14 வயது இந்தியத் தமிழ் சிறுவனின் வேண்டுகோள்: பகவத் கீதைமேல் கைவைத்துச் சொல்லுங்களேன்

இந்தியப் பத்திரிகைகளுக்கு அதாவது, தமிழ், ஆங்கில, மாநில, மாவட்டப் பத்திரிகைகளுக்கு புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் சார்பாக இவ் இந்தியச் சிறுவனின் வேண்டுகோள். ஏன்?

நீங்கள் உங்கள் பத்திரிகைகளில் ஈழத்தமிழர்களின் அவலங்களை, இன அழிப்பை, ஆதரங்களுடன், நிழல் படத்துடன், நெறி சார்ந்து, நடுநிலைமையுடன் முதற்பக்கத்தில் பிரசுரிக்கக்கூடாது?

கிசு கிசுவிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அந்தப் பிஞ்சுகளுக்காகவாவது

முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதா?

அல்லது உள்பக்கத்திலாவது போடக்கூடாதா? ஏன்?

உங்களை உள்ளே போட்டுவிடுவார்களா? என்போன்ற சிறுவர்கள் காயம் பட்டும், அம்மா, அப்பா இல்லாத அனாதைகளாக இருப்பதைப் பார்த்து மிகவும் வார்த்தைகளால் சொல்லொணாத் துயர் அடைகிறேன். என் சிரம் தாழ்த்தி, கைகூப்பி உங்களை வேண்டுகிறேன். நான் இதுநாள்வரை இப்படி யாரையும் கேட்டதில்லை, ஆனால், அவர்களுக்காக என்போன்ற சிறுவர்கள் சார்பாகக் கேட்கிறேன் நம்பிக்கையுடன் செவி சாய்ப்பீர்கள் என.

ஏன் மக்கள் அங்கு படும் இன்னல்களை, அவச்சாவில் அழிவதை, கோரமாக, அனாதையாக, பிணமாகவும், படுகாயமடைந்தும், உதவியற்ற அந்த ஆதரவற்ற, அனாதையான மக்களுக்காக மனிதாபமான முறையில் குரல் கொடுக்க மனமே வரவில்லையா?

நீங்கள் மனிதர்களா? மாக்களா?

போர் விதிகளுக்கு உட்பட்டுப், போராடுபவர்களைக் கொல். வயோதிபர்கள், தாய்மார், கர்ப்பிணிகள், குழந்தைகள், என்போன்ற சிறுவர்களைக் கொன்று குவிக்காதே என யார் கூக்குரல் எழுப்புவர்?

எங்கே போய்விட்டது பத்திரிகைத் தர்மம்?

அப்போ பிஞ்சுப் பாலகனும், என்போன்றோரும் புலிகளா?

என நீங்கள் குரல் எழுப்பியிருக்கக்கூடாதா?

பகவத் கீதைமேல் கைவைத்துச் சொல்லுங்களேன்.

நான் ஏன் உங்கள் நெஞ்சுமேல் கைவைத்து, எனக் கேட்கவில்லைத் தெரியுமா? உங்களுக்கு நெஞ்சு, இதயம், மனம் என எதாவது இருந்தால் தானே!

நீங்கள் கேட்கலாம் எல்லாத் தமிழ் இணையத் தளங்களும் ஈழச் செய்திகளைத்தானே வெளியிடுகின்றன என. ஆனால், இந்தியாவில் அதிகமாக மேல்மட்டத்தினரும், கொஞ்சமாக நடுத்தர வர்க்கத்தினரும் தானே, இணையத்தளவலைத் தொடர்பு வைத்துள்ளனர். அதனால் ஈழச் செய்திகள் எவ்வாறு, நடுத்தர, பாமர மக்களைச் சென்றடையும். அவர்களும் இந்தச் செய்திகளைப் படிக்க வேண்டாமா? அதர்மத்தைக் கண்டு முதலில் கண்ணீர் விடுபவர்களே அவர்கள்தான்.

ஆம், அவர்கள் ஒவ்வொருவரும் ஈழமக்களுக்காகப் பிரார்த்தனையோ, போராட்டமோ செய்தால் நிற்சயம் ஈழமக்களைச் சீக்கிரம் இன அழிப்பிலிருந்து, அழிவிலிருந்து காப்பாற்றமுடியும். முன்னாள் முதல்வர் அமரர் எம் ஜீ ஆர் அவர்களைப் பிழைக்க வைத்ததே அந்த மக்களின் பிரார்த்தனை தான் என, என் தாயார் அடிக்கடி கூறுவார்.

கீழ்க்கண்ட இணைப்பைப் பாருங்கள்.

http://www.tamilkathir.com/news/1279/58//d,view_video.aspx

உங்கள் மனம் இரத்தக் கண்ணீர் வடிக்கவில்லையா?

ஐயோ! கடவுளே! எங்குள்ளாய் என் வயதையொத்த சிறுவன் குண்டடிபட்டு, சிதைந்த இரு கால்களையும், அவன் துடிப்பதையும் பாராயோ? மௌனம் வேண்டாம் சிறுவர்களே! நான் எனது பள்ளி சமய ஆசிரியரிடம் ஈழத்தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றிக் கலந்துரையாடியுள்ளேன், உங்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களிடம் காண்பியுங்கள். அது துரிதமாக நடைபெற வேண்டுமாயின், அனைத்து நாடுகளிலும் உள்ள சிறுவர்கள் பங்குபெற வேண்டும். மற்றும், உங்கள் பள்ளிப் பாடங்களுக்கான projects செய்யும்போது, எம் தமிழீழ சிறுவர்கள் படும் அவலங்களைப் பற்றியே முடிந்தவரை செய்யுங்கள்.

இந்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் முகங்களிலும், வீடுகளிலும் சோகத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. நான் காசாக் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுத்தேன், நம்மைக் காப்பாற்ற நாமே குரல் கொடுப்போம், அக்காள் ஒருவரின் தொடையில் துளைத்த வெடிக்காத ஆர்.பி.ஜி உந்துகணை ஒன்றை மிக வெற்றிகரமாக அகற்றிய மருத்துவக் குழுவினருக்கு, என் வாழ்த்துக்கள், நாம் பிரமிக்கிறோம். நீங்கள் வெள்ளை நிறத்தினராய்ப் பிறந்திருந்தால் இது உலக அதிசயமாக மருத்துவ உலகம் வியந்திருக்கும், ஆனால், நீங்கள் ஈழத்தமிழர்கள் ஆயிற்றே.

புறக்கணிப்போம்.

புறக்கணிப்போம் என உறுதியெடுப்போம்.

1) இஸ்ரேல், ஈரான், சிங்கள, பாகிஸ்தானிய, யப்பானிய, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது -விமானப் போக்குவரத்து, கனரக, இலகுரக வாகனங்களை வாங்குவதை நிறுத்துவது, மலிவுப் பொருட்கள், துணிமணிகள்,மளிகைச் சாமான்கள், (எது அந் நாடுகளின் உற்பத்தியெனப் பொறித்திருந்தாலும்) என இவர்களின் தயாரிப்புகளை வாங்குவதைப் புறக்கணிப்போம். ஆகவே, புறக்கணிப்போம் என உறுதியெடுப்போம். எனது தாயார், அப்படியும் அந்நாட்டின் தயாரிப்புகள் அன்பளிப்பாக வந்தாலே திருப்பி அனுப்பிவிடுவார்.

2) ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்காத திரைப்படத்துறையினரின் (தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், ......) திரைப்படங்களை புலம்பெயர் நாடுகளுக்கு வரவழைத்துத் திரையிடுவதைத் தவிர்ப்போம், அதேவேளை, அவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதையும் புறக்கணிப்போம் எனப் புலம்பெயர் உறவுகள், உறுதி எடுப்போம். இதில் ஈழத்தமிழர் நலன் சார்ந்து செயற்படும் கலைஞர்கள் விதிவிலக்கு.

3) தமிழீழச் செய்திகளை, தமிழீழமக்கள் படும் அவஸ்தைகளை உலகத்திற்கு வெளிப்படுத்தத் தவறிய தமிழக நிறுவனங்களாகிய, சண் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி களைப் புறக்கணிப்போம். ஈழமக்கள் படும் துயரை ஒருபோதும் ஒளிபரப்பாத இவர்களுக்கு நாம் ஏன் டாலர் கணக்கில் பணத்தைக் கொடுக்கவேண்டும், கூறுங்களேன்?

ஒரு டிவிக்கு, மாதச் சந்தா குறைந்தது 10அமெரிக்க டாலர்கள் என வைத்துக் கொண்டால், சந்தாதாரர்கள் 50,000 பேர் எனில்,20 நாடுகளில் உள்ள மக்கள் பார்ப்பதாயின் ஒரு மாதம் 1,00,00,000 அமெரிக்க டாலர்கள், அது 40,00,00,000 இந்திய ரூபாய்கள். இது ஒவ்வொரு தொலைகாட்சி நிறுவனத்தினரினது மாத வருமானம். எண்ணிப்பாருங்கள், வயிறு பற்றி எரியவில்லையா?

எம் உறவுகள் அழிவதைத் தடுக்காதவர்களுக்கு, ஏன் நமது பணத்தைக் கொடுக்கவேண்டும்? அப்படியும் உங்களுக்குத் தொலைகாட்சி பார்க்கவேண்டுமானால்,

இருக்கவே இருக்கிறது இந்த இணையத்தளம்

www.isaitamil.com

ஆகவே நாம் வருகிற ஏப்ரல் மாதம் முதலாம் தேதி அன்று, எல்லோரும் சேர்ந்து அவ் இணைப்புகளைத் துண்டிப்போம். பின்பு நடப்பதைப் பாருங்கள்.

இனிமேலாவது அவர்களுக்கு மறைமுகமாகத் துணை புரிவதை நிறுத்துவோம். புறக்கணிப்போம் எனப் புலம்பெயர் உறவுகள், உறுதி எடுப்போம்

கருணாநிதித்தாத்தா! உங்களை மீண்டும், மீண்டும் அங்கு வேதனைப்படும் சிறுவர்கள் சார்பாக, உங்கள் இரு காலில் விழுந்து நமஸ்கரித்துக் கேட்கிறேன் போரை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள். உங்களால் முடியும். இந்தியச் சிறுவனான எனக்கே இவ்வளவு ஆதங்கமேனில், புலம்பெயர் தமிழீழச் சிறுவர்கள் மிகவும் கொதிப்புடன் உள்ளனர்.

கருணாநிதி தாத்தா, தன்னுடன் தொல்சு மாமாவை வைத்திருப்பதற்கு கணிசமான தொகையைப் பேரமாகக் கொடுத்திருப்பார். செல்வி ஜெயலலிதாவிடம், தொல்சுமாமா போய்விடக்கூடாது அல்லவா? அதனால் தொகை மிகவும் அதிகம் போலும், அதனால் தான் தொல்சுமாமாவும், தோற்கப் போவது காங்கிரசுக் கூட்டணி எனத் தெரிந்தும், பணத்திற்காகத்தான் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார் என பெரியோர்கள் வெளிப்படப் பேசுகின்றனர்.

ஆமாம், தொலசு மாமாவுக்கும் கட்சி நடத்த நாலு காசு வேண்டாமா? சொல்லுங்களேன்? தொல்சு மாமா! மனது வலிக்கிறது உங்களின் இச் செய்கையால், ஆனாலும், ஈழமக்களுக்காகக் குரல் கொடுத்ததினால் அவர்கள் மன்னித்தாலும், நான் இந்தியன் என்பதால் கூறுகிறேன், குற்றம் குற்றமே. தயவுசெய்து மக்கள் உங்கள் மீது வைத்த, வைத்திருக்கிற நம்பிக்கையை குறைவாக எடை போடாதீர்கள். ஈழமக்களின் "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி மேலும் இரணமாக்கிவிடாதீர்கள்".

நான் இவர்கள் அனைவரிடமும் கேட்பது உடனடிப் போர் நிறுத்தம் மற்றும், எனது கேள்விகளிற்குப் பதில், உறுதிமொழி.

"நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால், நெஞ்சு பொறுக்குதில்லையே!"

அந்த நாலு பேருக்கு நன்றி!

தமிழ்ஈழம் அதிவிரைவில் பிறக்க வழிவகுத்த அந்த நாலு பேருக்கு நன்றி,

மகிந்தன் சகோதரர்களுக்கும்.....

தமிழீழச் சகோதரர்கள் சுனாமி போன்றவர்கள்.

எப்படிஎனில் முதலில் உள்வாங்குதல். பின்பு ........

தமிழ்ஈழம் என்று எழுதுவதில் கூடத் தமிழீழத்தைப் பிரித்து விடாதீர்கள்!

போர் நிறுத்தத்தை எதிர்பார்த்து,

தமிழரின் தாகம் தமிழழீழத் தாயகம் என்று கூறி முடிக்கிறேன்.

- இப்படிக்கு,

மு. சு. சர்மா.

Comments