புதுமாத்தளன் மருத்துவமனை மீது அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் பேரவலம்

வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில்; 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தையும் அதனை அண்டிய பகுதிகள் மீதே இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதனால் ஏற்கனவே சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களும் சிசிக்சை பெறவந்த நோயாளர்களும் பெரும் அவலப்பட்டு சிதறியோடினர்.

மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காப்பகழிகளுக்குள் செல்ல முடிந்தவர்கள் காப்பகழிகளுக்குள்ளும் செல்ல முடியாதவர்கள் பெரும் அவலப்பட்ட நிலையில் அங்கும் இங்கும் சிதறியோடிய காட்சி பேரவலமாக இருந்தததாக 'புதினம்' செய்திளாளர் தெரிவிக்கின்றார்.

திட்டமிட்ட வகையில் சிறிலங்கா படையினர் நடத்திய இந்த எறிகணைத் தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்பு விவரங்கள் எதனையும் இதுவரை எம்மால் பெற முடியவில்லை.


Comments