இந்திய அரசின் துரோகத்தனத்தை வெளிப்படுத்த நாளை ஒன்று திரள்வீர்: வைகோ அழைப்பு

ஈழத் தமிழர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் துரோகத்தனத்தை வெளிப்படுத்த நாளை புதன்கிழமை ஒன்று திரளுமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் இராணுவத் தாக்குதல் குறித்து, அரசுக்கு எதிராகச் செய்திகள் தரும், அனைத்துலக செய்தியாளர்களும், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளும், இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்று சிங்கள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொக்கரித்து உள்ளான்.

ஆனால், அதைவிடக் கொடுமையாக, ஏன் அடால்ப் ஹிட்லருக்குப் பின் உலகத்தில் எந்த நாட்டு அரச தலைவரும் சொல்லத்துணியாத மிரட்டலை, இரத்தக்காட்டேரியைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அப்பாவித் தமிழர்களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க மாட்டோம் என்று கூறி உள்ளான்.

தமிழ் மக்களைக் கொன்று குவித்து, தமிழ் இனத்தையே அழித்துவிட அவன் திட்டமிட்டுத்தான், இந்த இனப் படுகொலை இராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறான் என்பது, இந்த அறிக்கையின் மூலம் ஒளிவு மறைவு இன்றி, வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.

நேற்று புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனைகளின் மீது இரண்டாவது முறையாக வான் குண்டுவீச்சு நடந்ததில், நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் குறிப்பாகக் குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

படுகாயமுற்றோர் எண்ணிக்கையை அறிய முடியவில்லை என்றும், இதனால் தாம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பதாகவும் இலங்கையில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் கேஸ்டெல்லா கூறி உள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில், மருத்துவமனை மீது இராணுவக் குண்டுவீச்சு நடந்து பலர் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி கோர்டன் வெய்ஸ் தன் கவலையை வெளியிட்டு உள்ளார்.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 5 ஆயிரம் ரொக்கட்டுக்களை சிறிலங்கா இராணுவம் வீசி இருக்கிறது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கோரக் காட்சிகளில், வயது முதிர்ந்தோர் இரண்டு கால்கள், இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதும், அவர்கள் கதறி அழுதுகொண்டே தங்கள் பக்கத்தில் இருந்த தங்கள் பிள்ளைகள் உடல்கள் சிதறிப் போனதைச் சொல்லும்போதும், சிறு குழந்தைகளும், இளைஞர்களும் கை கால்கள் துண்டிக்கப்பட்டுக் கிடப்பதையும் காணுகையில், கல்மனம் கொண்டோரும் கண்ணீர்விட்டுக் கதறுவர்.

சிறிலங்கா அரசு அரசு இராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், இருதரப்பும் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கூறி விட்டார்.

போர் நிறுத்தம் வேண்டும் என்று ஜேர்மனி அரசு கூறிவிட்டது; ஜப்பான் கூறி விட்டது; நோர்வே கூறி விட்டது; தெனாபிரிக்க அரசு அறிக்கையே தந்துவிட்டது.

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை தன் அறிக்கையில், இலங்கையில் தமிழ்ப் பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படும் கொடுமையைச் சுட்டிக்காட்டி, போர் நிறுத்தம் உடனடித் தேவை என்று அறிக்கை தந்து உள்ளார்.

தமிழர்கள் குடிமக்களாக இல்லாத இந்த நாடுகள் எல்லாம் போர்நிறுத்தம் வேண்டும் எனக் கேட்கையில், ஏழு கோடித் தமிழ் மக்களின் இதய தாகமான வேண்டுகோளை, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, இந்திய அரசு போர்நிறுத்தம் வேண்டும் என்று ஒப்புக்குக்கூட ஏன் கேட்கவில்லை? இதுதான் விஸ்வரூபம் எடுக்கும் கேள்வி.

இதன் பின்னால், ஒரு பெரிய மர்மம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்திய அரசு போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்டால், இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும், அவுஸ்திரேலியாவும் போர் நிறுத்தத்தை வற்புறுத்த ஆயத்தமாக உள்ளன.

அப்படி ஒரு போர்நிறுத்தம் இலங்கையில் வந்துவிடக்கூடாது; சிறிலங்கா அரசின் இராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு, விடுதலைப் புலிகளை எப்படியாவது அழித்துவிட வேண்டும்; இந்தப் போரில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை என்று இந்திய அரசு எண்ணுகிறது. அதனால்தான், நோர்வே வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், போர் நிறுத்தத்துக்கு இந்திய அரசு முயல வேண்டும் என்று வற்புறுத்துவதற்காக, இந்தியாவுக்கு வர முனைந்தபோது, அவர் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்று இந்திய அரசு தடுத்துவிட்டது.

இந்திய அரசின் இந்தத் துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக, நாளை பொது வேலை நிறுத்தத்தில் தமிழக மக்கள் அனைவரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

நமது சொந்தச் சகோதரர்கள், சகோதரிகள் துன்பத்தில் சாகிறபோது, நம் மனதில் படியும் வேதனையை எண்ணி, நாளை ஒருநாள் வேலைக்குச் செல்ல மாட்டோம்; கடைகளைத் திறக்க மாட்டோம்; வாகனங்களை ஓட்ட மாட்டோம் என்று நம் துயரத்தை வெளிப்படுத்தவும், இந்திய அரசின் துரோகத்தைக் கண்டிக்கவும், தமிழக மக்கள் முன்வர வேண்டுகிறேன்.

தமிழகம் கொந்தளிக்கிறது என்பதை உணர்த்துவதன் மூலமாவது, இந்திய அரசு துரோகத்தைத் தொடராமல், ஒப்புக்காவது போர் நிறுத்தம் என்று சொல்ல முன்வரட்டும். அதன்பின் உலக நாடுகள் அனைத்தும் தரும் அழுத்தத்தால், ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு ஏற்படட்டும்.

ஈழத் தமிழர்களுக்காக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்து உள்ள பொது வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக, முதலமைச்சரின் காவல்துறை, தேசப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று மிரட்டிப் பார்க்கிறது.

இந்திய அரசு செய்யும் துரோகத்தின் முழுப்பங்காளியான முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின், இரக்கம் அற்ற உத்தரவால் காவல்துறை வெளியிட்டுள்ள இந்த அச்சுறுத்தல் அறிக்கையைக் கண்டிக்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலில், கொலைவெறியாட்டம் ஆடிய ஆளுங்கட்சிக் குண்டர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்த காவல்துறை, மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் கொளுத்தப்பட்டு, மூன்று பேரைப் படுகொலை செய்த கொலைகாரப் பாவிகளுக்குச் சலாம் போடும் காவல்துறை, ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் உணர்வுள்ள தமிழர்கள் அஞ்சப் போவது இல்லை! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments