதும் இணங்காது என்பதே அந்தக் காரணம் ஆகும். பேச்சுக்குக் கூப்பிட்டு விட்டு பின்னர் தலையில் அடித்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை.

இந்திய அரசியலை - றோ மூலமாக - 3 வீதமே உள்ள இந்தியப் பிராமணியம் தனது கைக்குள் வைத்திருக்கிறது. அதன் வரலாற்றில் இதுவரை இருந்த 17 தலைவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது தெரிய வருகிறது. வெளியுறவுத் துறைச் செயலர்களில் தமிழர் இருப்பதாகச் சான்றுகளும் இல்லை. தமிழக ஆளுநர் கூட ஒரு தமிழராக இல்லாது இருப்பது தமிழர் பற்றிய இந்திய மத்திய ஆட்சியாளரின் மனப்பான்மையும் - இலங்கையில் சிங்கள அரசுகளின் மனப் பான்மையை ஒத்தே காணப்படுகிறது.

புலிகள் மீதான தடையைக் காட்டித் தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் மீளாச் சிறையில் அடைத்து அடக்க கலைஞரோ ஜெயலலிதாவோ ஒரு சிறிதும் தயங்கப் போவதில்லை. திருமங்கலம் தேர்தல் முடிவு வெளியானதும் மக்கள் மன நிலையை ஓரளவு அறிவது சாத்தியமாகும். புதிய உள்துறை அமைச்;சராக தமிழரும் காங்கிரஸ் வாதியமான திரு.ப.சிதம்பரம் நியமிக்கப் பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கும் அதனுடன் கூட்டு வைக்கும் கட்சிகளுக்கும் மிகப் பெரும் சாதகமாக அமையும். எதிர்க் கட்சியினரை - காவல்துறை சி.பி.ஐ. உளவுத் துறையின் ஆதரவுடன் முடக்கவும் அடக்கவும், அல்;லது தேர்தல் வன்முறைகள் மோசடிகள் செய்யப் பெருமளவு உதவும் நிலை இருக்கும்.

தமிழகத்தில் தமிழ்ப் பொது மக்களின் வெறுப்புக்கும் வேதனைக்கும் காரணமாகத் திகழும் காங்கிரஸ், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளும் மோசடி செய்யாமல் வெற்றி காண முடியாது. அதற்கு திரு.ப:சிதம்பரத்தின் செல்வாக்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும். இத்தருணத்தில் அ.இ.அ.தி.மு.க.தொண்டர்களும் தலைவி ஜெயலலிதாவும் முன்னர் திரு.ப.சிதம்பரத்தைத் தாக்கியதை நினைவிற் கொண்டால் நிலைமை அ.இ.அ.தி.மு.க.வுக்குச் சாதகமாக இருக்காது எனக் கருதலாம். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்;ற கவுண்டமணியின் கூற்றையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

சர்வதேச அளவில் இனி எந்த நாடும் புலிகளுடன் மகிந்த அரசைப் பேசக் கேட்கமுடியாது. இதுவே இந்தியாவின் விருப்பமும் கூட. இலங்கை இந்திய அரசுகளின் தாளத்துக்கு ஏற்ப ஆடி - புலிகளைத் தடை செய்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு நிரந்தர வாய்ப் பூட்டை இலங்கை அரசு இத்தடையின் மூலம் போட்டுவிட்டது. இவர்களின் ராஜதந்திரம்; இலங்கை அரசினால் ஒட்டு மொத்தமாக மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினையின் முழுச் சுமையும் இப்போது புலம்பெயர் ஈழத் தமிழரின் தலைமேல் விழுந்து கிடக்கிறது. எமது முதல் இலக்காக வன்னி மக்கள் மீதான இன அழிப்புப் போரை நிறுத்தச் செய்து ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பும் நிவாரணமும் எமது மக்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும்.

அதேவேளையில் அரசியல் விடுதலைக்கான அனைத்துலக சமூகத்தின் ஆதரவைத் திரட்டிச் சுதந்திர தமிழ் ஈழத்துக்கான ஐ.நா.வின் தலையீட்டைப் பெற வேண்டும். செய்ய முன்வருமா ஈழத் தமிழினம்?

-த.எதிர்மனசங்கம்-

சுவிஸ்முரசம்

Comments