"தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் தன்னாட்சி உரிமையையும் உலகு அங்கீகரிக்க வேண்டும்"

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளீட்டான சுயநிர்ணய கோட்பாட்டுக்கு அமைய, தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் அவர்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரகடனத்தை சுவிஸ் தமிழர் பேரவை முன்மொழிந்துள்ளது. சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. முன்றலில் சுவிஸ் தமிழர் பேரவையால் இன்று திங்கட்கிழமை (16.03.09) நடத்தப்பட்ட 'சாவிலும் எழுவோம்' மாபெரும் பேரணியின் இறுதியில் இப்பிரகடனம் படிக்கப்பட்டது.

பிரகடனத்தின் முழக்கங்களை மேடையில் இருந்து உரத்துச் சொல்ல மக்கள் அதனை மீள உரத்து ஒரே குரலாக ஒலித்தனர்.

பிரகடனத்தின் முழு விபரம் வருமாறு:

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலிலும் இந்த சுதந்திரச் சதுக்கத்திலும் கூடி நின்று உரிமைக்குரல் எழுப்பும் நாம்,

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை; அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டுமென்று உரிமைக் குரல் எழுப்புகின்றோம்.

அல்லலுறும் எமது மக்களின் வாழ்வுக்கு வகை தேடும் பணிகளை முன்னெடுக்காத அனைத்துலக சமூகத்தின் மீது நாம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதுடன் நரபலி கொல்லப்படும் எமது மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்துலக சமூகம் முன்வர வேண்டுமென்றும் வேண்டிக் கொள்கின்றோம்.

தற்போது இலங்கையில் நடைபெறுவது ஒரு இன அழிப்பு. ஆகவே, இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்மக்களின் இன்றைய வோண்டுகோளாகும்.

இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அந்த மக்களை சிறிலங்காவிலிருந்து பிரித்து விடுவதற்கு அனைத்துலக சமூகம் முன்வர வேண்டுமென்றும் வேண்டிக்கொள்கின்றோம்.

எமது மக்களின் கோரிக்கைகள் புறம் தள்ளப்பட்டு, எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் உதாசீனப்படுத்தப்பட்டு, ஈழத் தமிழினமும் அதற்கு தலைமை தாங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அனைத்துலக சமூகத்தினால் தவறாக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், அதை எதிர்த்து எமது உரிமைப் போர் தொடரும் என்பதையும் இந்த இடத்தில் உறுதியாகக் கூறி உரிமைக் குரல் எழுப்புகின்றோம்.

எங்கள் தாயகம் வெகு விரைவில் போர்ச் சூழலற்ற தாயகமாக உருவாக்கப்படுவதோடு ஐ.நா.வினுடைய உள்ளீட்டான சுயநிர்ணய கோட்பாட்டுக்கு அமைய தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் அவர்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டு; இன்றைய மார்ச் 16 ஆம் நாளை தமிழர்களின் மாட்சிமை மிக்க நாளாய் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments