சிறிலங்கா அரசுக்கு சார்பாக ஐ.நா. செயற்படுகின்றது: இன்னர் சிற்றி

வன்னியில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் கணக்கிடப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த போதும் கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் அங்கு கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை 9,924 என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு செயலகத்தினால் சேகரிக்க்ப்பட்ட தகவல்கள் வெளியில் கசிந்துள்ளன என்று இன்னர் சிற்றி ஊடகத்துறை (Inner City Press) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரி ஜோன் கோல்ம்ஸ் மற்றும் ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்கள் போன்றோர் தம்மிடம் வன்னியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் இல்லை என தெரிவித்திருந்தனர்.

ஆனால், அவர்களின் நடவடிக்கை டாபர் மற்றும் காசா பகுதிகளில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து வேறுபட்டதாகவே உள்ளது.

அதாவது, சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

வன்னிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் 2,683 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 7,241 பேர் படுகாயமடைந்துள்ளதான தகவல்கள் ஐ.நா.விடம் உள்ளன.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மைக்கேல் மொன்டாசிடம் எமது அமைப்பு வன்னியில் உயிரிழந்த மக்கள் தொடர்பாக கடந்த பெப்ரவரி 17 ஆம் நாள் வினவியிருந்தது.

ஆனால், அதற்கு அவர் நாம் மக்களை காப்பாற்ற முயற்சிக்கின்றோம்; உடலங்களை கணக்கிடவில்லை என தெரிவித்திருந்தார்.

வன்னியில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பாக ஐ.நா உண்மையான தகவல்களை கொண்டுள்ளது.

ஐ.நா.வின் தகவல்களின் பிரகாரம் அங்கு 150,000 தொடக்கம் 190,000 தங்கியுள்ளனர். ஆனால், அங்கு 70,000 பேர் தங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ள தகவல்களையே ஐ.நா. கூறி வருகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments