வன்னி மக்களை வெளியேற்ற அமெரிக்க வான், கடற் படை உஙயரதிகாரிகள் இலங்கை சென்றனர்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவந்து பல்வேறு வழிகளூடாக மனித உரிமை மீறல்களை புரிந்த வருகின்றது சிறிலங்கா. இந்நிலையில் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குவராத மக்களை எவ்வாறு தனது கட்டு்பபாட்டுப் பகுதிக்கு கொண்டு வருவதென தீவிரமாக முயற்சித்து வருகின்றது. இந்த முயற்சிக்க முதலில் இந்தியா உதவுவதற்கு முன் வந்திருந்தது.

ஏற்கனவே இனப்படுகொலைக்கு உடந்தையாக இந்தியா இருப்பதாக பலமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்னொரு பழியும் தம்மீது விழுந்துவிடும் என அஞ்சும் இந்தியா, அமெரிக்கா மற்றும் இணைத் தலைமைகள் நாடுகளின் ஊடாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முனைந்துள்ளது.

இந்த முயற்சிக்கு அமெரிக்கா உதவி வழங்கவுள்ளதாக சிறிலங்கா தற்போது கூறுகின்றது. யுத்த பிரதேச பொது மக்களை இடம் நகர்த்துவது குறித்த அமெரிக்காவின் திட்டத்திற்கு இணைத்தலைமை நாடுகள் பூரண ஆதரவை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் பசுபிக் படைப் பிரிவைச் சேர்ந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கக் கடற்படை மற்றும் வான் படை வளங்களைப் பயன்படுத்தி சிவிலியன்கள் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வட கிழக்கு கரையோரப் பகுதியில் சிக்கித் தவிக்கும் பொது மக்களைப் பத்திரமாக பாதுகாப்பதே முதன்மை நோக்கு என அமெரிக்க மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்படும் பொது மக்கள் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

அமெரிக்கப் படையினரின் இந்த மனிதாபிமான பணி குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தப் பணிகள் எப்போது நடைபெறும் எனத் தெரிவிக்க முடியாதென சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

பொது மக்களைப் பாதுகாப்பாக இடம் நகர்த்துவதற்கு மேலும் சில நாடுகளிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளக்கு எதிரான இறுதி யுத்தத்தை நடத்தவதற்கு விரும்பும் இந்தியா, அதற்கு அங்குள்ள மக்கள் இருப்பது தடையாக இருப்பதாகவும், அதனால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயல்வதாகவும், இணைத் தலைமை நாடுகளின் இந்த நடவடிக்கை இந்தியாவின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாகவும் இணையத் தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.

Comments