புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளின் ஊடாக பாரிய முன்னேற்ற தாக்குதல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த முன்னேற்ற முன்நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புத் தாக்குதல்களில் இதுவரை 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் படையணிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் மற்றும் வான்குண்டுகள் பல சிறிலங்கா படையினர் மத்தியிலேயே வீழ்ந்து வெடிப்பதாலும் படையினர் தரப்பில் கணிசமான அளவு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், களமுனையில் கடுமையான நெருக்கடிகளை சிறிலங்கா படையினர் எதிர்கொண்டுள்ளனர்.

Comments