ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசிய குற்றம்: இயக்குனர் சீமான் ஜாமீனில் வர மறுப்பு; 15 நாள் காவல் நீட்டிப்பு

ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகம் பேசியதாக குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமான் ஜாமீனில் வர மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு மேலும் 15 நாள் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் புதுச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க பட்டுள்ளார்.

அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை சீமான் தலைமை குற்றவியல் நீதிபதி பொங்கியப்பன் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி, அவரிடம் ஜாமீன் கேட்டுள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு சீமான் அது பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சீமானுக்கு வருகிற 2-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாளையங்கோட்டை பொலிஸார் தொடர்ந்த வழக்கிலும் சீமானுக்கு நேற்றுடன் காவல் முடிந்தது. இதையடுத்து சீமானை கடலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பாளையங்கோட்டை 1-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) ஹேமா விசாரணை நடத்தி அவரது காவலை மேலும் 15 நாட்களுக்கு (ஏப்ரல் 3-ந்தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த விசாரணை 40 நிமிடம் நடந்தது. பின்னர் அவர் மீண்டும் புதுச்சேரி ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.

Comments