ஈழப்பிரச்சனை: லயோலா கல்லூரி சர்வே முடிவு

ஈழப்பிரச்சனை: தமிழக அரசியல் கட்சிகளின் குரல் ராஜபக்சே காதில் விழவில்லை: லயோலா கல்லூரி சர்வே முடிவு

ஈழத்தமிழர் விஷயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றிய சர்வே முடிவுகளை லயோலா கல்லூரி இன்று வெளியிட்டது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐ.நா. அமைத்துள்ள மருத்துவமனைகள், மக்கள் பாதுகாப்பு வலையங்கள், வன்னியில் தவிக்கும் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது.

ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடந்த சில மாதங்களாக சற்று அதிகமாக குரல் கொடுத்து வருகின்றன. கடந்த வாரத்தில் முத்துக்குமார் என்ற 26 வயதே ஆன வாலிபர் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்தார். இச்சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகம் நடத்திய ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றி சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த சர்வேயில் மக்கள் முன் ஈழப்பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை வைத்துள்ளனர்.

தமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசு:

இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது என்று 86.5 சதவிதம் பேரும், ராஜபக்சே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது என்று 10.5 சதவிதம் பேரும், தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது என்று 2.0 சதவிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு மீது கோபம்:

இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும்போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக 85.0 சதவிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் மீது 44.5 சதவிதம் பேரும், 25.5 சதவிதம் பேர் ராஜபக்சே அரசின் மீதும், பன்னாட்டுச் சமூகங்கள் மீது 12.0 சதவிகித பேரும், விடுதலைப்புலிகள் மீது 3.0 சதவிகித பேர் கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

உடனடி தீர்வு போர் நிறுத்தம்:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என 90 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனி ஈழமே நிரந்தரத் தீர்வு

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனி ஈழமே என்று 68 சதவிகித பேரும், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குச் சுயாட்சி என்று 21 சதவிகித பேரும், தமிழரைப் பௌத்த-சிங்களருக்குச் சமமாக அங்கீகரித்து இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று 4.5 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் களச் சூழல்

ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் ராஜபக்சே அரசின் மீது எந்தவிதச் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை என 91.5 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி உருவாகியுள்ளது என 43 சதவிகித பேரும், மத்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது என 32.5 சதவிகித பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஈழப்பிரச்சனையில் தமிழக அரசின் அணுகுமுறை

தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரசின் தயவு தேவைப்படுவதால், காங்கிரசைப் பகைத்துக்கொள்ளாமல் அனுசரித்துப் போகிறது என 70.5 சதவிகித பேரும், ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறது என 22 சதவிகித பேரும், இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் நிஜமாகவே குழப்பத்தில் உள்ளது என 4 சதவிகித பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழருக்காக உண்மையான அக்கறை கொண்ட கட்சி எதுவுமில்லை

இலங்கைத் தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள தமிழகக் கட்சி எதுவுமில்லை, எல்லாமே தேர்தல் அரசியலே செய்கின்றன என 52 சதவிதப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அக்கறையுள்ள குறிப்பிட்ட கட்சிகளைப் பொருத்த வரையில், தமிழர் தேசிய இயக்கம் 12.0, மதிமுக 9.5, விடுதலைச் சிறுத்தைகள் 6.5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5.0, திமுக 4.0, பாமக 3.5, காங்கிரஸ் 2.5, அதிமுக 2.0 தேமுதிக 1.0 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1.0.

Comments